Wednesday, October 15, 2008

நான் கடவுள்

நகரத்தின் மையத்தில் உள்ள பொதுக்கூட்ட மைதானம்.


கண்களுக்கு எட்டிய வரை மக்கள் கூட்டம். மக்கள் அனைவரும் ஒருமுக சிந்தைனையுடன்அமர்ந்திருந்தனர். ஒரு புறம் சிறு குழுவாக பக்த்தர்கள் இசைத்த பஜனை பாடல்கள் ஒலித்துக் கொண்டு இருந்தது. அந்த மண்டபம் பூக்களாலும் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேடையில் அலங்கார வளையம் மற்றும் மரத்தால் ஆன ஆசனம் என அனைத்து அம்சமும் ஒர் ஆன்மீக நிகழ்ச்சி நடைபெறப்போவதை குறித்தவண்ணம் இருந்தது.



ஆம். அனைவரும் சத்குரு ஞானேஷ்வர் வருகைக்காக காத்திருந்தனர்.

கூட்டத்தில் திடீரென சலசலப்பு. பின்பு அமைதி ஏற்பட்டது...
கூடியிருந்த கூட்டத்தின் நடுவே மக்கள் இருபுறமும் விலக ஓர் பாதை உருவானது..

சத்குரு தனது சிஷ்யர்களுடன் இரு புறமும் குழுமி இருந்த மக்களை வணங்கியபடியே மேடையை நோக்கி நடந்தார்.

பஜனை குழுவின் பாடல்கள் உச்சகட்டத்தை எட்டியது.

சிலர் அவர் கால்களை ஸ்பரிசிக்க முயன்றார்கள், சிலர் ஆவேசமாக அவரின் பெயரை உச்சரித்தனர்.

மேடையில் ஏறியதும் அனைவரையும் ஒருமுறை தனது ஞானம் நிறைந்த கண்களால் பார்த்தார்.

கூட்டம் அமைதியடைந்தது.

”எனது ஆன்மாவிற்கு அருகில் இருப்பவர்களே.....” என தொடங்கி தனது ஆன்மீக அருளுரையை துவங்க...அனைவரும் அதில் மூழ்கினர்.

ஒரு மணிநேரம் அங்கு யாரும் அசையக்கூட இல்லை. தனது ஆன்ம ஆற்றலாலும் , ஞான கருத்தாலும் மக்களை கட்டிவைத்தார் சத்குரு.

குருதேவரின் சிஷ்யர் ஒருவர் மக்களை பார்த்து கூறினார், “ சத்சங்கம் துவங்குகிறது, உங்களுக்கு சத்குருவிடம் கேட்க விரும்பும் கேள்வியை கேட்கலாம்”.


இதே நேரம் தேவலோகத்தில்.... கடவுள் இக்காட்சிகளை பார்த்துகொண்டிருந்தார்.
தன்னை பற்றி பேசும் ஆன்மீகவாதிக்கும், அதை கேட்டு ஆன்மீக வயப்பட்டிருக்கும் மக்களுக்கும் தனது திருக்காட்சியை ஏற்படுத்தும் வண்ணம் அவர்கள் முன் தோன்ற எண்ணினார்.


ஆன்மீகம் பற்றி, வாழ்வியல் பற்றி, தத்துவம் பற்றி என பல கேள்விகள் ஒவ்வொருவராக எழுந்து கேட்டார்கள். அனைத்துக்கும் சத்குரு ஞானேஷ்வர் புதிய புரிதலை ஏற்படுத்தும் கோணத்தில் பதில் அளித்துக்கொண்டிருந்தார்.

எளிய உடையில் வந்தால் அவர்களுக்கு குழப்பம் ஏற்படும் என எண்ணி அவர்கள் வழிபடும் வடிவிலேய தங்க கீடம், பட்டு பீதாம்பரம் அணித்து பரமத்மா மெல்ல நடந்து அந்த சபைக்கு நடுவே வந்தார்.

அனைவரின் கவனமும் அவரிடத்தில் திரும்பியது. அவர் மெல்ல நடந்து சத்குரு இருக்கும் மேடைக்கு அருகே வந்தார். அதற்குள் சத்குருவின் சிஷ்யர்கள் அவரை கூடி என்ன வேண்டும் என வினாவ தொடங்கினார்கள்.

பரமாத்மா புன்புறுவலுடன் கூறினார் ..”நான் கடவுள்”.

இதை கேட்ட சிஷ்யர்களும் மக்களும் கூக்குரலிட்டனர். அனைவரும் கூச்சலிடவே கைகளால் அமைதிப்படுத்திவிட்டு சத்குரு கடவுளை பார்த்தார்,

கடவுள் நம்பிக்கையுடன் சத்குருவை ஆழமாக பார்த்தார்.

சத்குரு சிஷ்யர்களை பார்த்து கூறினார்...”சத்சங்க்த்தின் நடுவே குழப்பம் விளைவிக்கும் இவரை கூட்டி சென்று எனது அறையில் அமரச்செய்யுங்கள்”


சிஷ்யர்கள் இருவர் கடவுளின் கைகளை பற்றி சத்குருவின் அறைக்கு அவரை கொண்டு சென்று அடைத்து வாயிற்கதவை சாத்தினார்கள்.

”சத்குருவிற்கு ஜெய்... சத்குருவிற்கு ஜெய்”
குழப்பம் விளைவித்தவரையும் மன்னித்துவிடும் சத்குருவின் தன்மையை கண்டு மக்கள் கோஷம் எழுப்ப துவங்கினர்.


சத்சங்கம் மீண்டும் துவங்கி மக்களுக்கு ஞானகருத்துகளை சத்குரு கூற துவங்கினார்.பின்பு மங்கள இசையுடன் சத்சங்க நிகழ்ச்சி நிறைவடைந்தது...

அந்த நகர பிரபலங்களும் பிரமுகர்களும் சத்குருவை காண வரிசையில் நின்றனர். ஆனால் சத்குரு இயல்புக்குமாறாக அனைவரையும் சந்திப்பதை தவிர்த்துவிட்டு தனது அறைக்கு திரும்புனார்.

சிஷ்யர்களை தனது அறைகதவை திறக்க சொல்லி அவர்களை வெளியே நிற்கசொன்னார்.

உள்ளே சென்ற வேகத்தில் அறைகதவை உற்புறமாக தாழிட்டு , அறுபட்ட மரம் போல் கடவுளின் காலில் விழுந்தார்.

தனது முகத்தை அவரின் கால்களில் புதைத்த வண்ணம் தழுதழுத்த குரலில் கூற துவங்கினார்...” பிரம்ம சொருபனே உங்களை பார்த்த உடனே கண்டுகொண்டேன். ஆனால் மக்கள் அறியாமையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் தான் கடவுள் என தெரிந்திருந்தால்.. தனது வாழ்க்கைக்கு தேவையான சுயநல கருத்துக்களை கேட்க துவங்குவார்கள். உங்களுடன் இருக்கும் ஆனந்தத்தை பருக தயாரக இருக்கமாட்டார்கள். இந்த எளியவனை மன்னித்தருளும்...”

தனது வருகையின் தவறை உணர்ந்த கடவுள் மறைந்தார்...


-----------ஓம்------------

கோவில், மடாலயம் என எங்கும் குவியும் மக்கள் பெரும்பன்மையாக தனது வாழ்க்கையின் தேவை பூர்த்தி செய்யும் கோரிக்கை மனதில் கொண்டிருக்கிறார்கள்.


இந்த பிறப்பை வாழும் சூழ்நிலையை படைந்தவனுக்கு நன்றி சொல்லும் இயல்பு எங்கும் காணப்படுவதில்லை.


பிறருக்காக பரார்தனை செய்தல் என்பதும் குறைந்து வாருகிறது.
தன்னை அறிதல் என்பதை காட்டிலும் தன் சுயநலத்தின்பால் மக்களுக்கு தேடல் அதிகம்.

சுயநலம் மிக மிக - கடவுளே எதிரில் வந்தாலும் நமக்கு பல சமயம் அவரை காணமுடிவதில்லை.
வேண்டுதல் என்பது தனது வாழ்க்கையில் உள்ள சிறு சம்பவத்தை வேண்டுவதல்ல.

வேண்டுதல் என்பது அதனுடன் அதுவாகவே ஆக அதனிடத்தில் வேண்டுவதை குறிக்கும்.


Sunday, October 5, 2008

கடவுளை காண்பது எப்படி?

காய்ந்த சருகாக தலைமுடி.... கண்களில் ஓர் தெய்வீக ஒளி. உடலில் குறைந்த ஆடையும் அவரை ஞான செல்வந்தராக காட்டியது.

வழக்கமாக தான் அமரும் ஆற்றங்கரை அரசமரத்தடியில் அமர்ந்து உதயமாகும் சூரியனை உற்று பார்த்துக் கொண்டிருந்தார் ஞானி.

“ஐயா குருவே ...எனக்கு வழிகாட்டுங்கள் ....” என கூறியவாரே...திடீரென ஓர் கரம் அவரின் கால்களை பற்றியது..அவரின் கால்களில் தனது தலையை வைத்து ஒருவன் கதறிகொண்டிருந்தான்.


சலனமற்ற ஓர் பாறை போன்று ஞானி உட்கார்ந்திருந்தார். அவரின் கண்கள் சூரியனை விட்டு அகலவில்லை.

“உங்களிடம் எத்தனையோ முறை கேட்டுவிட்டேன். எனக்கு கடவுளை காண வேண்டும். எனக்கு காட்டுங்கள்.... எனக்கு காட்டுங்கள்....” அவனது குரலில் ஓர் கடவுளை பார்க்க வேண்டும் என்ற உறுதி தெரிந்தது.

இன்று மட்டும் நடப்பதல்ல இந்த காட்சி... பல நாட்களாக தினம் இவன் வருவதும்..ஞானி சலனமற்று அமந்திருப்பதும் வாடிக்கையாகி விட்டது...

ஆனால் இன்று ....மெல்ல ஞானி அவனை நோக்கி திரும்பினார்.. அவன் கைகளை பற்றி அவனுடன் ஆற்றை நோக்கி நடந்தார்.

இருவரும் ஆற்றில் இறங்கினார்கள். இவனும் தனக்கு மார்பு வரை ஆற்றில் இறக்கி
ஞானி மந்திர உபதேசம் தருவார் என நினைத்தான்.

சற்றும் எதிர்பாராத விதமாக அவனின் கழுத்தை பிடித்து நீரில் அமிழ்த்தினார் ஞானி.

சுவாசம் திணறியது. திக்கு முக்காடினான்...

இறப்பின் எல்லையை உணர்ந்தான்..

சில நொடிகளுக்கு பிறகு அவனை விட்டார் ஞானி.


“யேஹ்....”
எனும் சப்தத்துடன் ஆற்றிலிருந்து வெளிவந்து பெரும் மூச்சு எடுத்தான்.

தன்னை திடப்படுத்திக் கொண்டு ஆற்றின் கரையை நோக்கி ஓடினான்.

திரும்பி பார்த்தால் ஞானி மெல்ல சலனமில்லமல் நடந்து வந்துகொண்டிருந்தார்.

அவனுக்கு கோபம் தலைக்கேறியது.“உங்களுக்கு கடவுளை காணும் வழி தெரியாவிட்டால் தெரியாது என சொல்ல வேண்டியது தானே? என்னை கொலை செய்ய வேண்டுமா? உங்களை நம்பி வந்ததுக்கு இதுதான் பலனா?”

தீர்க்கமாக பார்த்த ஞானியின் உதடுகள் அசைய துவங்கியது...”தினமும் கடவுளை காட்டு... கடவுளை காட்டு என கேட்டதால் உபயோகம் இல்லை. தண்ணீரில் மூழ்கியதும் வேறு சிந்தை இல்லாமல் சுவாசத்தை எடுக்கவேண்டும் என்பது மட்டுமே பிரதானமாக இருந்ததல்லவா? அது போல கடவுளை காணவேண்டும் என்பதை மட்டும் சிந்தையில் வைத்து முயற்சி செய். கடவுளை காணலாம்.” என்றார்

இவனக்கு புது சுவாசம் கிடைத்தது.

------------------------------ஓம்-----------------------------------------

கடவுளை காணவேண்டும் என பலர் கேட்டும் செவி சாய்க்காத பரமஹ்ம்சர் நரேனுக்கு செவிசாய்த்ததின் ரகசியம் தெரிந்ததா?

இந்த கருத்தை சிருங்கேரி மஹா சன்னிதானம் நவீன யுகத்திற்கு ஏற்றார்ப்போல் நகைச்சுவையுடன் கூறுகிறார். ரூபாய் நோட்டுக்களை எண்ணும் பொழுது வேறு சிந்தனை ஏற்படுமா? அதுபோல கடவுளை காண வேண்டும் எனும் ஒருமுக சிந்தனை நிச்சியம் அவரை வெளிப்பட வைக்கும் என்கிறார்.

நாமும் முயற்சி செய்வோமா?

Wednesday, October 1, 2008

ரசவாதம் செய்யும் முறை


ஜெயசிம்மன் வாழ்க்கையில் அனுபவிக்காத பணமோ அந்தஸ்தோ இல்லை. நீண்ட பரம்பரையாக செல்வந்தராக வாழந்த குடும்பவம் அவனுடையது.

ஆனால் தற்போதய அவனின் நிலை நேர்மாறாக அமைந்து விட்டது. ஒரு வேளை உணவுக்கே பிறரின் கையை எதிர்பார்க்கும் நிலை.வாரி கொடுத்த கையால் வாரி எடுத்து உண்ணும் நிலை ஏற்பட்டதற்கு ஒரே ஒரு காரணம் தான்.

அது - ரசவாதம்

அன்று ஒருநாள் தனது நண்பர்களுடன் உரையாடும் பொழுது ரசவாதம் எனும் விஷ(ய) வாதம் விவாதிக்கப்பட்டது. எந்த பொருளையும் தங்கமாக்கும் ரசவாத வித்தையை கற்றுக்கொள்ளும் ஆவல் அவனுக்கு கிளர்ந்தெழுந்தது. தனது செல்வ நிலையை ரசவாதம் செய்து பெருக்கி தனது பல சந்ததியினர் செல்வ நிலையுடன் வாழவைக்கும் எண்ணம் ஜெயசிம்மனுக்கு ஏற்பட்டது.

பலரை வரவழைத்தான், எத்தனையோ ஆராய்ச்சிகள் நடந்தது. சித்தர் என அழைக்கப்படவர்களுக்கு முன் தலை வணங்கினான்- அவர்களை பூஜித்தான், ஆனால் நடந்தது என்னமோ வேறு. தனது சொத்துக்கள்,குடும்பம் மற்றும் கெளரவம் என அனைத்தையும் இழந்து மண் குடிசையில் வாழும் நிலை ஏற்பட்டது.

இனி வரும் சந்ததிகளுக்கு பொருள் சேர்க்க எண்ணியவனுக்கு தனது அடுத்த வேளை உணவுக்கு அலையும் நிலைக்கு தள்ளப்பட்டான்.

சிரமம்மான நிலையில் வாழும் அவனுக்கு வரண்ட நிலத்தில் சில துளி மழை பொழிவை போல இனிப்பான ஒர் செய்தி கேட்டான். அவனது ஊருக்கு பிரம்ம ஞானி வருகிறார் என கேள்விபட்டதும் அவனது மகிழ்ச்சிக்கு அளவில்லை.

பிரம்ம ஞானி தனது யோகசக்தியாலும் ஞான சக்தியாலும் பலரை வழிகாட்டுபவர். அவரை பற்றிய அற்புத செய்திகளை பல காலங்களாக கேட்டிருக்கிறான். அவர் தனது நிலைக்கு ஓர் மருந்தாக அமைவார் என எண்ணினான். அவரால் தனக்கு ரசவாத வித்தையை கற்றுக்கொடுக்க முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை வந்தது. அவரிடம் கற்றதும் தனது இழந்த செல்வத்தை மீட்டுகொள்ள முடியும் என நம்பினான் ஜெயசிம்மன்.

பிரம்மஞானியை சந்தித்து வணங்கி நின்றான். மெல்ல கண்களை திறந்த ஞானி அவனை பார்த்து கேட்டார்... ”எனது அன்பு ஜெயா ரசவாதம் பற்றி அறிய ஆவாலா?”

தனது மன நிலையை சொல்லமலே வெளிப்படுத்திய பிரம்ம ஞானியை கண்ணீர்மல்க பார்த்தான் ஜெயசிம்மன்.

ஒர் நீர் நிறைந்த பாத்திரத்தை கொண்டுவர சொன்னார் பிரம்மஞானி. குனிந்து நிலத்திலிருந்து சிறிது மண் எடுத்து அந்த பாத்திரத்தில் மெல்ல போட்டார் பிரம்ம ஞானி.

ஆச்சரியமான மாற்றம் நிகழ்ந்தது. மண் நீரை தொட்டு பாத்திரத்தின் அடியில் செல்லும் பொழுது தங்க துகள்களாக மாறி இருந்தது.

ஜெயசிம்மனுக்கு தனது கண்களை நம்ப முடியவில்லை. இவ்வளவு எளிதாக யாரும் ரசவாதம் செய்து பார்த்ததில்லை.
ஆச்சரியம் விலகாமல் ஆச்சாரியரிடம் கேட்டான்...”குருவே இது எப்படி சாத்தியம்? மண்னை நீரில் இட்டால் பொன்னாகுமா? எதாவது மந்திரம் சொல்ல வேண்டுமா?”

அவனை அர்த்தத்துடன் பார்த்த குரு கூறினார், “ஜெயா மண்ணை பாத்திரத்தில் இடும் பொழுது தங்கத்தின் மேல் பற்று வைக்கக்கூடாது. பற்றில்லாமல் இருந்தால் பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்து பொருளும் உனக்கு தங்கமே. இதுவே ஞான ரசவாதம்”

ஜெயசிம்மனின் உள்நிலை ரசவாதம் அடைந்தது.

---------------------ஓம்-------------------------------------

பற்று என்பது இல்லாமல் இரு என்கிறார்கள் சிலர் பற்றுடன் இரு என்கிறார்கள். எதை பின்பற்றுவது ? என பலர் கேட்பதுண்டு.

ஒன்றின் மேல் ஆசை படும்பொழுது பற்று ஏற்படுகிறது அதை தொடர்ந்து சிக்கல்களும் முளைக்கிறது.

ஒரு சாரார் ஆசைபடாதே என்கிறார்கள், ஒரு சாரர் அத்தனைக்கும் ஆசைபடு என்கிறார்கள் என பலர் குழப்பதில் இருக்கிறார்கள்.

நான் புதிதாக சொல்ல ஒன்றும் இல்லை.

கெளதம புத்தன் சொன்னான்- ஆசை அறுமின்.
வள்ளுவன் எழுதினான் - பற்றுக பற்றற்றான் பற்றினை.

ஆனால் இவை அனைத்தும் முடிவல்ல. இதை பின்’பற்றினாலும்’ சில பிரச்சனைகள் ஏற்படும்.

ஆசையில்லாமல் இருக்க வேண்டும் என்பதும் ஓர் ஆசைதானே?

திருமூலனே சரியாக சொன்னார்.

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோடயினும் ஆசை அறுமின்கள்
ஆசைப்படபட ஆய்வரும் துன்பங்கள்

ஆசைவிடவிட ஆனந்தம் ஆமே.

-திருமந்திரம் 2615

ஆசை அறுப்பீர்கள் தானே?

Sunday, September 7, 2008

சிவன் எங்கே இருக்கிறார்?

ஆலமரத்தின் மேல் ஒரு குயில் மெல்ல கூவியது...

மரத்தின் அடிப்பகுதியில் குருவின் முன் அமர்ந்திருந்தான் விஸ்வநாத பிரம்மச்சாரி.

அவனது கண்கள் கலங்கி இருந்தன... தனது கைகளால் குருவின் கால்களை பற்றியவாறே பேச துவங்கினான்...”குருவே உங்களிடமிருந்து வேத சாஸ்திரத்தையும் பிரம்ம சூத்திரத்தையும் முழுமையாக கற்றுகொண்டேன். உண்மை பொருளை கூறும் அனைத்து கருத்துக்களையும் நீங்கள் எனக்கு விளக்கியுள்ளீர்கள். உங்களிடம் பணிவிடை செய்வதிலும் , உங்களுடன் இருப்பதிலும் எனக்கு நிகரில்லாத ஆனந்தம் கிடைக்கிறது. இப்படி இருக்க என்னை ஏன் வேறு இடத்தில் இருக்கும் ஒரு ஞானியை குருவாக ஏற்க கட்டளை இடுகிறீர்களே. இது நியாயமா?”..

அவனை மெல்ல தனது கரத்தால் தூக்கி குரு அவனை தீர்க்கமாக பார்த்தார்..”விஸ்வநாதா..! சாஸ்திர ஞானத்தை மட்டும் தான்
என்னால் உனக்கு வழங்க முடியும். உனக்கு பிரம்ம ஞானத்தை வழங்க குரு ஒருவர் காத்திருக்கிர்றார் . காசிக்கு அருகில் இருக்கும் வனத்தில் வசிக்கும் அவரை கண்டு ஞானம் அடைவாயாக...வளர்ச்சி அடையும் வரைதான் புழு கூட்டில் வசிக்க முடியும். அதன் பின் வண்ணத்து பூச்சியாக மாற கூட்டை கடந்து சென்றாக வேண்டும்...சென்று வா”...என்றார் குரு.


பிரிய மனமில்லாமல் தனது குருநாதரிடமிருந்து விடைபெற்றான் விஸ்வநாத பிரம்மச்சாரி..




காசியை அடைந்து அங்கு அவன் பெயரில் வீற்றிருக்கும் விஸ்வநாதரை தரிசித்துவிட்டு , நகரின் வெளியே இருக்கும் வனத்தை நோக்கி நடந்தான்.

வனத்திற்கு உள்ளே இரு நாட்களாக நடந்தும் யாரும் கண்களுக்குதட்டுபடவில்லை. தனது குரு அனுப்பியதன் நோக்கம் புரியாமல் குழப்பம் மேலோங்க பயணத்தை தொடர்ந்தான். பசியும் தாகமும் அவனை சோர்வடைய செய்தது. வழியில் தென்பட்ட தடாகத்தில் நீர் அருந்த குனிந்தான்.

அந்த தடாகத்தின் மேல்பரப்பில் அருகில் இருந்த கோவில் கோபுரம் நிழலாகதெரிந்தது... நடுக்காட்டில் கோவில் இருப்பதை கண்டு ஆச்சரியத்துடன் அதை அடைந்தான்..

கோவில் வாசலை அடையும் முன் உள்ளே இருந்து ஓர் குரல் பேச துவங்கியது.....
”வா விஸ்வநாத உனக்காகத்தான் காத்திருக்கிறேன்...உனது குரு என்னை பார்க்கவே அனுப்பினார்..”

தனது ஞான குருவை காணும் ஆவலில் கோவிலின் உள்ளே சென்றான் விஸ்வநாதன்.

அங்கே கண்ட காட்சி அவனை மாபெரும் அதிர்ச்சி அடைய செய்தது...


பரதேசி போன்ற தோற்றம் கொண்ட ஒருவர்...கருவறையில் இருக்கும் சிவலிங்கத்தின் மேல் தனது கால்களை வைத்து ஆட்டியவாறு தலையில் கைகளை வைத்து கொண்டும் படுத்திருந்தார்.

விஸ்வநாதனுகோ கோபத்தை கட்டுபடுத்த முடியவில்லை. “எனது குருஉங்களை பற்றி உயர்வாக கூறி அனுப்பினார். நீங்கள் அவர் சொன்னதற்கு நேர்மாறாக அல்லவா இருக்க்கிறீர்கள். ஐயா சற்று சிவன் மேல் இருக்கும் காலை எடுத்து கீழே வைக்க கூடாதா?” என்றான்.

அந்த பரதேசி சற்றும் அவனது கருத்துக்களை காதில் போட்டுக்கொள்ளாமல்அவனை பார்த்து கூறினார்..”ஓ நீ அவ்வளவு பக்திமானா? உனக்குவேண்டுமென்றால் எனது கால்களை எடுத்து வேறு இடத்தில் வை. என்னால் கால்களை எடுக்க முடியாது..” என்றார்.

கோபத்தின் உச்சகட்டத்திற்கு சென்ற விஸ்வநாதன் , அவரின் கால்களை பற்றி சிவலிங்கத்தின் மேலிருந்து எடுத்து வேறு இடத்ததிற்கு மாற்ற முயற்சிசெய்தான்.
கால்களை எங்கு வைத்தாலும் அங்கே ஓர் சிவலிங்கம் முளைத்தது...

பல இடங்களில் மாறி மாறி வைத்தான்...அனைத்து இடத்திலும் சிவலிங்கம்தோன்றின...

கடைசியல் முடிவுக்கு வந்தவனாக...

தனது தலையில் அவரின் கால்களை வைத்து கொண்டான்...

தானே சிவமானான்...

----------------------------------ஓம்-----------------------------
திருவடி ஞானஞ் சிவமாக்கு விக்குந்
திருவடி
ஞானஞ் சிவலோகஞ் சேர்க்குந்
திருவடி
ஞானஞ் சிறைமல மீட்குந்
திருவடி
ஞானமே திண்சித்தி முத்தியே.
திருமந்திரம்
- 1598

ஞானகுருவின் திருவடி நம்மை முழுமையான பரப்பிரம்ம நிலைக்கு கொண்டுசெல்லும். வேத நூல்களோ அல்லது தத்துவமோ எட்ட முடியாத எல்லையை குருவின்கருணை எளிதில் எட்டிவிடும்.


Friday, September 5, 2008

பிரம்ம ஞானத்தை தேடு ...


கங்கைக்கரை பகுதி.....மெல்லிய தேவலோக இசை போன்ற பாடல் காற்றில் கசிந்து வந்தது....


ஒளிரும் தேகமும் ஞானம் ததும்பும் முகமுடன் பிரம்ம ஞானி அமர்ந்திருந்தார்.
அவரின் ஆசனத்தை சுற்றி சிஷ்யர்களும் பொதுமக்களும் ஆனந்தமயமான நிலையில் இருந்தனர்.

இறைநாமத்தை சங்கீதமாக ஒரு குழு இசைத்துக் கொண்டிருந்தது.
இவை அனைத்தையும் மெளன சாட்சியாக ரசித்துக்கொண்டிருந்தாள் கங்கை.. தேவலோகத்திலிருக்கும் அனைவரும் தங்கள் இடத்தை விட்டு அங்கு வந்துவிடலாம் என எண்ணும் அளவிற்கு தெய்வீக சூழ்நிலையை அங்கு காண முடிந்தது.

தன்முன்
னே ஓர் உருவம் நிழலாடுவதை கண்ட ஞானகுரு கண்களை திறந்தார். எதிரில் பட்டுவேஷ்டி அணிந்து உடல் முழுவதும் சந்தனம் பூசிய நிலையில் ஒருவர் வணங்கி நின்றார். கைகளில் தங்கத்தால் ஆன தட்டும் அதில் வைரம் வைடூரியம் என விலைமதிக்க முடியாத பொருட்கள் நிறைந்து வழிந்தது..

பணக்கார தோரணை கொண்ட அந்த மனிதர் ஞானகுருவை பார்த்து..” உலக மக்களை உயர்நிலைக்கு அழைத்து செல்லும் குருவே...உங்களிடம் எத்தனையோ முறை பிரம்ம ஞானத்தை
உபதேசிக்க கேட்டேன் ஆனால் நீங்கள் மனம் இளகவில்லை. என்னிடம் இருக்கும் விலைமதிக்க முடியாத செல்வத்தை உங்கள் காலடியில் சமர்ப்பிக்கிறேன். எனக்கு பிரம்ம ஞானத்தை உபதேசியுங்கள்...” என கேட்டார்.


ஞான குரு மெல்ல எழுந்து தனது காவி துணியில் அனைத்து செல்வங்களையும் போட சொன்னார். அவரின் காவித்துணியில் அனைத்தும் போடப்பட்டதும் அதை மூட்டையாக கட்டி, தலைக்கு
மேல் உயர்த்தி யாரும் எதிர்பாராத வண்ணம் கங்கையில் எறிந்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத பணக்காரர் கங்கை நீரில் பாய்ந்து அந்த மூட்டையை பிடிக்க நீந்தினார்.


கங்கையின் வேகத்திற்கு மூட்டையும் அவரும் அடித்துச்செல்லப்பட்டார்கள்.
அதுவரை கண்களை மூடி அமர்ந்த்திருந்த சிஷ்யர்கள் நீரில் செல்வந்தர் குதித்த சப்தம் கேட்டு கண்களை திறந்து பார்த்தனர்.

குழப்பம் கொண்ட சிஷ்யர்கள் குருவிடம் கேட்டார்கள்...”குருதேவா என்ன நடக்கிறது? அவர் கங்கையில் குதித்து என்ன தேடிக்கொண்டிருக்கிறார்..?”


தனது ஆசனத்தில் அமந்த ஞான குரு புன்புறுவலுடன் சிஷ்யர்களை பார்த்து கூறினார்...

”அவர் பிரம்ம ஞானத்தை தேடுகிறார்”


----------------------ஓம்------------------------------------------------


நம்மில் பலர் ஆன்மீக உயர்வு நிலையை பணத்தை வழங்குவதன் மூலம் பெறலாம் என எண்ணுகிறார்கள்.

என்னிடத்தில் பலரும் தீட்சை தாருங்கள் அதற்காக நன்கொடை தருகிறோம் என கேட்டதுண்டு.
அப்பொழுது ஞானகுரு கதை எனக்கு நினைவு வருவதுண்டு.

செல்வந்தருக்கு விலைமதிக்க முடியாத செல்வம் பிரம்ம ஞானத்திற்கு ஈடாக தெரிந்ததால்
குருவும் அது பணக்காரனின் பிரம்ம ஞானம் என குறிப்பிடுகிறார்.

கடவுளை பார்க்க கோவிலில் “சிறப்பு” நுழைவாயில் வழியாக செல்லுவதிலிந்து ஆரம்பிக்கிறது நமது ஆணவ செருக்கு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

Thursday, September 4, 2008

ஞானிக்கும் சித்தருக்கும் என்ன வித்தியாசம்?

இளஞ்சூரியன் தனது கதிர்களை சுருக்கிக்கொண்டிருக்கும் மாலை வேளை. தனது சிஷ்யர்களுடன் பயணப்பட்டு கொண்டிருந்தார் பிரபுலிங்கா எனும் ஞானி.
கோகர்ணம் எனும் அழகிய நகரத்தை அடைந்தார்கள்.


கடற்கரையோரம் அமர்ந்து சிஷ்யர்களுடன் சத்சங்கமித்தார் ஞானபுருஷர். தனது சிஷ்யர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவரிடமிருந்து விரிவானதும் ஆழமானதுமான பதில்கள் வெளி வந்தவண்ணம் இருந்தது.


அவரின் முதன்மை சிஷ்யன் பணிவுடன் அவர் முன்வந்து கேள்வி கேட்க துவங்கினான்..

“சத்குரு பல சித்துகள் கைவரப்பட்ட சித்தர் கோரக்நாத் இந்த ஊரில் வாழ்ந்து வருகிறார். அவரின் ஆன்மீக நிலைக்கும் உங்கள் ஆன்மீக நிலைக்கும் என்ன வித்தியாசம்?”

“அனந்தா... எனக்கு எப்படி அவரின் நிலை தெரியும்? ”...தனது உடலை சுட்டிகாட்டி தொடர்ந்தார் ஞானி, “...இதற்கு இதை தவிர அன்னியமான வஸ்து கிடையாது”.

சிஷ்யனுக்கோ அவரின் பதில் திருப்தியை கொடுக்கவில்லை. குருவுக்கு தெரியாமல் சித்தர் கோரக்நாதை சந்தித்து தனது குரு சொன்ன கருத்துக்களை கூறினான்.

எனது அருமை தெரியாமல் உனது குரு அவ்வாறு கூறி இருக்கலாம். நாளை அவர் இருக்கும் இடத்திற்கு நான் வந்து சந்திக்கிறேன். அப்பொழுது அவர் என்னை பற்றி அவர் மட்டுமல்ல அனைவரும் புரிந்துகொள்வீர்கள்” என்றார் கோரக்நாத் சித்தர்.


அதிகாலை நேரம் தனது சிஷ்யர்களுடன் தியானத்தில் இருந்தார் ஞானி பிரபுலிங்கா... சித்தர் அவரின் இருப்பிடத்திற்கு வந்தார்...


கண்களை திறந்து பார்த்த ஞானி அவரை வரவேற்று அமரவைத்தார்.அவர் வந்த காரணத்தை கேட்டார்.

“எனது பெயர் கோரக்நாத், என்னை பற்றி தெரியாது என உங்கள் சிஷ்யர்களிடம் சொன்னீர்களாமே? என்னை பற்றி கூறவே வந்திருக்கிறேன். அஷ்டமா சித்தியை கைவரப்பட்டவன் நான். எனது உடலை காயகல்பமாக்கி இருக்கிறேன்...” என கூறியவாரே தனது இடுப்பில் வைத்திருந்த வாளை எடுத்து தனது மார்ப்பில் குத்தினார்....


அனைத்து சிஷ்யர்களும் அந்த பயங்கரமான செயலால் அதிர்ச்சி அடைந்து எழுந்து நின்றார்கள்...
ஆனால் கோரக்நாத் கையில் இருந்த வாள் வளைந்து போயிற்று. அவர் உடல் காயகல்பம் ஆனதால் வாளைவிட கடினமாக மாறியிருந்தது.

கோரக்நாத் ஞானி பிரபுலிங்காவை பெருமையுடன் பார்த்தார்...அவர் பார்வையில் உன்னால் இதுபோல முடியுமா என்று கேட்பது போல இருந்தது.

தனது சிஷ்யர்களிடம் வாள் கொண்டு வர சொன்னார். அதை கோரக்நாத்திடம் கொடுத்து தனது உடலில் பாய்ச்ச சொன்னார்....


முழுவேகத்துடன் வாள் வீசினார் கோரக்நாத்.... வாள் பிரபுலிங்காவின் உடலில் புகுந்து மறுபுறம் வெளியே வந்தது...
மெல்ல வாளை சுழற்றினாலும் காற்றில் சுழலுவதை போல சுழன்றது...அவர் உடல் அங்கு இருந்தாலும் வாள் அதை தொட முடியவில்லை...


ஞானி பிரபுலிங்கா மெல்ல புன்புறுவலுடன் கூறினார்....”சித்த நிலை என்பது உனது சித்தத்துடன் நின்றுவிடுவது...ஞான நிலை என்பது நான் எனும் அகந்தையை வேறுடன் எடுத்து சித்தத்தை கடந்து சுத்த வெளியில் இருக்கும் தன்மை... ஒருவன் ஞானம் அடைந்ததும் ஆகாசத்தை போல ஆகிவிடுகிறான்..அவனை எதுவும் தடுக்கவோ அசுத்தப்படுத்தவோ முடியாது...ஞானி எல்லை அற்றவன்...சித்தன் உடல் எனும் எல்லைக்கு உட்பட்டவன்..”

சித்தர் கோரக்நாத் ஞானியின் கால்களில் பணிந்தார்...தனக்கு ஞானத்தை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்...

சத்குரு பிரபுலிங்கா பிரம்ம சொரூபத்தை அவருக்கு அளிக்கதுவங்கினார்...


----------------ஓம்---------------

ஆன்மீகத்தை தேடிவரும் பக்தர்கள் அனைவரும் சரியான பாதையில் செல்வதில்லை.
ஞானத்தை தேடாமல் சிலர் காட்டும் போலி வித்தையில் மதிமயங்கி மாயத்தில் விழுகிறார்கள்.

வாயிலிருந்து லிங்கம் எடுப்பவருக்கும் , கடன் தொல்லை நீங்க தீட்சை தருகிறேன் என விளப்பரம் செய்பவர்களிடம் செல்லும் மக்கள் உண்மை நிலையை விளக்கும் ஞானிகளிடன் செல்வதில்லை. அந்த ஞானி சமாதி அனதும் அவர் சமாதியில் தூமம் காட்டும் இழிநிலையிலேயெ இருக்கிறார்கள்..

உள்ளத்தில் உள்ளே உளபல தீர்த்தங்கள் என திருமூலர் கூறியவாக்கை கருத்தில் கொண்டு பிரம்ம ஞானத்திற்கு பாடுபடுவோம்...

Tuesday, September 2, 2008

தூரப்போ....


குகன் எனும் ஒரு பாமர விவசாயி வாழ்ந்துவந்தான் . சிறிதளவு படிப்பறிவு இருந்ததால் பல ஆன்மீக புத்தகங்களை படித்தான். அதன்விளைவாக தனக்கும் ஆன்மீக ரீதியான முன்னேற்றம் ஏற்பட்டு முக்தி அடையவேண்டும் எனஎண்ணினான். அந்த ஊரில் உள்ள கோவில் அர்ச்சகரை அணுகி ஆன்மீகவாழ்க்கைக்கு என்ன செய்யவேண்டும் என விசாரித்தான்.

"நீர் நல்ல அதிர்ஷ்டகாரந்தானையா ... பக்கத்தூரில் ஸ்ரீ-ல-ஸ்ரீ பக்தானந்தா ஸ்வாமிகள் அவர்களே விஜயம் பண்ணிருக்கார் . அவர்கிட்ட போன மந்திரஉபதேசம் செய்வார். அதை ஜபிச்ச போதும் உனக்கு எல்லாம் கிடைக்கும். சுவாமிகோபக்காரர் , சுவாமிகள் கிட்ட போகும்போது பவ்யமா அடக்கமா போகணும். உபதேசம் வாங்கறதுக்கு பதிலா சாபம் வங்கிடாதே சரியா? "..என கூறியஅர்ச்சகரை பார்த்து நன்றி கூறிவிட்டு பக்கத்து ஊருக்கு பயணமானான்.

குகன் எதிர்பார்த்ததை விட அங்கு மக்கள் கூட்டம் கடல் போல திரண்டிருந்தது. தனது வீட்டில் விளைந்த சிறிய மாம்பழங்களை கணிக்கையாக கொடுக்க எடுத்துவந்திருந்தான். சுவாமிகளை நெருங்க முடியுமா என சந்தேகம் கொள்ளும்வண்ணம் மக்கள் நெருக்கம் அதிகமாக இருந்தது. பலமணிநேரம் காத்திருந்தான், சுவாமிகளை பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லை.

சுவாமிகளின் குளத்தில் குளித்து விட்டு பூஜைக்கு வரும் வழியில் கூட்டம்குறைவாக இருப்பதை கண்டு வேகமாக தரிசிக்க ஓடினான். சுவாமிக்கு அருகில்வரும் சமயம் குகன் கால் தடுக்கி சுவாமிகளின் பாதத்தில் விழுந்தான். மாம்பழங்கள் திசைக்கு ஒன்றாக பறந்தன...

அதைகண்டு திடுக்கிட்ட சுவாமிகள், சினம் கொண்டு "தூர போ " எனஆத்திரத்துடன் காலால் அவனை எட்டி உதைத்தார்.

வெள்ளை மனம் கொண்ட குகன், சுவாமி தனக்கு உபதேசம் அளித்துவிட்டார் எனநம்பினான். தன்னை காலால் தொட்டு ஸ்பரிச தீட்சை கொடுத்ததாகவும் "தூரப்போ" என்ற மந்திரம் கொடுத்ததாகவும் முடிவுசெய்து யாரும் தொந்திரவுசெயாதவண்ணம் வனத்தில் சென்று தவம் இருக்க துவங்கினான்.

பல வருடங்கள் கடந்தது...

ஒருநாள்....வனத்தில் ஒரு இடத்தில் கரையான் புற்றுக்கு உள்ளே இருந்துதொடர்ந்து ...'தூரப்போ" எனும் மந்திர ஒலி கேட்டவண்ணம் இருந்தது.
திடீரென தனது உடலில் ஏற்பட்ட அதிர்வால் கரையான் புற்றை உடைத்துகொண்டு வெளிப்பட்டார் ஒரு முனிவர்.

'தூரப்போ" எனும் மந்திரம் அவருக்கு ஸித்தி ஆயிருந்தது. தனது உடலை நீட்டி சரி செய்து நடக்க துவங்கினார். வழியில் காட்டு மரம் ஒன்று வேருடன் விழுந்துபாதையை மறைத்துக்கொண்டிருந்தது.

பிரம்மாண்டமான அந்தமரத்தை கூர்ந்து பார்த்து கூறினார் "தூரப்போ..."

பல யானைகள் கட்டி இழுக்க வேண்டிய அந்த மரம், அவரின் ஒரு சொல்லுக்குகட்டுப்பட்டது போல பல அடிதுரம் தூக்கி எறியப்பட்டது.

தனது மந்திரம் வேலை செய்வதை உணர்ந்தார் குகன் எனும் மாமுனி.
கட்டிற்கு அருகில் இருக்கும் ஊருக்கு பயணமானார். அங்கு எளிமையாக தனதுவாழ்கையை அமைத்து கொண்டார்.

யார் வந்து தனது கஷ்டத்தை கூறினாலும் , அந்த கஷ்டத்தை மனதில் நினைத்து ஒருமுறை தனது மகாமந்திரத்தை ஜெபிப்பார்...."தூரப்போ" உடனடியாகஅவர்களின் கஷ்டம் விலகிவிடும்.

நோயுற்றவர்கள் வந்தால் நோயை நினைத்து .."தூரப்போ" என்றதும் உடனடியாககுணமடைவார்கள். மெல்ல தூரப்போ சுவாமிகளின் புகழ் பரவ ஆரம்பித்தது.

வயது முதிர்த நிலையில் ஒரு துறவி துரப்போ சுவாமிகளை பார்க்க தனதுசிஷ்யர்களுடன் வந்திருந்தார். தனக்கு உடல் முழுவதும் ஒருவித ரோகம்வந்திருப்பதாகவும், துரப்போ சுவாமிகளின் சக்தியை கேள்விப்பட்டு வந்ததாகவும் தன்னை குணப்படுத்தவேண்டும் என வேண்டினார்.

முதிர்ந்த துறவியை கண்ட துரப்போ சுவாமிகளின் எழுந்து அவரின் கால்களில்விழுந்தார். "....மகா குரு ஸ்ரீ-ல-ஸ்ரீ பக்தானந்
தா சுவாமிகள் அவர்களே நீங்கள் தான் எனது குரு. உங்கள் உபதேசத்தால் தான் இந்த சக்தி கிடைத்தது. நீங்கள் வேண்டுவதா? கட்டளை இடுங்கள் உங்கள் சிஷ்யன் நான் உடனேசெய்கிறேன் என்றார்.." துரப்போ சுவாமிகளின்.

தனது மந்திரத்தை மீண்டும் மனதில் நினைத்து குருவை பார்த்தார். அவர் உடலில்உள்ள ரோகம் நீங்கியது.

பக்தனந்த சுவாமிகளுக்கு ஒரே குழப்பம், இவருக்கு நாம் உபதேசித்தோமா எனசந்தேகம் கொண்டு துரப்போ சாமிகளிடம் கேட்டார்.

தனக்கு நேர்ந்த அனுபவங்களை கூறினார் துரப்போ சுவாமிகள்.

தனது ஆணவத்தாலும் கோபத்தாலும் தவறு நடந்ததை உணர்த்த பக்தனந்தசுவாமிகள் ...."துரப்போ சுவாமிகளே எனது அலட்சியத்தாலும் ஆணவத்தாலும் அன்று உங்களிடம் அப்படி நடந்து கொண்டேன். எனது ஆணவம் என்னை விட்டுபோக என் ஆவணத்தை பார்த்து தூரப்போ எனும் மந்திரத்தை சொல்லி இந்தபாவிக்கு மோட்சம் அளியுங்கள் .." என வேண்டினார்.

"எனது குருநாதா...எனக்கு நீங்கள் தீங்கு எதையும் விளைவிக்க வில்லை. உங்களை ஆணவம் கொண்டவராக பார்க்கும் அளவுக்கு நான் வளர்ந்துவிடவும் இல்லை. நீங்கள் அளித்த மந்திரம் உங்களையும் என்னையும் இணைத்துநன்மையையே ஏற்படுத்தி உள்ளது. இனிவரும் காலத்தில் உங்களின் எளியசிஷ்யனாக இருக்க ஆசைப்படுகிறேன்...இதற்கு நீங்கள் அனுமதி அளிக்கவேண்டும்..." என தூரப்போ சுவாமிகள் வேண்டினார்.

பின்பு தூரப்போ சுவாமிகள் சப்தமாக கூறினார்..."எனக்குள் இருக்கும் மந்திர ஆற்றலை பார்த்து கடைசியாக சொல்கிறேன் ...

"தூரப்போ"....

அங்கே துரப்போ சுவாமிகள் மறைத்து குகன் நின்று இருந்தான்...
தனது குரு பக்தனந்
தா வுடன் எளிய சிஷ்யனாக பயணமானான் குகன்.

-------------------------ஓம்--------------------------

குரு நிலையை உணர்தவர்கள் அனைத்தையும் துறக்க முடியும்...
குருவை ஆழமாக பூஜிப்பவர்கள் தான் குருவை உணர முடியும்... குரு அருள் பெறமுடியும்...

தெளிவு குருவின் திருமேனி காண்டல் என திருமூலர் கூறிய வாக்கு மிகவும் சக்திவாய்ந்தது தானே?