Friday, May 1, 2009

சிவ பூஜையை விட சிறந்தது எது?

எழில் மிகு இயற்கை வளம் கொஞ்சும் அந்த ஊரில் ஒரு ஆசிரமம் இருந்தது.

ஸ்வாமி விஸ்வானந்தரை அனைவருக்கும் தெரியும். மக்களுக்கு உபதேசிப்பதும் , பக்தி ரசம் பொங்க பாடல்கள் பாடுவதும் அவரின் முக்கிய பணி. தனது சிஷ்யர்களுடன் ஆன்மீக பணி ஆற்றும் விஸ்வானந்தருக்கு சிவ பூஜை, சம்பிரதாயம் என தனது நித்திய கடமைகளில் மிகவும் கண்டிப்புடன் இருப்பார்.

காலை பிரம்ம முஹூர்த்ததில் எழுந்ததும் தனது பூஜையை ஆரம்பித்தார் என்றால் பகல் பத்து மணிவரை தொடரும். மேலும் மாலை சந்தியாகாலத்தில் மறுபடியும் பூஜை. அவரது சிஷ்யர்கள் அவருக்கு உதவியாக பூஜையில் ஈடுபடுவார்கள்.
பூஜைக்கு தேவையான மலர்கள் மற்றும் அபிஷேக பொருட்களை தயாரிப்பது, பூஜை செய்யும் இடத்தை சுத்தம் செய்வது என அனைவருக்கும் வேலை சரியாக இருக்கும்.


பூஜை துவங்கியதும் சிவலிங்கத்தை பார்த்து அவர் அமர்ந்து கொள்வார்.
கைகள் அவர் நீட்ட அந்த தருணத்திற்கு தேவையான பொருட்களை சிஷ்யர்கள் அவருக்கு தருவார்கள். தவறான பொருட்களை தந்தாலோ அல்லது காலதாமதம் செய்தாலோ அவ்வளவுதான். ருத்திர பூஜை செய்பவர், ருத்திரனாகவே மாறிவிடுவார். அந்த சிஷ்யனின் கதி அதோகதிதான்.



இன்னிலையில் தான் சில மாதங்களுக்கு முன் நாதன் அவரிடம் சிஷ்யனாக சேர்ந்திருந்தான். கடைநிலையில் தொண்டாற்றி வந்த நாதன் படிப்படியாக முன்னேறி அவரின் பூஜைகளுக்கு உதவி செய்ய துவங்கினான்.

நாதனின் எளிமை, பணிவு விஸ்வானந்தருக்கு பிடித்திருந்தது. தனது பூஜைக்கான பணியை பிறரைவிட நேர்த்தியான முறையில் நாதன் செய்ததும் இதற்கு ஒரு காரணம்.

ஒரு நாள் பூஜையை ஈடுபட்டிருந்தார் விஸ்வானந்தர். என்றும் இல்லாதது போல அன்று சில தடங்கலை உணர்ந்தார் விஸ்வானந்தர். பூஜையில் மனது ஈடுபடவில்லை. ஏதோ யோசனையில் இருந்தார். தன்னை பார்க்க வந்த ஒருவர் தரக்குறைவாக திட்டியது தான் முக்கிய காரணமாக இருந்தது. நேற்று முதல் அவருக்கு மனதில் இது ஓடிக்கொண்டே இருந்தது. பலர் முன்னில் தன்னை அவமானம் கொள்ள செய்ததாக நினைத்தார்.

திடிரென தனது உடலை யாரோ தொடுவதை உணர்ந்த விஸ்வானந்தர் சுயநினைவுக்கு வந்தார். எதிரே நாதன் நின்று கொண்டு, “குருவே பூஜையை தொடராமல் என்ன யோசனை? தயவு செய்து தொடருங்கள்” என்றான்.


என்றும் இல்லாத கோபம் விஸ்வானந்தரை சூழ்ந்தது. நித்திய பூஜைக்காக ஆச்சாரமாக இருக்கும் என்னை ஏன் தொட்டாய்? உனக்கு என்னை தொடும் அருகதையை யார் தந்தது? சிவ பூஜையை பற்றி உனக்கு தெரியுமா? இதை தான் சிவ பூஜையில் கரடி என்பார்கள். சரியான கரடி நீ. என் முன்னே நிற்காதே என கோபம் கொப்பளிக்க தத்தினார்.

அமைதியாக பார்த்த நாதன் கூறினான்.. “ குருவே ஆச்சாரம் என்பது ஏது?. நேற்று ஒருவன் சொன்ன கடும் சொல்லை மனதில் வைத்திருக்கிறீர்கள். உங்கள் உடல் ஆச்சாரம் பற்றி சொல்லிகிறீர்களா அல்லது மன ஆச்சாரம் பற்றி சொல்லுகிறீர்களா? உங்களுக்குள் இருக்கும் சிவனை பூஜித்திருந்தீர்கள் என்றால் அவனின் அவமான சொற்காள் உங்களுக்கனதல்ல சிவனுக்கானது என இருந்திருப்பீர்கள். யாராவது புகழ்ச்சியான சொல்லை கூறியிருந்தாலும் உங்கள் நிலை சமநிலை தவறி இருக்காது. சிவ சொல் இருக்க வேண்டிய மனதில் அவச்சொல் இருக்கலாமா?” என்றான்.


ஏற்கனவே கோபத்தில் இருந்த விஸ்வானந்தர் கோபத்தின் உச்சத்திற்கு சென்று, “தினமும் இரு வேளையும் சிவனை பூஜிக்கும் என்னை பார்த்து விமர்சிக்கும் தன்மை உனக்கு யார் அளித்தார்கள்? எனக்கு பக்தி போதவில்லை என கூறுகிறாயா? எனது மனதில் இருப்பதை நீ சொல்லுகிறாய் ஆச்சரியம் தான். பூஜை செய்யாத உனக்கு எப்படி இந்த ஆற்றல் வந்தது? நீ மாயக்காரனா?” என்றார்.

“நான் மாயன் அல்ல குருவே. பல மணி நேரம் பூஜை செய்ய வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. ஒவ்வொரு ஷணமும் குருவாகிய உங்களை எனது மனதில் பூஜிக்கிறேன் இதை விட வேறு பக்தி என்ன வேண்டும்? என்னை பொருத்தவரை இறைவனை காட்டிலும் குருவான நீங்களே எனக்கு முக்கியம். நீங்கள் சிவனை பூஜிக்க நான் உங்களை பூஜித்ததன் விளைவே இந்த விமர்சனம் தவறிருந்தால் மன்னிக்கவும்”
என்றான் நாதன்.

நாதனின் குருபக்தியை உணர்ந்த விஸ்வானந்தர் அவனை ஆரத்தழுவினார்.

-------------------ஓம்--------------------------


தினமும் நான்கு வேளை குளிப்பதாக சொல்லும் பக்திமான்களே தவளை நித்தமும் நீரில் இருக்கிறது அது உங்களை விட ஆச்சரமானதல்லவா? எனும் சிவவாக்கியரின் பாடல் நினைவுக்கு வருகிறது.

உள் பூஜை செய்யாமல் பிறர் பார்வைக்காக வெளிப்பூஜை செய்து என்ன பயன்?


மானச பூஜை செய்ததால் பூசலார் மனதில் குடிகொண்டான் ஈசன்.
அரசனுக்கு கிட்டாதது ஆண்டிக்கு கிட்டியது.


குரு பக்தி இருக்கும் பட்சத்தில் பிற பக்திகள் சூரிய வெளிச்சத்தில் இருக்கும் நட்சத்திரங்களே.

Monday, March 16, 2009

குரு தாசி


நகுலனுக்கு எந்த கவலையும் இல்லை. காலையில் எழுந்ததும் சுவையான உணவுகளை உண்டு, நறுமண பொருட்களால் தன்னை மிகவும் வாசனையானவன் ஆக்கி கொண்டு ஊர்சுற்ற கிளம்பி விடுவான்.

தனது தந்தை பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்து வைத்திருப்பதால் அவன் தொழில் மேல் நாட்டம் இல்லாமல் இருந்தான். தினமும் குடி மற்றும் பெண்கள் மேல் இச்சை என அவனின் கும்மாளம் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போனது.

நகுலனின் தந்தையும் இதை கண்டிக்கவில்லை. தனது ஒரே மகன் செய்யும் காரியம் அனைத்தும் அவருக்கு சரியாகவே பட்டது.

இவ்வாறு நகுலனின் வாழ்க்கை சென்றுகொண்டிருக்கும் பொழுது தான் அந்த ஊருக்கு வந்தாள் வேதயாணி.

வேதயாணி நல்ல அழகும் துடுக்குத்தனமும் கொண்ட பெண். அவள் ஒரு தாசியாக வாழ்ந்து வந்தாள்.

பல ஊருகளுக்கு நாடோடி போல பயணம் செய்து அத்தொழிலை செய்துவந்தாள். வேதயாணியை கண்டவுடன் நகுலனுக்கு தனது மனதை கட்டுபடுத்த முடியவில்லை. தினமும் பல பெண்களை காணும் அவனுக்கு வேதயாணி மேல் அளவுகடந்த ஈர்ப்பு ஏற்பட்டது.

வாரத்தில் சில நாட்கள் சென்று வேதயாணியை சந்தித்து வந்த நகுலன் பின்பு தினமும் சந்திக்க நினைக்கும் அளவுக்கு அவளிடம் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது.

ஒரு முறைக்கு மேல் பழகிய பெண்களை மீண்டும் சந்திக்க விரும்பாத நகுலனுக்கு தன்னிடம் ஏற்பட்ட மாற்றம் வியப்பாக இருந்தது.

ஊருக்கு எல்லையில் ஓடும் ஆற்றங்கறையின் மறுபுறம் இருக்கும் நந்தவனத்தில் தான் வேதயாணியின் வீடு இருந்தது.



தினமும் பரிசல்காரனின் உதவியுடன் ஆற்றைகடந்து சென்று நந்தவனத்தில் வேதயாணியுடன் செலவிடுவது நகுலனுக்கு வழக்கம்.வேதயாணியின் வீட்டின் முன் இருக்கும் செண்பகப்பூ மரத்தின் நிழலில் இருவரும் சந்தித்து உரையாடுவார்கள். இதற்கு முன் எந்த பெண்ணையும் அவன் இவ்வாறு

சென்று சந்தித்ததில்லை. தனது பண செருக்கால் அவர்களை தான் இருக்கும் இடத்திற்கு வர சொல்லி அதிகாரம் செய்வான். தானே சென்று வேதயாணியை சந்திக்கும் செயலை தனது நண்பர்கள் கிண்டல் செய்தாலும் கவலைபடவில்லை நகுலன்.


இவ்வாறு நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது...


ஒரு நாள் கனமழையின் காரணமாக ஊர் முழுவதும் வெள்ளப்பெருக்கு இருந்தது. மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழலில் இருந்தார்கள்.

காமமும்,மோகமும் ஊர்மக்கள் போல் அல்லவே, நகுலனை விட்டு வெளியே வர துடித்தது.

பெரும் மழையை பொருட்படுத்தாது வேதயாணியை காண புறப்பட்டான்.
கனமழையால் அற்றில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடியது.

பரிசல்காரர்கள் யாரும் இல்லாதது நகுலனுக்கு ஏமாற்றம் அளித்தது. ஆற்றை நீந்தி கடக்கலாம் என்றால் வேகம் அதிகம். நகுலனுக்கு சாதகமாக ஒரு சிறிய மரம் ஆற்றில் அடித்துக்கொண்டு வந்தது..


அதை பாய்ந்து பிடித்து கொண்டே, மறு கையால் நீந்தி ஆற்றைகடந்தான்.மறு கரையை அடைந்ததும் சிறிய மரத்தை கரைக்கு அருகில் போட்டுவிட்டு வேதயாணியின் வீட்டை பார்த்தான். வீட்டை சுற்றி நீர் தேங்கி இருந்தது.

வீட்டின் மேல் மாடத்தில் இருந்து நகுலனின் வருகையை பார்த்தவண்ணம் இருந்தாள் வேதயாணி.

மிகவும் வேகமாக வந்த நகுலனுக்கு வீட்டின் முன் தேங்கி இருந்த நீர் ஒரு தடையாக இருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தவன், செண்பக மரத்தில் இருந்த கயிற்றை பிடித்து நீரை தாண்டி அவளின் வீட்டு முற்றத்தை அடைந்தான்.

வேதயாணியை பார்க்கும் ஆவலுடன் அவளை நெருங்கினான்.

என்றும் புன்னகையுடன் வரவேற்கும் அவள் இன்று அவனிடத்தில் கேட்டாள்.

"காம சுகத்தில் என்ன இருக்கிறது?”

இது வரை எவரும் தன்னிடம் கேள்வி கேட்டதில்லை. தன்னிடம் ஒரு பெண் கேள்வி கேட்கிறாளே என கோபம் கொண்ட நகுலன்.

அதைவிட இந்த உலகின் என்ன சுகம் இருக்க முடியும்? என்றான்.

உன் கண்கள் காமத்தால் கட்டப்படிருக்கிறது, உனது மனம் அறியாமையால் சூழப்பட்டு இருக்கிறது என்றாள் வேதயாணி.

தாசியாக இருந்தவள் திடிரென வேதாந்தம் பேசுகிறாளே என அவளை ஏறிட்டான்.

பிறகு , “என்னை விட உலகில் இன்பம் துய்ப்பவன் யாரும் இல்லை. தெரியுமா உனக்கு” என்றான் நகுலன்.

அவனை தீர்க்கமாக பார்த்த வேதயாணி ”இருக்கவே முடியாது” என தீர்மானமாக சொன்னாள்.

அவனை திருப்பி ஆற்றின் கரையோரம் காண்பித்தாள்.

அதோ பார் நீ நீந்தி வந்தது மரம் அல்ல, ஒரு பிணம்.
அதை மரம் என நினைத்து ஆற்றை கடந்தாய்.

மரத்தில் இருந்த பாம்பை கயிறு என நினைத்து நீரை கடந்து இந்த வீட்டை அடைந்தாய்..

அப்பொழுது தான் கவனித்தான் நகுலன். அது ஒரு பிணம் இது ஒரு பாம்பு.

வேதயாணி தொடர்ந்தாள் .. “பிணத்திற்கும் மரத்திற்கும், பாம்புக்கும் கயிறுக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கும் நீ எப்படி உலகின் உயர் இன்பத்தை உணர்ந்தவனாவாய் ?”

தனது வாழ்க்கையில் இப்படிப்பட்ட
சூழலை சந்திக்காத நகுலன் தன்னில் நிலைகுழைந்து நின்றான்.

சில நிமிட மெளனத்திற்கு பிறகு வேதயாணியை பார்த்து கேட்டான்.

“உலகின் உயர் இன்பம் பெற என்ன செய்ய வேண்டும்?”

அவனது நிலை உணர்ந்த வேதயாணி “இரண்டு எழுத்து மந்திரத்தை மீண்டும் மீண்டும் உச்சரி. அது போதும்” என்றாள்.


சொன்ன
து மட்டுமல்லாமல் அவனது காதில் அதை உபதேசித்தாள்.

வேட்டைக்காரனை வால்மீகியாகிய மந்திரம்
நகுலனை ராமதாஸனாக்கியது.

தன்னை உணர்ந்து ...
உயர் இன்பன் அடைந்தான் ராமதாஸன்.



-------------------------------------------------------------------------

நமது உணர்வுகள் விழிப்புணர்வின் விரோதிகள். காமம் குரோதம் மற்றும் மாயை நம்மை முழுமயான செயல் நிலைக்கு இட்டுச் செல்லுவதில்லை.

மேற்கண்ட கதையை படிக்கும் பொழுது கூட “வேதயாணி” எனும் பெயரை ஒரு முறையேனும் “தேவயாணி” என உச்சரித்திருப்பீர்கள்.

உணர்வுகளின் தலையீட்டால் இந்த பிழை நேரக்கூடும்.

உங்கள் கண்கள், உணர்வு இவை ஓருங்கிணைந்து வேலை செய்தால் மட்டுமே விழிப்புணர்வில் இயங்க முடியும்.

குரு நிலை என்பது உருவாக்கபடுவதில்லை. இறைநிலை ஒருவருக்குள் புகுமபொழுது அவர் குருவாகிறார். அதனால் தாசி உபதேசிக்க முடியுமா என

மேற்கண்ட கதையில் உங்களுக்கு தோன்றினால் அது உங்களின் முழுமை நிலை இல்லை என்பதை காட்டும்.

தாசி குருவாகவில்லை. நகுலனை ராமதாசனாக்க குரு தாசியானாள் என்பதே உண்மை.

அதனால் தான் நான் அடிக்கடி சொல்லுவேன்...

குரு உன்னை எப்பொழுதும் பார்த்து கொண்டே இருக்கிறார்.
நீதான் அகமும்-புறமும் கண்கள் இல்லாமலேயே வாழ்கிறாய்.


Monday, February 9, 2009

ஆன்மீக சாதனை


குரு மரண படுக்கையில் இருந்தார்..

அருகில் அவரின் சீடன் கவலை தோய்ந்த முகத்துடன் காணப்பட்டான்.

குரு மெல்ல அவனை அழைத்து, “ சிஷ்யா.. ஏன் கவலைப்படுகிறாய்? உனக்காக நான் எப்பொழும் இருப்பேன். கலக்கம் அடையாதே...”

கலங்கிய கண்களுடன் சிஷ்யன் கூறினான்.. “குருதேவா... நீங்கள் கூறியபடி ஜாபம் தியானம் எல்லாம் செய்து வருகிறேன். ஆனால் ஆன்மீக உயர்நிலை அடையும் காலம் எப்பொழுது என தெரியவில்லை. எதுவரை எனது ஆன்மீக பயிற்சியை தொடர்வது. உங்கள் காலத்திற்கு பிறகு யாரிடம் நான் கேட்பது?”


அணையும் ஜோதி பிரகாசகமாக சுடர்விடும் என்பதை போல ஜோதிர்மயமான முகத்துடன் சிஷ்யனை பார்த்தார் குரு.. “கவலை கொள்ளாதே. இந்த கட்டிலுக்கு அடியில் ஓர் பெட்டி இருக்கிறது. அதன் உள்ளே உனக்கு பிற்காலத்தில் உபதேசிக்க வேண்டியதை வைத்திருக்கிறேன்...அது அனைத்து விஷயங்களையும் போதிக்கும். எனது உபதேசம் தேவைப்படும் பொழுது மட்டும் பெட்டியை திறந்து பார். எனது ஆசிகள்”...என கூறியபடி அவரின் ப்ராணன் உள்ளே அடங்கியது.


நாட்கள் சென்றன...

தனது ஆன்மீக சாதனையில் தனக்கு பலன் கிடைப்பதாக சிஷ்யனுக்கு தெரியவில்லை.. தியானம் , ஜபம் ஆகியவற்றை விட்டுவிடலாமா என எண்ணினான்..

குருவின் உபதேசத்தை கேட்க பெட்டியை திறந்தான்.


சிஷயன் ஞானம் அடைந்தான்..






நாட்கள் சென்றன...

சிஷ்யன் கூறிய கருத்துகளை மக்கள் ஏற்காமல் கலகம் செய்தனர்.

மீண்டும் குருவின் உபதேசத்தை கேட்க பெட்டியை திறந்தான்..

அதற்கு பின் வரும் காலத்தில் மக்கள் கருத்துக்களை ஏற்றுக்கொண்டனர்...





நாட்கள் சென்றன...

தனது இறுதி காலத்தை அடைந்தான்.. தனது சிஷ்யனை கூப்பிட்டு கூறினான்..

“எனது பிரிய சிஷ்யா.. எனது குரு எனக்கு அளித்த உபதேசத்தை உனக்கு அளிக்கிறேன். எனது உபதேசம் தேவையான பொழுது மட்டும் இந்த பெட்டியை திற. எனது உபதேசம் கிட்டும்.”

சிஷ்யனுக்கு சிஷ்யனான பரம சிஷ்யன்.. தனது ஆன்மீக சாதனையில் தோய்வு ஏற்பட்டது. குருவின் உபதேசம் அறிய பெட்டியை திறந்தான்..

அதில் எழுதி இருந்த வாசகம்...

“இன்னொரு முறை முயற்சி செய்”


-----------------------------------------------------------
சிஷ்யனுக்கு மட்டுமல்ல நமக்கும் ஆன்மீக சாதனையில் தோய்வு ஏற்படும் பொழுதும் இந்த உபதேசம் உதவும்..

குரு என்பவர் உபதேசிக்க மட்டுமே முடியும். ஆன்மீக சாதனையை தனி ஒரு மனிதன் செய்து உயர்வடைய வேண்டும்.

எளிமையாக சொல்ல வேண்டுமானால் குரு சமைத்து கொடுக்கலாம், ஏன் ஊட்டிகூட விடலாம். ஆனால் நாம் தான் ஜீரணிக்க வேண்டும்.


Friday, December 26, 2008

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

பூபாளம் இசைக்கும் காலை நேரம்....


சத்குரு விஷ்வ தீர்த்தர் தனது நித்திய பூஜையில் ஈடுபட்டிருந்தார். மங்கள வாத்தியம் முழங்க தீபாரதனை செய்தார் மூத்த சிஷ்யன் ஜகதீஷ்.

இறைவனின் சன்னிதானத்திலிருந்து படையல் செய்த பொருட்களை சிஷ்யர்கள் அனைவருக்கும் வழங்கினார்கள். அனைவரும் பக்திச் சுவையாலும் , பிரசாத சுவையாலும் மகிழ்ந்து கலைந்தனர்.

சத்குரு தனது ஆசனத்திலிருந்து எழுந்து தனது அறை நோக்கி நடக்க ஆரம்பித்தார். அவரின் கால்கள் நடந்தாலும் கண்கள் ஜகதீஷை பார்த்த வண்ணம் இருந்தது...

குருவின் தீர்க்கமான பார்வையை உணர்ந்த ஜகதீஷ் அவரின் பின்னால் நடக்க துவங்கினான்.

அறைக்குள் வந்ததும் ஜகதீஷை நோக்கி கேட்டார்... “ எனது பிரிய ஜகதீஷ் சில நாட்களாக உனது செயல்களில் ஓர் வித்தியாசம் இருந்ததை உணர்கிறேன். முன்பு நைவேதியம் செய்யும் பிரசாதத்தை அனைவருக்கும் வழங்குவதில் முனைப்பாக இருப்பாய் , ஆனால் இப்பொழுது ஒதுங்கி இருக்கிறாயே என்ன காரணம்?”

தனது நிலையை குரு இவ்வளவு உன்னிப்பாக கவனிப்பார் என எதிர்பார்க்காத ஜகதீஷ் தனது நிலையை கூற துவங்கினான்.. “ குருவே ஆசிரம வாழ்க்கை துவங்கிய பொழுது பக்தி பூர்வமாக இருந்தேன். நித்திய பூஜை, நைவேதியம் என அனைத்திலும் ஈடுபட்டேன். தற்சமயம் தெளிவு பெற்றேன். நாம் படைக்கும் நைவேதியதை இறைவன் அருந்துகிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறைவன் சாப்பிட்டால் நாம் பிறருக்கு எப்படி பிரசாதமாக வழங்க முடியும்? இது போன்ற தர்க்கம் எனக்குள் தோன்றியதால் என்னால் பிரசாதம் வழங்குவதில் ஈடுபட முடியவில்லை குருவே...”

அவனை ஊடுருவி பார்த்த குரு, “ ஜகதீஷ் உனது விருப்பபடியே செய். நமது வேதாந்த வகுப்புக்கு நேரமாகி விட்டது. வகுப்பறையை தயார் செய். சிறிது நேரத்தில் நானும் வருகிறேன்” என்றார்.


இறைவணக்கத்துடன் வகுப்பு துவங்கியது.. சென்ற வகுப்பில் புதிய பாடம் இன்று போதிக்கபடுவதாக குரு சொன்னதால் அனைவரும் ஆர்வமாக இருந்தனர்..

கால்கள் இரண்டையும் இணைத்து யோக முத்திரையில் அமர்ந்திருந்த சத்குருவை பார்க்க தக்‌ஷிணாமூர்த்தியை தரிசனம் செய்வதை போல இருந்தது.

அனைத்தும் பூர்ணமான வஸ்துவிலிருத்தே தோன்றியது என பொருள் கொண்ட “பூர்ணமிதம்” எனும் ஈஷாவாசிய உபநிஷத்தில் வரும் மந்திரத்தை விளக்கினார் குரு விஷ்வ தீர்த்தர்.

அனைத்து மாணவர்களும் மந்திரத்தை மனதில் உரு போட துவங்கினர். சிறிது நேரத்திற்கு பிறகு ஜகதீஷை சைகையால் அழைத்தார் விஷ்வ தீர்த்தர்.


குருவின் முன் பணிவுடன் வந்து வணங்கி நின்றான்.

“எனதருமை ஜகதீஷ், மந்திரத்தை மனதில் ஏற்றி கொண்டாயா? ,” என்றார்.

“முழுமையாக உள்வாங்கி கொண்டேன் குருவே”.

“எங்கே ஒரு முறை சொல் பார்ப்போம்”

கண்கள் மூடி மனதை ஒருநிலைப்படுத்தி கணீர் குரலில் கூற துவங்கினான்..” பூர்ண மித பூர்ண மிதம் ...” என கூறி முடித்தான் ஜகதீஷ்.

மெல்ல புன்சிரிப்புடன் குரு தொடர்ந்தார்.. “நீ சரியாக மனதில் உள் நிறுத்தியாதாக தெரியவில்லையே.. எங்கே உனது புத்தகத்தை காட்டு”

பதட்டம் அடைந்த ஜகதீஷ், புத்தகத்தை காண்பித்து கூறினான்.. “ குருவே தவறு இருந்தால் மன்னியுங்கள். ஆனால் நான் கூறியது அனைத்தும் இதில் இருப்பதை போலவே கூறினேன்...”

“ஜகதீஷ்.. இந்த புத்தகத்திலிருந்து படித்துதான் மனதில் உள்வாங்கினாயா?”.. என்றால் விஷ்வதீர்த்தர்.


மெல்ல தலையசைத்தான் ஜகதீஷ்..


சத்குரு தொடர்ந்தார்... “ இதிலிருந்து உள்வாங்கினாய் என்றால் மந்திரம் இதில் இருக்கிறதே? நீ உன் மூளையில் மந்திரத்தை ஏற்றி கொண்டால் புத்தகத்தில் இருக்க கூடாதல்லவா?”


குழப்பமடைந்தான் ஜகதீஷ்...


“எனது பிரிய ஜகதீஷ்.. உனது நினைவில் நின்ற மந்திரம் சூட்சம நிலையில் இருக்கிறது. புத்தகத்தில் இருக்கும் மந்திரம் ஸ்தூல வடிவம். இறைவன் சூட்சம நிலையில் இருப்பவன். இறைவனுக்கு படைக்கப்படுவது ஸ்தூல வடிவில் இருந்தாலும் அவன் சூட்சமமாகவே உற்கொள்கிறான்.
நீ உள்வாங்கிய பின் புத்தகத்தில் மந்திரம் அளவில் குறைந்துவிட்டதா? அது போலதான் இறைவன் உற்கொண்ட பிரசாதம் அளவில் குறையாமல் நாம் எல்லோரும் உண்கிறோம். ஸ்தூலமாக இருக்கும் நாம் ஸ்தூலமாகவும், சூட்சுமமாக இருக்கும் இறைவன் சூட்சுமமாகவும் நைவேதியத்தை உற்கொள்கிறோம். ”

வகுப்பில் இருக்கும் அனைவரும் இருவரின் சம்பாஷணை புரியாமல் இருக்க...ஜகதீஷின் முகத்தில் ஒளி தெரிந்தது.

தனது பக்தியற்ற தர்க்கம் செய்த அறியாமையை குருவிற்கு நைவித்தியம் செய்து முழுமையடைந்தான் ஜகதீஷ்.

Tuesday, November 11, 2008

எங்கே இருக்கு புதையல்....?

பேராசை பெருமாள்சாமியை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. வாழ்க்கையில் ஒவ்வொரு செயலும் தன்னக்கு பெரிய செல்வம் வரவேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுவது அவனது இயல்பு. தனது ஆசையால் சிறுக சிறுக பொருள் சேர்ப்பது அவனுக்கு சரியாக படவில்லை.


அடித்தால் ஒரே அடியில் பெரும் பணத்தை சம்பாதித்து அதை வைத்து வாழ்க்கை மேம்படுத்தவேண்டும் என முடிவெடுத்தான். ஜோதிடரிடம் சென்று ஜாதகத்தை கண்பித்து இவனது செல்வநிலையை முடிவுசெயலாம் ஜோதிடரை அணுகினான். அவனது ஜாதகம் சிறப்பாக இருக்கிறது என்றும் கூடிய விரைவில் பெருமாள் சாமிக்கு புதையல் கிடைக்கும் என்றும் ஜோதிடர் சொன்னார்.

காய்கறி கடையில் சில ரூபாய் மிச்சம் பிடித்தாலே சந்தோஷத்தில் இரவு தூங்கமாட்டன் பெருமாள் சாமி, இந்த லட்சணத்தில் ஜோதிடர் சொன்னது அவனுக்கு காதில் ரிங்காரம் அடித்துக்கொண்டே இருந்தது.

எப்படி புதையல் கிடைக்கும்? எங்கு இருக்கும்? அந்த புதையல் நமக்கு போதுமானதாக இருக்குமா என பல எண்ணங்கள் சிந்தனையில் வந்தவண்ணம் இருந்தது.

அந்த ஊரில் இருக்கும் ஓர் ஞானியை பார்த்து கேட்டால் அவர் தனக்கு உதவகூடும் என எண்ணினான். கண்களில் பேராசை மின்ன தன்முன் வந்து நிற்கும் பெருமாள் சாமியை பார்த்தார் ஞான குரு . "ஐயா எனக்கு புதையல் கிடைக்கும் என ஜோதிடர் சொன்னார். நீங்கள் தான் எனக்கு அந்த புதையல் கிடைக்க வழி சொல்ல வேண்டும்" என்றான் பெருமாள் சாமி.

பெருமாள் சாமியின் உண்மையான தேவையை உணர்ந்த ஞான குரு...புன்னகையுடன் பார்த்தார் பின்பு..." பெருமாள் சாமி , இந்த ஊரின் மேற்கு பகுதியில் இருக்கும் மலைக்கு அதிகாலையில் செல். சூரிய ஒளியில் உனது நிழலை கவனி. நிழலின் அளவு எங்கு முற்றிலும் குறைகிறதோ அங்கு புதையல் இருக்கிறது" இதை கேட்டதும் அவருக்கு நன்றி சொல்ல கூட தோன்றாமல் விரைவாக நடந்தான்.

அதிகாலையில் குளித்துவிட்டு பயபக்தியுடன் மேற்கு மழைக்கு சென்றான். மலையை பார்த்து நின்றான். பின்புறம் இருந்த சூரிய ஒளியால் நிழல் தெரிய துவங்கியது. நிழலை பின்தொடர்ந்தான். உச்சிவேளையில் நிழல் அவனது உடலில் ஐக்கியம் அடைந்து காணாமல் போனது.

காலை முதல் நிழலை பார்த்த வண்ணம் இருந்ததால் மனம் ஒருமுகப்பட்டு தனது உள்நிலையில் தெளிவான நிலையில் இருந்தான். முடிவாக பெருமாள் சாமி புதையல் தனக்குள்ளே இருக்கிறது என்பதை உணர்ந்தான்.

--------------------------ஓம்----------------------
தன்னுள் தேடாமல் எப்பொருளைவெளியே தேடினாலும் அது முடிவாகாது.
தன்னுள் சேர்க்காத எப்பொருளும் நம்மிடம் சேராது.

180 டிகிரி திரும்புங்கள். உங்கள் பிறப்பின் மூலத்தை காண முயற்சியிங்கள்.
அங்கே புதையல் கொட்டிக்கிடக்கிறது.

உங்கள் உள்ளே இருக்கும் ”உருபொருளை” புதையலாக நினைத்து தோன்டி எடுங்கள், புதைபொருளாக மாற்றி புதைத்துவிடாதிர்கள்.

Saturday, November 8, 2008

குரு நிலை


மஞ்சுநாதனுக்கு பெருத்த சந்தேகம். பலகாலமாக குருவுடன் இருக்கிறோம். அவரின் கண் அசைவை புரிந்து கொண்டு செயல்படும் முதல் மாணவனாக இருக்கிறோம். இருந்தும் நமது குரு நம்மை பாரட்டுவதில்லையே. நமக்கு சுகந்திரமாக பொறுப்புகளை கொடுப்பதில்லையே என கவலை. குருவை போல ஆன்மீக விஷயங்கள் பேசுவதற்கும் சாஸ்திர கருத்திகளுக்கு பதில் சொல்ல தெரிந்தாலும் நம்மை அவர் அளவுக்கு யாரும் மதிப்பதில்லையே ஏன் இந்த நிலை என யோசிக்க துவங்கினான்.

குருவுடன் தனியாக பயணப்படும் தருணத்திற்காக காத்திருந்தான். அதற்கான சந்தர்ப்பம் விரைவிலேயே வாய்த்தது. ஓர் தொழிற்சாலையில் உழியர்களுக்கான கூட்டத்தில் அவர்களின் பணியை ஊக்குவிக்கும் பொருட்டு குரு அழைக்கப்படிருந்தார்.

கூட்டத்தில் பேசியது அனைத்தும் மஞ்சுநாதனுக்கு புதிய விஷயமாக தெரியவில்லை. குருவுடன் எப்பொழுதும் இருப்பதால், அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும் அடுத்த வார்த்தை மனதில் உதிக்கும் வண்ணம் அவனுக்கு குருவின் உரை பழகி இருந்தது. அது வரை பொருமையாக இருந்த மஞ்சுநாதன் தனது கேள்வியை இன்று கேட்டே விட வேண்டும் என முடிவு செய்தான்.

அன்று மதிய உணவு அருந்திய பின் குரு ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கும் பொழுது அவரின் கால்களை மெல்ல பிடித்து விட்டபடியே மஞ்சுநாதன் கேட்டான், “குருவே, நான் உங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா?”.

படுக்கையில் சாய்ந்த நிலையில் அமர்ந்திருந்த குரு ஜன்னலுக்கு வெளியே எங்கோ பார்த்த வண்ணம் இருந்தார். மஞ்சுநாதனின் கேள்விக்கு “ம்” என ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னாலும் அவரின் கண்கள் வெளியே எங்கோ பார்த்த வண்ணம் இருந்தது.

மஞ்சுநாதன் தனது கேள்விகளை கேட்க துவங்கினான்...

“நீங்கள் சொன்ன அனைத்து ஆன்மீக சாதனைகளையும் செய்து வருகிறேன். மக்களுக்கு நீங்கள் சொன்ன அனைத்து கருத்துகளும் எனக்கு தெரிந்த விஷயம் தான். நானும் குரு நிலையை அடைந்து விட்டேனா? இன் நிலையில் எனக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்?” என்றான்.

கேள்வி கேட்கும் வரை திரும்பாத அவர் முகம் , கேள்வி கேட்டு முடித்ததும் அவனை பார்த்து திரும்பிய போது சிறிது கலங்கித்தான் போனான் மஞ்சுநாதன்.


அவனது கலக்கத்தை போக்கும் வகையில் அவரின் முகத்தில் ஓர் புன்னகை வெளிப்பட்டது.

“மஞ்சுநாதா, வெளியே ஓர் கட்டிடத்தின் முகப்பில் என்ன எழுதியிருக்கிறது என பார்” என்றார் குரு.

கேட்ட கேள்விக்கு சம்பந்தம் இல்லாத விஷயமாக இருந்தாலும், குருவின் கட்டளைக்காக உட்கார்ந்த நிலையிலேயே எட்டி பார்த்துவிட்டு சொன்னான். “Go Down" - கீழே போ என எழுதியிருக்கிறது குருவே..”

குரு அவனை மேலும் ஓர் அகலமான புன்னகையுடன் பார்த்துவிட்டு சொன்னார்... “மஞ்சு நாதா , இந்த தொழிற்சாலையில் வேலை செய்பவர்களுக்கு அது Godown (கிடங்கு). உனக்கு அது Go Down.(கீழே போ). ஆனால் எனக்கோ அது God Own (கடவுளுக்கு சொந்தமானது).

சாமானிய மனிதர்கள் சாஸ்திரங்களை மூதாதயர்களின் சேமிப்பாக பார்க்கிறார்கள். நீ அதை கீழ் நிலையில் ஓர் புத்தகமாகவோ உரையாகவோ பார்க்கிறாய். நான் அதை கடவுளின் சொந்த பொருளாக பார்க்கிறேன். குரு நிலையை அடைய சாஸ்திரம் தேவையில்லை. விழிப்புணர்வே தேவை”.


அன்று முதல் மஞ்சுநாதன் தன்னை கடவுளுக்கு சொந்தமாக்க துவங்கினான்.

-------------------ஓம்--------------------------

குரு நிலை என்பதை நாம் எளிமையாக எண்ணிவிடுகிறோம். பகவத் கீதையையோ அல்லது வேறு ஆன்மீக கருத்துக்களையோ சுவை பட பிரசங்கம் செய்பவர்கள் குரு நிலையில் இருக்கிறார்கள் என நினைத்து கொள்ளுவது தவறு. அதே நேரத்தில் கடவுளை பற்றி சுவை பட பேச தெரியாதவர்கள் எல்லாம் குரு இல்லை என முடிவு செய்வதும் தவறு. குருவை விழிப்புணர்வு நிலையிலேயே புரிந்துகொள்ள முடியும்.

குரு நிலை அடைய விரும்புனால் விழிப்புணர்வு அடைவதே வழி அதை விடுத்து, சித்துக்களை கற்பதோ- புராணங்களை மனப்பாடம் செய்வதோ முட்டாள் தனம்.

விழிப்புணர்வு பெற்றவர்களுக்கு எதுவம் கற்க வேண்டியதில்லை. விழிப்புணர்வற்றவர்களுக்கு அனைத்தையும் கற்றாலும் எதுவம் பயனில்லை.

Sunday, October 26, 2008

ஆஸ்ரமத்தை விட்டு வெளியேறுகிறேன்

தியானத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆஸ்ரமம் அது.


ஓர் தெய்வீகமான மெளனம் அங்கே சூழ்ந்திருந்தது. ஓர் கையை தலையிலும் தொடையிலும் வைத்தவண்ணம் தனது ஆசனத்தில் அமர்ந்திருந்தார் சத்குரு.

அவரது கண்கள் எங்கோ நிலைத்திருந்தது. அவரது உடல் அசைவற்று இருந்தது , அவர் சமாதி நிலையில் இருப்பதை காட்டியது.சத்குருவை பார்த்த படி அவரது சிஷ்யர்களும் மக்களும் அமர்ந்திருந்தனர்.

ஓர் இளைஞன் கைகளில் மலர் மாலை மற்றும் பழங்களுடன் அவர் முன் வந்து நின்றான்.
அவருக்கு மலர்மாலையை அணிவித்து அவரை விழுந்து வணங்கி கேட்டான் “குருவே என்னை உங்கள் சிஷ்யனாக ஏற்று எனக்கு சன்னியாசம் வழங்குங்கள்.”

தனது சமாதியிலிருந்து கலைந்த அவர், அவனை தீர்க்கமாக பார்த்தார். “உன்னிடத்தில் சன்னியாசத்திற்கான கூறு இல்லை.


முயற்சி செய் , அழ்ந்த முயற்சி உன்னை மேம்படுத்தும்” என சொல்லி அவனை பார்த்தார்.

அந்த இளைஞனோ விடுவதாக இல்லை. “அவ்வாறு சொல்லி என்னை தவிர்க்காதீர்கள். என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்” என இரு கரம் கூப்பி தொழுதான்.

குரு புன்புறுவல் செய்தவாறே கூறினார்...“சரி உன்னை ஏற்றுக்கொள்கிறேன். சன்னியாசம் கொடுப்பதற்கு முன் நீ சிலகாலம் இங்கு இருந்து வா. உனது சன்னியாசம் கொடுக்கப்படும் நாளை பிறகு கூறுகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை உண்டு. நீ யாருடனும் சைகையிலோ வாய் மூலமாகவோ பேச கூடாது. . மூன்று வருடத்திற்கு ஒரு முறை என்னிடம் மட்டும் பேசலாம். அதுவும் ஒரு வாக்கியம் தான். இதற்கு சம்மதித்தால் நீ இங்கு இருக்கலாம்”

தன்னை ஏற்று கொண்ட குருவை கண்கள் குளமாக தொழுது விட்டு தலையசைத்தான் இளைஞன்.

“மெளனி” என்ற எழுதபட்ட வாசகம் கழுத்தில் இருக்க ஆஸ்ரமத்தை வலம் வர துவங்கினான் அந்த இளைஞன்.

மூன்று வருடம் கழித்தது. குரு முன் வந்தமர்ந்தான்..

குரு அவனை நோக்கி கூறினார்..“..இன்று நீ பேசும் நாள். நீ பேச விரும்புவதை ஒரே வாக்கியத்தில் கூறு”

இளைஞன் கூறினான் ,“குருவே எனக்கு கொடுக்கப்பட்ட படுக்கை வசதி குறைவாக இருக்கிறது”.

குரு கூறினார், “ நன்று. உனது மெளனம் தொடரட்டும்”.
.
.
.
.
.
.
மீண்டும் மூன்று வருடம் கழித்தது. அந்த நாளும் வந்தது.

குரு அவனை நோக்கி கூறினார்..“..இன்று நீ பேசும் நாள். நீ பேச விரும்புவதை கூறு”

இளைஞன் கூறினான் ,“குருவே என்னை பிறர் சரியாக நடத்துவதில்லை”.

குரு கூறினார், “ நன்று. உனது மெளனம் தொடரட்டும்”.
.
.
.
.
.
.
.
.
.
மீண்டும் மூன்று வருடம் கழித்தது. அந்த நாளும் வந்தது.

குரு அவனை நோக்கி கூறினார்..“..இன்று நீ பேசும் நாள். நீ பேச விரும்புவதை கூறு”

இளைஞன் கூறினான் ,“குருவே எனக்கு ஆஸ்ரம வாழ்க்கை திருப்தி இல்லை. ஆஸ்ரமத்தை விட்டு வெளியேறுகிறேன்”.

குரு கூறினார், “ நன்று. உனது பயணம் தொடரட்டும்”.

--------------------------------ஓம்-------------------------------------
இக்கதை ஓர் ஜென் கதையை தழுவி சொல்லப்பட்டது.

தன்னில் அமைதியையும் உள்நிலையில் ஈடுபாட்டையும் காணாதவர்கள் ஆன்மீக வாழ்க்கையை தேர்ந்தெடுத்தல் தவறானது.

குரு சிஷ்ய உறவின் தெளிவையும், தான் எதற்காக இருக்கிறோம் என்ற இருப்பும் காண தவறுவதால் ஏற்படும் குறையே இதற்கு காரணம்.

இந்த குறைபாடு குரு சிஷ்ய உறவில் மட்டுமல்ல. அனைத்து வகையான உறவு முறையிலும் உண்டு.குரு சிஷ்யா நிலையில் கணவன் - மனைவி, தந்தை மகன், தலைவர் - பணியாள் என வேறு உறவு முறைகளை வைத்து இக்கதையை சிந்தித்துப்பாருங்கள். யாரை வைத்தாலும் அவர்கள் உறவில் வரும் தடுமாற்றத்தின் காரணம் யாரோ ஒருவர்

தனது இருப்பை உணராமல் தன் சுகத்தை மட்டுமே உணருகிறார்கள் என்பது தான்.

உங்கள் இருப்பை உணர்ந்து உள் நிலையைல் விழிப்புணர்வு பெருங்கள். அனைத்து உங்களுக்கு ஆனந்தமயமாக தெரியும்.