Sunday, November 22, 2009

எலுமிச்சை புல்

திருவண்ணாமலை மலைப்பாதையின் மேல் குருவும் சிஷ்யனும் நடந்து கொண்டிருந்தார்கள். அங்கே இருக்கும் விருப்பாச்சி குகையில் தியானம் செய்ய இருவரும் நடக்க துவங்கி அரை மணி நேரம் கடந்துவிட்டது.

குரு மெளனமாக பின்னால் வர சிஷ்யன் வேகமாக நடந்து கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் குருவின் காட்சியில் மறைந்து வெகு தொலைவுக்கு சென்றுவிட்டான்.

குரு மெல்ல நடந்து கொண்டிருந்தார்.

சில நிமிடங்கள் கரைந்தன... தூரத்தில் சோர்வுடன் சிஷ்யன் அமர்ந்திருந்தான்.குரு கையில் ஒர் பச்சிலையுடன் நடந்து வந்தார். சிஷ்யனிடம் கொடுத்து முகர்ந்து பார்க்க சொன்னார்.

அவர் அந்த பச்சிலையை முகர்ந்ததும் அதில் எலுமிச்சை மணம் அடித்தது. சிஷ்யனின் மனதுக்கும் உடலுக்கும் ஒரு உற்சாகம் கிடைத்தது.

“குருவே இது என்ன இலை?”

“இதன் பெயர் எலும்மிச்சை புல். சாதாரண புல் போல தெரிந்தாலும் எலுமிச்சை மணம் கொண்டது.”

“குருவே உங்களிடம் ஒரு கேள்வி. தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது.”

புன்னகைத்தவாறே...“ம்..” என்றார் குரு.

”ஒருவனுக்கு ஆன்மீக உயர்வு அடைய குரு அவசியம் தானா?”

”விழிப்புணர்வு ஒருவனுக்கு கிடைக்கும் வரை அவனுக்கு குரு அவசியம்”

“விழிப்புணர்வு என்றால்...?”

“நான் கொடுத்த எலுமிச்சை புல் முகர்ந்தாய் அல்லவா? அதற்கு முன் இங்கே இருக்கும் எலுமிச்சை புல் பற்றி உனக்கு தெரியுமா?”

“தெரியாது”

“நான் வரும் வரை இங்கே அமர்ந்திருதாயே.. பார் உன் கால்களுக்கு அருகிலேயெ அந்த புல் புதர் போல வளர்ந்திருக்கிறது. உன் கால்களுக்கு கீழே அந்த பொருள் இருப்பது தெரியாமல், இன்னொருவர் உனக்கு தரும் வரை நீ அமர்ந்திருக்கிறாய். விழிப்புணர்வு கொண்டவனாக இருந்தால் உனக்கே தெரிந்திருக்கும்.”

“அப்படியானால் விழிப்புணர்வு வரும் வரை குரு தேவை அல்லவா?”

“விழிப்புணர்வு வரும் வரை குரு தேவை. விழிப்புணர்வு வந்த பின் குரு எல்லா இடத்திலும் இருப்பதை நீ உணர்வாய்”

”அப்படியானால் அனைவருக்கும் குரு தேவையா?”

“ஆம். அதனால் தான் ஆண்டாண்டு காலமாக இம்மலையில் எலும்மிச்சை புல் வளருகிறது. உன்னையும் என்னையும் போல பலர் இங்கே வந்து இதே கேள்வியையும் பதிலையும் விவரிக்கிறார்கள்.”

---------------------------ஓம்-------------------------------
குரு சிஷ்ய உறவு என்பது மனித வாழ்க்கைக்கு அப்பாற்பட்டது. எத்தனையோ குரு சிஷ்யர்கள் தங்களின் இறப்புக்கு பிறகும் அடுத்த பிறவியிலும் உறவை தொடர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

அதனால் தான் குரு சிஷ்யனுக்கு உபதேசம் செய்வதை அனேகமாக ஆலமரத்தின் அடியில் அமர்ந்து விவரிப்பதாக விளக்குகிறார்கள். ஆலமரம் போல விழுதுகளுடன் கிளைப்பது குரு சிஷ்ய பாரம்பரியம்.

இக்கதையில் எலுமிச்சை புல் என்பது ஞானத்தின் வடிவமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. எலுமிச்சை புல் என்பதற்கு பதில் பிரம்ம ஞானம் என மாற்றி படித்துப்பார்த்தால் கதையின் முழுமை புரியும்.

சீனத்தில் அதிகமாக விளையும் பொருளான இது ஜென் முறையின் வடிவமாக கருதப்படுகிறது. ஓஷோ தனது தாவோ பற்றிய உரையில் கூறும் பிரசித்திபெற்ற வரிகள் “புல் தானே வளர்கிறது”.

15 comments:

குசும்பன் said...

இந்த கேள்வியை கீழேயே கேட்டு இருந்தா அவ்வளோ தூரம் மலை ஏறுவது மிச்சம் ஆகியிருக்குமுல்ல!:)

T K Arumugam said...

நிறைய பேர் தேவையில்லாத்தையும் இல்லாததையும் தேடிக்கொண்டு காலம் தள்ளுகிறார்கள். ஆனால் தேவைபடுவது காலடியிலேயே இருப்பதை யாரும் கண்டுகொள்வதில்லை. அதற்க்கு குரு கண்டிப்பாக தேவைதான்.
நிறைய என் சந்தேகங்களுக்கு தங்களுடைய வலைமனை பதிலாக இருந்துள்ளது

நன்றி

வாழ்த்துக்கள்

அது ஒரு கனாக் காலம் said...

அருமையான சம்பவம் ( கதை ) .... சரியான பதில்/விளக்கம்.

தேவன் said...

தெளி ! தெளிந்தபின் தெரிவி !!

அருமை !!!

Rajakamal said...

விழிப்புணர்வு பற்றி அழகான விளக்கம். இப்தொல்லாம் குரு சிஷ்ய உறவு தவறாக புரிந்துக் கொள்ளப் படுகிறது. அருமையான விளக்கக் கதை.

Mahesh said...

எளிய விளக்கம்... .அருமை !!

கிளியனூர் இஸ்மத் said...

அருமையான விளக்கம் ஆழமான கதை....உங்கள் அனுமதியுடன் இக்கதையை ஏகத்துவ மெய்ஞ்ஞான வலைப்பூவில் மீள் பதிவாகப் போடுகிறேன்-நன்றி

ஆ.ஞானசேகரன் said...

//“விழிப்புணர்வு வரும் வரை குரு தேவை. விழிப்புணர்வு வந்த பின் குரு எல்லா இடத்திலும் இருப்பதை நீ உணர்வாய்”//

உணர்ந்தேன் .... மிக்க நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு குசும்பன்,

கீழே இருப்பதால் தான் அவனை மேலே கூட்டிவந்தார் குரு :)

உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஆறுமுகம்,

திரு சுந்திரராமன்,

திரு கேசவன் கு,

திரு ராஜ் கமல்,

திரு மகேஷ்,

திரு கிளியனூர் இஸ்மத்,

திரு ஞானசேகரன்,


உங்கள் வருகைக்கு நன்றி

கோவி.கண்ணன் said...

//குரு சிஷ்ய உறவு என்பது மனித வாழ்க்கைக்கு அப்பாற்பட்டது. எத்தனையோ குரு சிஷ்யர்கள் தங்களின் இறப்புக்கு பிறகும் அடுத்த பிறவியிலும் உறவை தொடர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
//

இதைத்தான் பல சாமியார்கள் சிஷ்'ய' என்பதற்கு பதிலாக 'யை' போட்டு குழப்பிக் கொள்கிறார்கள்.

:)

சரி, எலுமிச்சை புல்லில் எழுமிச்சை சோறு செய்ய முடியுமா ?

Siva Sottallu said...

அருமையான பதிவு ஸ்வாமி. மிக்க நன்றி.

Chiruthuli said...
This comment has been removed by the author.
Chiruthuli said...

ஸ்வாமி ஓம்கார் அவர்களுக்கு



தங்களின் "எலுமிச்சை புல்"
குரு சிஷ்ய நன்றாக இருந்தது கதை



அன்புடன்

சிறுதுளி

Naveen said...

சுவாமி இந்த கேள்வியை நானும் உங்களிடம் கேட்டிருகிறேன். விழிப்புணர்வு தான் வந்தபாடு இல்லை :) அருமையான பதிவு, நன்றி சுவாமி.