Monday, February 9, 2009

ஆன்மீக சாதனை


குரு மரண படுக்கையில் இருந்தார்..

அருகில் அவரின் சீடன் கவலை தோய்ந்த முகத்துடன் காணப்பட்டான்.

குரு மெல்ல அவனை அழைத்து, “ சிஷ்யா.. ஏன் கவலைப்படுகிறாய்? உனக்காக நான் எப்பொழும் இருப்பேன். கலக்கம் அடையாதே...”

கலங்கிய கண்களுடன் சிஷ்யன் கூறினான்.. “குருதேவா... நீங்கள் கூறியபடி ஜாபம் தியானம் எல்லாம் செய்து வருகிறேன். ஆனால் ஆன்மீக உயர்நிலை அடையும் காலம் எப்பொழுது என தெரியவில்லை. எதுவரை எனது ஆன்மீக பயிற்சியை தொடர்வது. உங்கள் காலத்திற்கு பிறகு யாரிடம் நான் கேட்பது?”


அணையும் ஜோதி பிரகாசகமாக சுடர்விடும் என்பதை போல ஜோதிர்மயமான முகத்துடன் சிஷ்யனை பார்த்தார் குரு.. “கவலை கொள்ளாதே. இந்த கட்டிலுக்கு அடியில் ஓர் பெட்டி இருக்கிறது. அதன் உள்ளே உனக்கு பிற்காலத்தில் உபதேசிக்க வேண்டியதை வைத்திருக்கிறேன்...அது அனைத்து விஷயங்களையும் போதிக்கும். எனது உபதேசம் தேவைப்படும் பொழுது மட்டும் பெட்டியை திறந்து பார். எனது ஆசிகள்”...என கூறியபடி அவரின் ப்ராணன் உள்ளே அடங்கியது.


நாட்கள் சென்றன...

தனது ஆன்மீக சாதனையில் தனக்கு பலன் கிடைப்பதாக சிஷ்யனுக்கு தெரியவில்லை.. தியானம் , ஜபம் ஆகியவற்றை விட்டுவிடலாமா என எண்ணினான்..

குருவின் உபதேசத்தை கேட்க பெட்டியை திறந்தான்.


சிஷயன் ஞானம் அடைந்தான்..






நாட்கள் சென்றன...

சிஷ்யன் கூறிய கருத்துகளை மக்கள் ஏற்காமல் கலகம் செய்தனர்.

மீண்டும் குருவின் உபதேசத்தை கேட்க பெட்டியை திறந்தான்..

அதற்கு பின் வரும் காலத்தில் மக்கள் கருத்துக்களை ஏற்றுக்கொண்டனர்...





நாட்கள் சென்றன...

தனது இறுதி காலத்தை அடைந்தான்.. தனது சிஷ்யனை கூப்பிட்டு கூறினான்..

“எனது பிரிய சிஷ்யா.. எனது குரு எனக்கு அளித்த உபதேசத்தை உனக்கு அளிக்கிறேன். எனது உபதேசம் தேவையான பொழுது மட்டும் இந்த பெட்டியை திற. எனது உபதேசம் கிட்டும்.”

சிஷ்யனுக்கு சிஷ்யனான பரம சிஷ்யன்.. தனது ஆன்மீக சாதனையில் தோய்வு ஏற்பட்டது. குருவின் உபதேசம் அறிய பெட்டியை திறந்தான்..

அதில் எழுதி இருந்த வாசகம்...

“இன்னொரு முறை முயற்சி செய்”


-----------------------------------------------------------
சிஷ்யனுக்கு மட்டுமல்ல நமக்கும் ஆன்மீக சாதனையில் தோய்வு ஏற்படும் பொழுதும் இந்த உபதேசம் உதவும்..

குரு என்பவர் உபதேசிக்க மட்டுமே முடியும். ஆன்மீக சாதனையை தனி ஒரு மனிதன் செய்து உயர்வடைய வேண்டும்.

எளிமையாக சொல்ல வேண்டுமானால் குரு சமைத்து கொடுக்கலாம், ஏன் ஊட்டிகூட விடலாம். ஆனால் நாம் தான் ஜீரணிக்க வேண்டும்.


Friday, December 26, 2008

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

பூபாளம் இசைக்கும் காலை நேரம்....


சத்குரு விஷ்வ தீர்த்தர் தனது நித்திய பூஜையில் ஈடுபட்டிருந்தார். மங்கள வாத்தியம் முழங்க தீபாரதனை செய்தார் மூத்த சிஷ்யன் ஜகதீஷ்.

இறைவனின் சன்னிதானத்திலிருந்து படையல் செய்த பொருட்களை சிஷ்யர்கள் அனைவருக்கும் வழங்கினார்கள். அனைவரும் பக்திச் சுவையாலும் , பிரசாத சுவையாலும் மகிழ்ந்து கலைந்தனர்.

சத்குரு தனது ஆசனத்திலிருந்து எழுந்து தனது அறை நோக்கி நடக்க ஆரம்பித்தார். அவரின் கால்கள் நடந்தாலும் கண்கள் ஜகதீஷை பார்த்த வண்ணம் இருந்தது...

குருவின் தீர்க்கமான பார்வையை உணர்ந்த ஜகதீஷ் அவரின் பின்னால் நடக்க துவங்கினான்.

அறைக்குள் வந்ததும் ஜகதீஷை நோக்கி கேட்டார்... “ எனது பிரிய ஜகதீஷ் சில நாட்களாக உனது செயல்களில் ஓர் வித்தியாசம் இருந்ததை உணர்கிறேன். முன்பு நைவேதியம் செய்யும் பிரசாதத்தை அனைவருக்கும் வழங்குவதில் முனைப்பாக இருப்பாய் , ஆனால் இப்பொழுது ஒதுங்கி இருக்கிறாயே என்ன காரணம்?”

தனது நிலையை குரு இவ்வளவு உன்னிப்பாக கவனிப்பார் என எதிர்பார்க்காத ஜகதீஷ் தனது நிலையை கூற துவங்கினான்.. “ குருவே ஆசிரம வாழ்க்கை துவங்கிய பொழுது பக்தி பூர்வமாக இருந்தேன். நித்திய பூஜை, நைவேதியம் என அனைத்திலும் ஈடுபட்டேன். தற்சமயம் தெளிவு பெற்றேன். நாம் படைக்கும் நைவேதியதை இறைவன் அருந்துகிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறைவன் சாப்பிட்டால் நாம் பிறருக்கு எப்படி பிரசாதமாக வழங்க முடியும்? இது போன்ற தர்க்கம் எனக்குள் தோன்றியதால் என்னால் பிரசாதம் வழங்குவதில் ஈடுபட முடியவில்லை குருவே...”

அவனை ஊடுருவி பார்த்த குரு, “ ஜகதீஷ் உனது விருப்பபடியே செய். நமது வேதாந்த வகுப்புக்கு நேரமாகி விட்டது. வகுப்பறையை தயார் செய். சிறிது நேரத்தில் நானும் வருகிறேன்” என்றார்.


இறைவணக்கத்துடன் வகுப்பு துவங்கியது.. சென்ற வகுப்பில் புதிய பாடம் இன்று போதிக்கபடுவதாக குரு சொன்னதால் அனைவரும் ஆர்வமாக இருந்தனர்..

கால்கள் இரண்டையும் இணைத்து யோக முத்திரையில் அமர்ந்திருந்த சத்குருவை பார்க்க தக்‌ஷிணாமூர்த்தியை தரிசனம் செய்வதை போல இருந்தது.

அனைத்தும் பூர்ணமான வஸ்துவிலிருத்தே தோன்றியது என பொருள் கொண்ட “பூர்ணமிதம்” எனும் ஈஷாவாசிய உபநிஷத்தில் வரும் மந்திரத்தை விளக்கினார் குரு விஷ்வ தீர்த்தர்.

அனைத்து மாணவர்களும் மந்திரத்தை மனதில் உரு போட துவங்கினர். சிறிது நேரத்திற்கு பிறகு ஜகதீஷை சைகையால் அழைத்தார் விஷ்வ தீர்த்தர்.


குருவின் முன் பணிவுடன் வந்து வணங்கி நின்றான்.

“எனதருமை ஜகதீஷ், மந்திரத்தை மனதில் ஏற்றி கொண்டாயா? ,” என்றார்.

“முழுமையாக உள்வாங்கி கொண்டேன் குருவே”.

“எங்கே ஒரு முறை சொல் பார்ப்போம்”

கண்கள் மூடி மனதை ஒருநிலைப்படுத்தி கணீர் குரலில் கூற துவங்கினான்..” பூர்ண மித பூர்ண மிதம் ...” என கூறி முடித்தான் ஜகதீஷ்.

மெல்ல புன்சிரிப்புடன் குரு தொடர்ந்தார்.. “நீ சரியாக மனதில் உள் நிறுத்தியாதாக தெரியவில்லையே.. எங்கே உனது புத்தகத்தை காட்டு”

பதட்டம் அடைந்த ஜகதீஷ், புத்தகத்தை காண்பித்து கூறினான்.. “ குருவே தவறு இருந்தால் மன்னியுங்கள். ஆனால் நான் கூறியது அனைத்தும் இதில் இருப்பதை போலவே கூறினேன்...”

“ஜகதீஷ்.. இந்த புத்தகத்திலிருந்து படித்துதான் மனதில் உள்வாங்கினாயா?”.. என்றால் விஷ்வதீர்த்தர்.


மெல்ல தலையசைத்தான் ஜகதீஷ்..


சத்குரு தொடர்ந்தார்... “ இதிலிருந்து உள்வாங்கினாய் என்றால் மந்திரம் இதில் இருக்கிறதே? நீ உன் மூளையில் மந்திரத்தை ஏற்றி கொண்டால் புத்தகத்தில் இருக்க கூடாதல்லவா?”


குழப்பமடைந்தான் ஜகதீஷ்...


“எனது பிரிய ஜகதீஷ்.. உனது நினைவில் நின்ற மந்திரம் சூட்சம நிலையில் இருக்கிறது. புத்தகத்தில் இருக்கும் மந்திரம் ஸ்தூல வடிவம். இறைவன் சூட்சம நிலையில் இருப்பவன். இறைவனுக்கு படைக்கப்படுவது ஸ்தூல வடிவில் இருந்தாலும் அவன் சூட்சமமாகவே உற்கொள்கிறான்.
நீ உள்வாங்கிய பின் புத்தகத்தில் மந்திரம் அளவில் குறைந்துவிட்டதா? அது போலதான் இறைவன் உற்கொண்ட பிரசாதம் அளவில் குறையாமல் நாம் எல்லோரும் உண்கிறோம். ஸ்தூலமாக இருக்கும் நாம் ஸ்தூலமாகவும், சூட்சுமமாக இருக்கும் இறைவன் சூட்சுமமாகவும் நைவேதியத்தை உற்கொள்கிறோம். ”

வகுப்பில் இருக்கும் அனைவரும் இருவரின் சம்பாஷணை புரியாமல் இருக்க...ஜகதீஷின் முகத்தில் ஒளி தெரிந்தது.

தனது பக்தியற்ற தர்க்கம் செய்த அறியாமையை குருவிற்கு நைவித்தியம் செய்து முழுமையடைந்தான் ஜகதீஷ்.

Tuesday, November 11, 2008

எங்கே இருக்கு புதையல்....?

பேராசை பெருமாள்சாமியை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. வாழ்க்கையில் ஒவ்வொரு செயலும் தன்னக்கு பெரிய செல்வம் வரவேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுவது அவனது இயல்பு. தனது ஆசையால் சிறுக சிறுக பொருள் சேர்ப்பது அவனுக்கு சரியாக படவில்லை.


அடித்தால் ஒரே அடியில் பெரும் பணத்தை சம்பாதித்து அதை வைத்து வாழ்க்கை மேம்படுத்தவேண்டும் என முடிவெடுத்தான். ஜோதிடரிடம் சென்று ஜாதகத்தை கண்பித்து இவனது செல்வநிலையை முடிவுசெயலாம் ஜோதிடரை அணுகினான். அவனது ஜாதகம் சிறப்பாக இருக்கிறது என்றும் கூடிய விரைவில் பெருமாள் சாமிக்கு புதையல் கிடைக்கும் என்றும் ஜோதிடர் சொன்னார்.

காய்கறி கடையில் சில ரூபாய் மிச்சம் பிடித்தாலே சந்தோஷத்தில் இரவு தூங்கமாட்டன் பெருமாள் சாமி, இந்த லட்சணத்தில் ஜோதிடர் சொன்னது அவனுக்கு காதில் ரிங்காரம் அடித்துக்கொண்டே இருந்தது.

எப்படி புதையல் கிடைக்கும்? எங்கு இருக்கும்? அந்த புதையல் நமக்கு போதுமானதாக இருக்குமா என பல எண்ணங்கள் சிந்தனையில் வந்தவண்ணம் இருந்தது.

அந்த ஊரில் இருக்கும் ஓர் ஞானியை பார்த்து கேட்டால் அவர் தனக்கு உதவகூடும் என எண்ணினான். கண்களில் பேராசை மின்ன தன்முன் வந்து நிற்கும் பெருமாள் சாமியை பார்த்தார் ஞான குரு . "ஐயா எனக்கு புதையல் கிடைக்கும் என ஜோதிடர் சொன்னார். நீங்கள் தான் எனக்கு அந்த புதையல் கிடைக்க வழி சொல்ல வேண்டும்" என்றான் பெருமாள் சாமி.

பெருமாள் சாமியின் உண்மையான தேவையை உணர்ந்த ஞான குரு...புன்னகையுடன் பார்த்தார் பின்பு..." பெருமாள் சாமி , இந்த ஊரின் மேற்கு பகுதியில் இருக்கும் மலைக்கு அதிகாலையில் செல். சூரிய ஒளியில் உனது நிழலை கவனி. நிழலின் அளவு எங்கு முற்றிலும் குறைகிறதோ அங்கு புதையல் இருக்கிறது" இதை கேட்டதும் அவருக்கு நன்றி சொல்ல கூட தோன்றாமல் விரைவாக நடந்தான்.

அதிகாலையில் குளித்துவிட்டு பயபக்தியுடன் மேற்கு மழைக்கு சென்றான். மலையை பார்த்து நின்றான். பின்புறம் இருந்த சூரிய ஒளியால் நிழல் தெரிய துவங்கியது. நிழலை பின்தொடர்ந்தான். உச்சிவேளையில் நிழல் அவனது உடலில் ஐக்கியம் அடைந்து காணாமல் போனது.

காலை முதல் நிழலை பார்த்த வண்ணம் இருந்ததால் மனம் ஒருமுகப்பட்டு தனது உள்நிலையில் தெளிவான நிலையில் இருந்தான். முடிவாக பெருமாள் சாமி புதையல் தனக்குள்ளே இருக்கிறது என்பதை உணர்ந்தான்.

--------------------------ஓம்----------------------
தன்னுள் தேடாமல் எப்பொருளைவெளியே தேடினாலும் அது முடிவாகாது.
தன்னுள் சேர்க்காத எப்பொருளும் நம்மிடம் சேராது.

180 டிகிரி திரும்புங்கள். உங்கள் பிறப்பின் மூலத்தை காண முயற்சியிங்கள்.
அங்கே புதையல் கொட்டிக்கிடக்கிறது.

உங்கள் உள்ளே இருக்கும் ”உருபொருளை” புதையலாக நினைத்து தோன்டி எடுங்கள், புதைபொருளாக மாற்றி புதைத்துவிடாதிர்கள்.

Saturday, November 8, 2008

குரு நிலை


மஞ்சுநாதனுக்கு பெருத்த சந்தேகம். பலகாலமாக குருவுடன் இருக்கிறோம். அவரின் கண் அசைவை புரிந்து கொண்டு செயல்படும் முதல் மாணவனாக இருக்கிறோம். இருந்தும் நமது குரு நம்மை பாரட்டுவதில்லையே. நமக்கு சுகந்திரமாக பொறுப்புகளை கொடுப்பதில்லையே என கவலை. குருவை போல ஆன்மீக விஷயங்கள் பேசுவதற்கும் சாஸ்திர கருத்திகளுக்கு பதில் சொல்ல தெரிந்தாலும் நம்மை அவர் அளவுக்கு யாரும் மதிப்பதில்லையே ஏன் இந்த நிலை என யோசிக்க துவங்கினான்.

குருவுடன் தனியாக பயணப்படும் தருணத்திற்காக காத்திருந்தான். அதற்கான சந்தர்ப்பம் விரைவிலேயே வாய்த்தது. ஓர் தொழிற்சாலையில் உழியர்களுக்கான கூட்டத்தில் அவர்களின் பணியை ஊக்குவிக்கும் பொருட்டு குரு அழைக்கப்படிருந்தார்.

கூட்டத்தில் பேசியது அனைத்தும் மஞ்சுநாதனுக்கு புதிய விஷயமாக தெரியவில்லை. குருவுடன் எப்பொழுதும் இருப்பதால், அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும் அடுத்த வார்த்தை மனதில் உதிக்கும் வண்ணம் அவனுக்கு குருவின் உரை பழகி இருந்தது. அது வரை பொருமையாக இருந்த மஞ்சுநாதன் தனது கேள்வியை இன்று கேட்டே விட வேண்டும் என முடிவு செய்தான்.

அன்று மதிய உணவு அருந்திய பின் குரு ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கும் பொழுது அவரின் கால்களை மெல்ல பிடித்து விட்டபடியே மஞ்சுநாதன் கேட்டான், “குருவே, நான் உங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா?”.

படுக்கையில் சாய்ந்த நிலையில் அமர்ந்திருந்த குரு ஜன்னலுக்கு வெளியே எங்கோ பார்த்த வண்ணம் இருந்தார். மஞ்சுநாதனின் கேள்விக்கு “ம்” என ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னாலும் அவரின் கண்கள் வெளியே எங்கோ பார்த்த வண்ணம் இருந்தது.

மஞ்சுநாதன் தனது கேள்விகளை கேட்க துவங்கினான்...

“நீங்கள் சொன்ன அனைத்து ஆன்மீக சாதனைகளையும் செய்து வருகிறேன். மக்களுக்கு நீங்கள் சொன்ன அனைத்து கருத்துகளும் எனக்கு தெரிந்த விஷயம் தான். நானும் குரு நிலையை அடைந்து விட்டேனா? இன் நிலையில் எனக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்?” என்றான்.

கேள்வி கேட்கும் வரை திரும்பாத அவர் முகம் , கேள்வி கேட்டு முடித்ததும் அவனை பார்த்து திரும்பிய போது சிறிது கலங்கித்தான் போனான் மஞ்சுநாதன்.


அவனது கலக்கத்தை போக்கும் வகையில் அவரின் முகத்தில் ஓர் புன்னகை வெளிப்பட்டது.

“மஞ்சுநாதா, வெளியே ஓர் கட்டிடத்தின் முகப்பில் என்ன எழுதியிருக்கிறது என பார்” என்றார் குரு.

கேட்ட கேள்விக்கு சம்பந்தம் இல்லாத விஷயமாக இருந்தாலும், குருவின் கட்டளைக்காக உட்கார்ந்த நிலையிலேயே எட்டி பார்த்துவிட்டு சொன்னான். “Go Down" - கீழே போ என எழுதியிருக்கிறது குருவே..”

குரு அவனை மேலும் ஓர் அகலமான புன்னகையுடன் பார்த்துவிட்டு சொன்னார்... “மஞ்சு நாதா , இந்த தொழிற்சாலையில் வேலை செய்பவர்களுக்கு அது Godown (கிடங்கு). உனக்கு அது Go Down.(கீழே போ). ஆனால் எனக்கோ அது God Own (கடவுளுக்கு சொந்தமானது).

சாமானிய மனிதர்கள் சாஸ்திரங்களை மூதாதயர்களின் சேமிப்பாக பார்க்கிறார்கள். நீ அதை கீழ் நிலையில் ஓர் புத்தகமாகவோ உரையாகவோ பார்க்கிறாய். நான் அதை கடவுளின் சொந்த பொருளாக பார்க்கிறேன். குரு நிலையை அடைய சாஸ்திரம் தேவையில்லை. விழிப்புணர்வே தேவை”.


அன்று முதல் மஞ்சுநாதன் தன்னை கடவுளுக்கு சொந்தமாக்க துவங்கினான்.

-------------------ஓம்--------------------------

குரு நிலை என்பதை நாம் எளிமையாக எண்ணிவிடுகிறோம். பகவத் கீதையையோ அல்லது வேறு ஆன்மீக கருத்துக்களையோ சுவை பட பிரசங்கம் செய்பவர்கள் குரு நிலையில் இருக்கிறார்கள் என நினைத்து கொள்ளுவது தவறு. அதே நேரத்தில் கடவுளை பற்றி சுவை பட பேச தெரியாதவர்கள் எல்லாம் குரு இல்லை என முடிவு செய்வதும் தவறு. குருவை விழிப்புணர்வு நிலையிலேயே புரிந்துகொள்ள முடியும்.

குரு நிலை அடைய விரும்புனால் விழிப்புணர்வு அடைவதே வழி அதை விடுத்து, சித்துக்களை கற்பதோ- புராணங்களை மனப்பாடம் செய்வதோ முட்டாள் தனம்.

விழிப்புணர்வு பெற்றவர்களுக்கு எதுவம் கற்க வேண்டியதில்லை. விழிப்புணர்வற்றவர்களுக்கு அனைத்தையும் கற்றாலும் எதுவம் பயனில்லை.

Sunday, October 26, 2008

ஆஸ்ரமத்தை விட்டு வெளியேறுகிறேன்

தியானத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆஸ்ரமம் அது.


ஓர் தெய்வீகமான மெளனம் அங்கே சூழ்ந்திருந்தது. ஓர் கையை தலையிலும் தொடையிலும் வைத்தவண்ணம் தனது ஆசனத்தில் அமர்ந்திருந்தார் சத்குரு.

அவரது கண்கள் எங்கோ நிலைத்திருந்தது. அவரது உடல் அசைவற்று இருந்தது , அவர் சமாதி நிலையில் இருப்பதை காட்டியது.சத்குருவை பார்த்த படி அவரது சிஷ்யர்களும் மக்களும் அமர்ந்திருந்தனர்.

ஓர் இளைஞன் கைகளில் மலர் மாலை மற்றும் பழங்களுடன் அவர் முன் வந்து நின்றான்.
அவருக்கு மலர்மாலையை அணிவித்து அவரை விழுந்து வணங்கி கேட்டான் “குருவே என்னை உங்கள் சிஷ்யனாக ஏற்று எனக்கு சன்னியாசம் வழங்குங்கள்.”

தனது சமாதியிலிருந்து கலைந்த அவர், அவனை தீர்க்கமாக பார்த்தார். “உன்னிடத்தில் சன்னியாசத்திற்கான கூறு இல்லை.


முயற்சி செய் , அழ்ந்த முயற்சி உன்னை மேம்படுத்தும்” என சொல்லி அவனை பார்த்தார்.

அந்த இளைஞனோ விடுவதாக இல்லை. “அவ்வாறு சொல்லி என்னை தவிர்க்காதீர்கள். என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்” என இரு கரம் கூப்பி தொழுதான்.

குரு புன்புறுவல் செய்தவாறே கூறினார்...“சரி உன்னை ஏற்றுக்கொள்கிறேன். சன்னியாசம் கொடுப்பதற்கு முன் நீ சிலகாலம் இங்கு இருந்து வா. உனது சன்னியாசம் கொடுக்கப்படும் நாளை பிறகு கூறுகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை உண்டு. நீ யாருடனும் சைகையிலோ வாய் மூலமாகவோ பேச கூடாது. . மூன்று வருடத்திற்கு ஒரு முறை என்னிடம் மட்டும் பேசலாம். அதுவும் ஒரு வாக்கியம் தான். இதற்கு சம்மதித்தால் நீ இங்கு இருக்கலாம்”

தன்னை ஏற்று கொண்ட குருவை கண்கள் குளமாக தொழுது விட்டு தலையசைத்தான் இளைஞன்.

“மெளனி” என்ற எழுதபட்ட வாசகம் கழுத்தில் இருக்க ஆஸ்ரமத்தை வலம் வர துவங்கினான் அந்த இளைஞன்.

மூன்று வருடம் கழித்தது. குரு முன் வந்தமர்ந்தான்..

குரு அவனை நோக்கி கூறினார்..“..இன்று நீ பேசும் நாள். நீ பேச விரும்புவதை ஒரே வாக்கியத்தில் கூறு”

இளைஞன் கூறினான் ,“குருவே எனக்கு கொடுக்கப்பட்ட படுக்கை வசதி குறைவாக இருக்கிறது”.

குரு கூறினார், “ நன்று. உனது மெளனம் தொடரட்டும்”.
.
.
.
.
.
.
மீண்டும் மூன்று வருடம் கழித்தது. அந்த நாளும் வந்தது.

குரு அவனை நோக்கி கூறினார்..“..இன்று நீ பேசும் நாள். நீ பேச விரும்புவதை கூறு”

இளைஞன் கூறினான் ,“குருவே என்னை பிறர் சரியாக நடத்துவதில்லை”.

குரு கூறினார், “ நன்று. உனது மெளனம் தொடரட்டும்”.
.
.
.
.
.
.
.
.
.
மீண்டும் மூன்று வருடம் கழித்தது. அந்த நாளும் வந்தது.

குரு அவனை நோக்கி கூறினார்..“..இன்று நீ பேசும் நாள். நீ பேச விரும்புவதை கூறு”

இளைஞன் கூறினான் ,“குருவே எனக்கு ஆஸ்ரம வாழ்க்கை திருப்தி இல்லை. ஆஸ்ரமத்தை விட்டு வெளியேறுகிறேன்”.

குரு கூறினார், “ நன்று. உனது பயணம் தொடரட்டும்”.

--------------------------------ஓம்-------------------------------------
இக்கதை ஓர் ஜென் கதையை தழுவி சொல்லப்பட்டது.

தன்னில் அமைதியையும் உள்நிலையில் ஈடுபாட்டையும் காணாதவர்கள் ஆன்மீக வாழ்க்கையை தேர்ந்தெடுத்தல் தவறானது.

குரு சிஷ்ய உறவின் தெளிவையும், தான் எதற்காக இருக்கிறோம் என்ற இருப்பும் காண தவறுவதால் ஏற்படும் குறையே இதற்கு காரணம்.

இந்த குறைபாடு குரு சிஷ்ய உறவில் மட்டுமல்ல. அனைத்து வகையான உறவு முறையிலும் உண்டு.குரு சிஷ்யா நிலையில் கணவன் - மனைவி, தந்தை மகன், தலைவர் - பணியாள் என வேறு உறவு முறைகளை வைத்து இக்கதையை சிந்தித்துப்பாருங்கள். யாரை வைத்தாலும் அவர்கள் உறவில் வரும் தடுமாற்றத்தின் காரணம் யாரோ ஒருவர்

தனது இருப்பை உணராமல் தன் சுகத்தை மட்டுமே உணருகிறார்கள் என்பது தான்.

உங்கள் இருப்பை உணர்ந்து உள் நிலையைல் விழிப்புணர்வு பெருங்கள். அனைத்து உங்களுக்கு ஆனந்தமயமாக தெரியும்.

Wednesday, October 15, 2008

நான் கடவுள்

நகரத்தின் மையத்தில் உள்ள பொதுக்கூட்ட மைதானம்.


கண்களுக்கு எட்டிய வரை மக்கள் கூட்டம். மக்கள் அனைவரும் ஒருமுக சிந்தைனையுடன்அமர்ந்திருந்தனர். ஒரு புறம் சிறு குழுவாக பக்த்தர்கள் இசைத்த பஜனை பாடல்கள் ஒலித்துக் கொண்டு இருந்தது. அந்த மண்டபம் பூக்களாலும் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேடையில் அலங்கார வளையம் மற்றும் மரத்தால் ஆன ஆசனம் என அனைத்து அம்சமும் ஒர் ஆன்மீக நிகழ்ச்சி நடைபெறப்போவதை குறித்தவண்ணம் இருந்தது.



ஆம். அனைவரும் சத்குரு ஞானேஷ்வர் வருகைக்காக காத்திருந்தனர்.

கூட்டத்தில் திடீரென சலசலப்பு. பின்பு அமைதி ஏற்பட்டது...
கூடியிருந்த கூட்டத்தின் நடுவே மக்கள் இருபுறமும் விலக ஓர் பாதை உருவானது..

சத்குரு தனது சிஷ்யர்களுடன் இரு புறமும் குழுமி இருந்த மக்களை வணங்கியபடியே மேடையை நோக்கி நடந்தார்.

பஜனை குழுவின் பாடல்கள் உச்சகட்டத்தை எட்டியது.

சிலர் அவர் கால்களை ஸ்பரிசிக்க முயன்றார்கள், சிலர் ஆவேசமாக அவரின் பெயரை உச்சரித்தனர்.

மேடையில் ஏறியதும் அனைவரையும் ஒருமுறை தனது ஞானம் நிறைந்த கண்களால் பார்த்தார்.

கூட்டம் அமைதியடைந்தது.

”எனது ஆன்மாவிற்கு அருகில் இருப்பவர்களே.....” என தொடங்கி தனது ஆன்மீக அருளுரையை துவங்க...அனைவரும் அதில் மூழ்கினர்.

ஒரு மணிநேரம் அங்கு யாரும் அசையக்கூட இல்லை. தனது ஆன்ம ஆற்றலாலும் , ஞான கருத்தாலும் மக்களை கட்டிவைத்தார் சத்குரு.

குருதேவரின் சிஷ்யர் ஒருவர் மக்களை பார்த்து கூறினார், “ சத்சங்கம் துவங்குகிறது, உங்களுக்கு சத்குருவிடம் கேட்க விரும்பும் கேள்வியை கேட்கலாம்”.


இதே நேரம் தேவலோகத்தில்.... கடவுள் இக்காட்சிகளை பார்த்துகொண்டிருந்தார்.
தன்னை பற்றி பேசும் ஆன்மீகவாதிக்கும், அதை கேட்டு ஆன்மீக வயப்பட்டிருக்கும் மக்களுக்கும் தனது திருக்காட்சியை ஏற்படுத்தும் வண்ணம் அவர்கள் முன் தோன்ற எண்ணினார்.


ஆன்மீகம் பற்றி, வாழ்வியல் பற்றி, தத்துவம் பற்றி என பல கேள்விகள் ஒவ்வொருவராக எழுந்து கேட்டார்கள். அனைத்துக்கும் சத்குரு ஞானேஷ்வர் புதிய புரிதலை ஏற்படுத்தும் கோணத்தில் பதில் அளித்துக்கொண்டிருந்தார்.

எளிய உடையில் வந்தால் அவர்களுக்கு குழப்பம் ஏற்படும் என எண்ணி அவர்கள் வழிபடும் வடிவிலேய தங்க கீடம், பட்டு பீதாம்பரம் அணித்து பரமத்மா மெல்ல நடந்து அந்த சபைக்கு நடுவே வந்தார்.

அனைவரின் கவனமும் அவரிடத்தில் திரும்பியது. அவர் மெல்ல நடந்து சத்குரு இருக்கும் மேடைக்கு அருகே வந்தார். அதற்குள் சத்குருவின் சிஷ்யர்கள் அவரை கூடி என்ன வேண்டும் என வினாவ தொடங்கினார்கள்.

பரமாத்மா புன்புறுவலுடன் கூறினார் ..”நான் கடவுள்”.

இதை கேட்ட சிஷ்யர்களும் மக்களும் கூக்குரலிட்டனர். அனைவரும் கூச்சலிடவே கைகளால் அமைதிப்படுத்திவிட்டு சத்குரு கடவுளை பார்த்தார்,

கடவுள் நம்பிக்கையுடன் சத்குருவை ஆழமாக பார்த்தார்.

சத்குரு சிஷ்யர்களை பார்த்து கூறினார்...”சத்சங்க்த்தின் நடுவே குழப்பம் விளைவிக்கும் இவரை கூட்டி சென்று எனது அறையில் அமரச்செய்யுங்கள்”


சிஷ்யர்கள் இருவர் கடவுளின் கைகளை பற்றி சத்குருவின் அறைக்கு அவரை கொண்டு சென்று அடைத்து வாயிற்கதவை சாத்தினார்கள்.

”சத்குருவிற்கு ஜெய்... சத்குருவிற்கு ஜெய்”
குழப்பம் விளைவித்தவரையும் மன்னித்துவிடும் சத்குருவின் தன்மையை கண்டு மக்கள் கோஷம் எழுப்ப துவங்கினர்.


சத்சங்கம் மீண்டும் துவங்கி மக்களுக்கு ஞானகருத்துகளை சத்குரு கூற துவங்கினார்.பின்பு மங்கள இசையுடன் சத்சங்க நிகழ்ச்சி நிறைவடைந்தது...

அந்த நகர பிரபலங்களும் பிரமுகர்களும் சத்குருவை காண வரிசையில் நின்றனர். ஆனால் சத்குரு இயல்புக்குமாறாக அனைவரையும் சந்திப்பதை தவிர்த்துவிட்டு தனது அறைக்கு திரும்புனார்.

சிஷ்யர்களை தனது அறைகதவை திறக்க சொல்லி அவர்களை வெளியே நிற்கசொன்னார்.

உள்ளே சென்ற வேகத்தில் அறைகதவை உற்புறமாக தாழிட்டு , அறுபட்ட மரம் போல் கடவுளின் காலில் விழுந்தார்.

தனது முகத்தை அவரின் கால்களில் புதைத்த வண்ணம் தழுதழுத்த குரலில் கூற துவங்கினார்...” பிரம்ம சொருபனே உங்களை பார்த்த உடனே கண்டுகொண்டேன். ஆனால் மக்கள் அறியாமையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் தான் கடவுள் என தெரிந்திருந்தால்.. தனது வாழ்க்கைக்கு தேவையான சுயநல கருத்துக்களை கேட்க துவங்குவார்கள். உங்களுடன் இருக்கும் ஆனந்தத்தை பருக தயாரக இருக்கமாட்டார்கள். இந்த எளியவனை மன்னித்தருளும்...”

தனது வருகையின் தவறை உணர்ந்த கடவுள் மறைந்தார்...


-----------ஓம்------------

கோவில், மடாலயம் என எங்கும் குவியும் மக்கள் பெரும்பன்மையாக தனது வாழ்க்கையின் தேவை பூர்த்தி செய்யும் கோரிக்கை மனதில் கொண்டிருக்கிறார்கள்.


இந்த பிறப்பை வாழும் சூழ்நிலையை படைந்தவனுக்கு நன்றி சொல்லும் இயல்பு எங்கும் காணப்படுவதில்லை.


பிறருக்காக பரார்தனை செய்தல் என்பதும் குறைந்து வாருகிறது.
தன்னை அறிதல் என்பதை காட்டிலும் தன் சுயநலத்தின்பால் மக்களுக்கு தேடல் அதிகம்.

சுயநலம் மிக மிக - கடவுளே எதிரில் வந்தாலும் நமக்கு பல சமயம் அவரை காணமுடிவதில்லை.
வேண்டுதல் என்பது தனது வாழ்க்கையில் உள்ள சிறு சம்பவத்தை வேண்டுவதல்ல.

வேண்டுதல் என்பது அதனுடன் அதுவாகவே ஆக அதனிடத்தில் வேண்டுவதை குறிக்கும்.


Sunday, October 5, 2008

கடவுளை காண்பது எப்படி?

காய்ந்த சருகாக தலைமுடி.... கண்களில் ஓர் தெய்வீக ஒளி. உடலில் குறைந்த ஆடையும் அவரை ஞான செல்வந்தராக காட்டியது.

வழக்கமாக தான் அமரும் ஆற்றங்கரை அரசமரத்தடியில் அமர்ந்து உதயமாகும் சூரியனை உற்று பார்த்துக் கொண்டிருந்தார் ஞானி.

“ஐயா குருவே ...எனக்கு வழிகாட்டுங்கள் ....” என கூறியவாரே...திடீரென ஓர் கரம் அவரின் கால்களை பற்றியது..அவரின் கால்களில் தனது தலையை வைத்து ஒருவன் கதறிகொண்டிருந்தான்.


சலனமற்ற ஓர் பாறை போன்று ஞானி உட்கார்ந்திருந்தார். அவரின் கண்கள் சூரியனை விட்டு அகலவில்லை.

“உங்களிடம் எத்தனையோ முறை கேட்டுவிட்டேன். எனக்கு கடவுளை காண வேண்டும். எனக்கு காட்டுங்கள்.... எனக்கு காட்டுங்கள்....” அவனது குரலில் ஓர் கடவுளை பார்க்க வேண்டும் என்ற உறுதி தெரிந்தது.

இன்று மட்டும் நடப்பதல்ல இந்த காட்சி... பல நாட்களாக தினம் இவன் வருவதும்..ஞானி சலனமற்று அமந்திருப்பதும் வாடிக்கையாகி விட்டது...

ஆனால் இன்று ....மெல்ல ஞானி அவனை நோக்கி திரும்பினார்.. அவன் கைகளை பற்றி அவனுடன் ஆற்றை நோக்கி நடந்தார்.

இருவரும் ஆற்றில் இறங்கினார்கள். இவனும் தனக்கு மார்பு வரை ஆற்றில் இறக்கி
ஞானி மந்திர உபதேசம் தருவார் என நினைத்தான்.

சற்றும் எதிர்பாராத விதமாக அவனின் கழுத்தை பிடித்து நீரில் அமிழ்த்தினார் ஞானி.

சுவாசம் திணறியது. திக்கு முக்காடினான்...

இறப்பின் எல்லையை உணர்ந்தான்..

சில நொடிகளுக்கு பிறகு அவனை விட்டார் ஞானி.


“யேஹ்....”
எனும் சப்தத்துடன் ஆற்றிலிருந்து வெளிவந்து பெரும் மூச்சு எடுத்தான்.

தன்னை திடப்படுத்திக் கொண்டு ஆற்றின் கரையை நோக்கி ஓடினான்.

திரும்பி பார்த்தால் ஞானி மெல்ல சலனமில்லமல் நடந்து வந்துகொண்டிருந்தார்.

அவனுக்கு கோபம் தலைக்கேறியது.“உங்களுக்கு கடவுளை காணும் வழி தெரியாவிட்டால் தெரியாது என சொல்ல வேண்டியது தானே? என்னை கொலை செய்ய வேண்டுமா? உங்களை நம்பி வந்ததுக்கு இதுதான் பலனா?”

தீர்க்கமாக பார்த்த ஞானியின் உதடுகள் அசைய துவங்கியது...”தினமும் கடவுளை காட்டு... கடவுளை காட்டு என கேட்டதால் உபயோகம் இல்லை. தண்ணீரில் மூழ்கியதும் வேறு சிந்தை இல்லாமல் சுவாசத்தை எடுக்கவேண்டும் என்பது மட்டுமே பிரதானமாக இருந்ததல்லவா? அது போல கடவுளை காணவேண்டும் என்பதை மட்டும் சிந்தையில் வைத்து முயற்சி செய். கடவுளை காணலாம்.” என்றார்

இவனக்கு புது சுவாசம் கிடைத்தது.

------------------------------ஓம்-----------------------------------------

கடவுளை காணவேண்டும் என பலர் கேட்டும் செவி சாய்க்காத பரமஹ்ம்சர் நரேனுக்கு செவிசாய்த்ததின் ரகசியம் தெரிந்ததா?

இந்த கருத்தை சிருங்கேரி மஹா சன்னிதானம் நவீன யுகத்திற்கு ஏற்றார்ப்போல் நகைச்சுவையுடன் கூறுகிறார். ரூபாய் நோட்டுக்களை எண்ணும் பொழுது வேறு சிந்தனை ஏற்படுமா? அதுபோல கடவுளை காண வேண்டும் எனும் ஒருமுக சிந்தனை நிச்சியம் அவரை வெளிப்பட வைக்கும் என்கிறார்.

நாமும் முயற்சி செய்வோமா?