Friday, December 26, 2008

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

பூபாளம் இசைக்கும் காலை நேரம்....


சத்குரு விஷ்வ தீர்த்தர் தனது நித்திய பூஜையில் ஈடுபட்டிருந்தார். மங்கள வாத்தியம் முழங்க தீபாரதனை செய்தார் மூத்த சிஷ்யன் ஜகதீஷ்.

இறைவனின் சன்னிதானத்திலிருந்து படையல் செய்த பொருட்களை சிஷ்யர்கள் அனைவருக்கும் வழங்கினார்கள். அனைவரும் பக்திச் சுவையாலும் , பிரசாத சுவையாலும் மகிழ்ந்து கலைந்தனர்.

சத்குரு தனது ஆசனத்திலிருந்து எழுந்து தனது அறை நோக்கி நடக்க ஆரம்பித்தார். அவரின் கால்கள் நடந்தாலும் கண்கள் ஜகதீஷை பார்த்த வண்ணம் இருந்தது...

குருவின் தீர்க்கமான பார்வையை உணர்ந்த ஜகதீஷ் அவரின் பின்னால் நடக்க துவங்கினான்.

அறைக்குள் வந்ததும் ஜகதீஷை நோக்கி கேட்டார்... “ எனது பிரிய ஜகதீஷ் சில நாட்களாக உனது செயல்களில் ஓர் வித்தியாசம் இருந்ததை உணர்கிறேன். முன்பு நைவேதியம் செய்யும் பிரசாதத்தை அனைவருக்கும் வழங்குவதில் முனைப்பாக இருப்பாய் , ஆனால் இப்பொழுது ஒதுங்கி இருக்கிறாயே என்ன காரணம்?”

தனது நிலையை குரு இவ்வளவு உன்னிப்பாக கவனிப்பார் என எதிர்பார்க்காத ஜகதீஷ் தனது நிலையை கூற துவங்கினான்.. “ குருவே ஆசிரம வாழ்க்கை துவங்கிய பொழுது பக்தி பூர்வமாக இருந்தேன். நித்திய பூஜை, நைவேதியம் என அனைத்திலும் ஈடுபட்டேன். தற்சமயம் தெளிவு பெற்றேன். நாம் படைக்கும் நைவேதியதை இறைவன் அருந்துகிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறைவன் சாப்பிட்டால் நாம் பிறருக்கு எப்படி பிரசாதமாக வழங்க முடியும்? இது போன்ற தர்க்கம் எனக்குள் தோன்றியதால் என்னால் பிரசாதம் வழங்குவதில் ஈடுபட முடியவில்லை குருவே...”

அவனை ஊடுருவி பார்த்த குரு, “ ஜகதீஷ் உனது விருப்பபடியே செய். நமது வேதாந்த வகுப்புக்கு நேரமாகி விட்டது. வகுப்பறையை தயார் செய். சிறிது நேரத்தில் நானும் வருகிறேன்” என்றார்.


இறைவணக்கத்துடன் வகுப்பு துவங்கியது.. சென்ற வகுப்பில் புதிய பாடம் இன்று போதிக்கபடுவதாக குரு சொன்னதால் அனைவரும் ஆர்வமாக இருந்தனர்..

கால்கள் இரண்டையும் இணைத்து யோக முத்திரையில் அமர்ந்திருந்த சத்குருவை பார்க்க தக்‌ஷிணாமூர்த்தியை தரிசனம் செய்வதை போல இருந்தது.

அனைத்தும் பூர்ணமான வஸ்துவிலிருத்தே தோன்றியது என பொருள் கொண்ட “பூர்ணமிதம்” எனும் ஈஷாவாசிய உபநிஷத்தில் வரும் மந்திரத்தை விளக்கினார் குரு விஷ்வ தீர்த்தர்.

அனைத்து மாணவர்களும் மந்திரத்தை மனதில் உரு போட துவங்கினர். சிறிது நேரத்திற்கு பிறகு ஜகதீஷை சைகையால் அழைத்தார் விஷ்வ தீர்த்தர்.


குருவின் முன் பணிவுடன் வந்து வணங்கி நின்றான்.

“எனதருமை ஜகதீஷ், மந்திரத்தை மனதில் ஏற்றி கொண்டாயா? ,” என்றார்.

“முழுமையாக உள்வாங்கி கொண்டேன் குருவே”.

“எங்கே ஒரு முறை சொல் பார்ப்போம்”

கண்கள் மூடி மனதை ஒருநிலைப்படுத்தி கணீர் குரலில் கூற துவங்கினான்..” பூர்ண மித பூர்ண மிதம் ...” என கூறி முடித்தான் ஜகதீஷ்.

மெல்ல புன்சிரிப்புடன் குரு தொடர்ந்தார்.. “நீ சரியாக மனதில் உள் நிறுத்தியாதாக தெரியவில்லையே.. எங்கே உனது புத்தகத்தை காட்டு”

பதட்டம் அடைந்த ஜகதீஷ், புத்தகத்தை காண்பித்து கூறினான்.. “ குருவே தவறு இருந்தால் மன்னியுங்கள். ஆனால் நான் கூறியது அனைத்தும் இதில் இருப்பதை போலவே கூறினேன்...”

“ஜகதீஷ்.. இந்த புத்தகத்திலிருந்து படித்துதான் மனதில் உள்வாங்கினாயா?”.. என்றால் விஷ்வதீர்த்தர்.


மெல்ல தலையசைத்தான் ஜகதீஷ்..


சத்குரு தொடர்ந்தார்... “ இதிலிருந்து உள்வாங்கினாய் என்றால் மந்திரம் இதில் இருக்கிறதே? நீ உன் மூளையில் மந்திரத்தை ஏற்றி கொண்டால் புத்தகத்தில் இருக்க கூடாதல்லவா?”


குழப்பமடைந்தான் ஜகதீஷ்...


“எனது பிரிய ஜகதீஷ்.. உனது நினைவில் நின்ற மந்திரம் சூட்சம நிலையில் இருக்கிறது. புத்தகத்தில் இருக்கும் மந்திரம் ஸ்தூல வடிவம். இறைவன் சூட்சம நிலையில் இருப்பவன். இறைவனுக்கு படைக்கப்படுவது ஸ்தூல வடிவில் இருந்தாலும் அவன் சூட்சமமாகவே உற்கொள்கிறான்.
நீ உள்வாங்கிய பின் புத்தகத்தில் மந்திரம் அளவில் குறைந்துவிட்டதா? அது போலதான் இறைவன் உற்கொண்ட பிரசாதம் அளவில் குறையாமல் நாம் எல்லோரும் உண்கிறோம். ஸ்தூலமாக இருக்கும் நாம் ஸ்தூலமாகவும், சூட்சுமமாக இருக்கும் இறைவன் சூட்சுமமாகவும் நைவேதியத்தை உற்கொள்கிறோம். ”

வகுப்பில் இருக்கும் அனைவரும் இருவரின் சம்பாஷணை புரியாமல் இருக்க...ஜகதீஷின் முகத்தில் ஒளி தெரிந்தது.

தனது பக்தியற்ற தர்க்கம் செய்த அறியாமையை குருவிற்கு நைவித்தியம் செய்து முழுமையடைந்தான் ஜகதீஷ்.

Tuesday, November 11, 2008

எங்கே இருக்கு புதையல்....?

பேராசை பெருமாள்சாமியை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. வாழ்க்கையில் ஒவ்வொரு செயலும் தன்னக்கு பெரிய செல்வம் வரவேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுவது அவனது இயல்பு. தனது ஆசையால் சிறுக சிறுக பொருள் சேர்ப்பது அவனுக்கு சரியாக படவில்லை.


அடித்தால் ஒரே அடியில் பெரும் பணத்தை சம்பாதித்து அதை வைத்து வாழ்க்கை மேம்படுத்தவேண்டும் என முடிவெடுத்தான். ஜோதிடரிடம் சென்று ஜாதகத்தை கண்பித்து இவனது செல்வநிலையை முடிவுசெயலாம் ஜோதிடரை அணுகினான். அவனது ஜாதகம் சிறப்பாக இருக்கிறது என்றும் கூடிய விரைவில் பெருமாள் சாமிக்கு புதையல் கிடைக்கும் என்றும் ஜோதிடர் சொன்னார்.

காய்கறி கடையில் சில ரூபாய் மிச்சம் பிடித்தாலே சந்தோஷத்தில் இரவு தூங்கமாட்டன் பெருமாள் சாமி, இந்த லட்சணத்தில் ஜோதிடர் சொன்னது அவனுக்கு காதில் ரிங்காரம் அடித்துக்கொண்டே இருந்தது.

எப்படி புதையல் கிடைக்கும்? எங்கு இருக்கும்? அந்த புதையல் நமக்கு போதுமானதாக இருக்குமா என பல எண்ணங்கள் சிந்தனையில் வந்தவண்ணம் இருந்தது.

அந்த ஊரில் இருக்கும் ஓர் ஞானியை பார்த்து கேட்டால் அவர் தனக்கு உதவகூடும் என எண்ணினான். கண்களில் பேராசை மின்ன தன்முன் வந்து நிற்கும் பெருமாள் சாமியை பார்த்தார் ஞான குரு . "ஐயா எனக்கு புதையல் கிடைக்கும் என ஜோதிடர் சொன்னார். நீங்கள் தான் எனக்கு அந்த புதையல் கிடைக்க வழி சொல்ல வேண்டும்" என்றான் பெருமாள் சாமி.

பெருமாள் சாமியின் உண்மையான தேவையை உணர்ந்த ஞான குரு...புன்னகையுடன் பார்த்தார் பின்பு..." பெருமாள் சாமி , இந்த ஊரின் மேற்கு பகுதியில் இருக்கும் மலைக்கு அதிகாலையில் செல். சூரிய ஒளியில் உனது நிழலை கவனி. நிழலின் அளவு எங்கு முற்றிலும் குறைகிறதோ அங்கு புதையல் இருக்கிறது" இதை கேட்டதும் அவருக்கு நன்றி சொல்ல கூட தோன்றாமல் விரைவாக நடந்தான்.

அதிகாலையில் குளித்துவிட்டு பயபக்தியுடன் மேற்கு மழைக்கு சென்றான். மலையை பார்த்து நின்றான். பின்புறம் இருந்த சூரிய ஒளியால் நிழல் தெரிய துவங்கியது. நிழலை பின்தொடர்ந்தான். உச்சிவேளையில் நிழல் அவனது உடலில் ஐக்கியம் அடைந்து காணாமல் போனது.

காலை முதல் நிழலை பார்த்த வண்ணம் இருந்ததால் மனம் ஒருமுகப்பட்டு தனது உள்நிலையில் தெளிவான நிலையில் இருந்தான். முடிவாக பெருமாள் சாமி புதையல் தனக்குள்ளே இருக்கிறது என்பதை உணர்ந்தான்.

--------------------------ஓம்----------------------
தன்னுள் தேடாமல் எப்பொருளைவெளியே தேடினாலும் அது முடிவாகாது.
தன்னுள் சேர்க்காத எப்பொருளும் நம்மிடம் சேராது.

180 டிகிரி திரும்புங்கள். உங்கள் பிறப்பின் மூலத்தை காண முயற்சியிங்கள்.
அங்கே புதையல் கொட்டிக்கிடக்கிறது.

உங்கள் உள்ளே இருக்கும் ”உருபொருளை” புதையலாக நினைத்து தோன்டி எடுங்கள், புதைபொருளாக மாற்றி புதைத்துவிடாதிர்கள்.

Saturday, November 8, 2008

குரு நிலை


மஞ்சுநாதனுக்கு பெருத்த சந்தேகம். பலகாலமாக குருவுடன் இருக்கிறோம். அவரின் கண் அசைவை புரிந்து கொண்டு செயல்படும் முதல் மாணவனாக இருக்கிறோம். இருந்தும் நமது குரு நம்மை பாரட்டுவதில்லையே. நமக்கு சுகந்திரமாக பொறுப்புகளை கொடுப்பதில்லையே என கவலை. குருவை போல ஆன்மீக விஷயங்கள் பேசுவதற்கும் சாஸ்திர கருத்திகளுக்கு பதில் சொல்ல தெரிந்தாலும் நம்மை அவர் அளவுக்கு யாரும் மதிப்பதில்லையே ஏன் இந்த நிலை என யோசிக்க துவங்கினான்.

குருவுடன் தனியாக பயணப்படும் தருணத்திற்காக காத்திருந்தான். அதற்கான சந்தர்ப்பம் விரைவிலேயே வாய்த்தது. ஓர் தொழிற்சாலையில் உழியர்களுக்கான கூட்டத்தில் அவர்களின் பணியை ஊக்குவிக்கும் பொருட்டு குரு அழைக்கப்படிருந்தார்.

கூட்டத்தில் பேசியது அனைத்தும் மஞ்சுநாதனுக்கு புதிய விஷயமாக தெரியவில்லை. குருவுடன் எப்பொழுதும் இருப்பதால், அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும் அடுத்த வார்த்தை மனதில் உதிக்கும் வண்ணம் அவனுக்கு குருவின் உரை பழகி இருந்தது. அது வரை பொருமையாக இருந்த மஞ்சுநாதன் தனது கேள்வியை இன்று கேட்டே விட வேண்டும் என முடிவு செய்தான்.

அன்று மதிய உணவு அருந்திய பின் குரு ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கும் பொழுது அவரின் கால்களை மெல்ல பிடித்து விட்டபடியே மஞ்சுநாதன் கேட்டான், “குருவே, நான் உங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா?”.

படுக்கையில் சாய்ந்த நிலையில் அமர்ந்திருந்த குரு ஜன்னலுக்கு வெளியே எங்கோ பார்த்த வண்ணம் இருந்தார். மஞ்சுநாதனின் கேள்விக்கு “ம்” என ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னாலும் அவரின் கண்கள் வெளியே எங்கோ பார்த்த வண்ணம் இருந்தது.

மஞ்சுநாதன் தனது கேள்விகளை கேட்க துவங்கினான்...

“நீங்கள் சொன்ன அனைத்து ஆன்மீக சாதனைகளையும் செய்து வருகிறேன். மக்களுக்கு நீங்கள் சொன்ன அனைத்து கருத்துகளும் எனக்கு தெரிந்த விஷயம் தான். நானும் குரு நிலையை அடைந்து விட்டேனா? இன் நிலையில் எனக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்?” என்றான்.

கேள்வி கேட்கும் வரை திரும்பாத அவர் முகம் , கேள்வி கேட்டு முடித்ததும் அவனை பார்த்து திரும்பிய போது சிறிது கலங்கித்தான் போனான் மஞ்சுநாதன்.


அவனது கலக்கத்தை போக்கும் வகையில் அவரின் முகத்தில் ஓர் புன்னகை வெளிப்பட்டது.

“மஞ்சுநாதா, வெளியே ஓர் கட்டிடத்தின் முகப்பில் என்ன எழுதியிருக்கிறது என பார்” என்றார் குரு.

கேட்ட கேள்விக்கு சம்பந்தம் இல்லாத விஷயமாக இருந்தாலும், குருவின் கட்டளைக்காக உட்கார்ந்த நிலையிலேயே எட்டி பார்த்துவிட்டு சொன்னான். “Go Down" - கீழே போ என எழுதியிருக்கிறது குருவே..”

குரு அவனை மேலும் ஓர் அகலமான புன்னகையுடன் பார்த்துவிட்டு சொன்னார்... “மஞ்சு நாதா , இந்த தொழிற்சாலையில் வேலை செய்பவர்களுக்கு அது Godown (கிடங்கு). உனக்கு அது Go Down.(கீழே போ). ஆனால் எனக்கோ அது God Own (கடவுளுக்கு சொந்தமானது).

சாமானிய மனிதர்கள் சாஸ்திரங்களை மூதாதயர்களின் சேமிப்பாக பார்க்கிறார்கள். நீ அதை கீழ் நிலையில் ஓர் புத்தகமாகவோ உரையாகவோ பார்க்கிறாய். நான் அதை கடவுளின் சொந்த பொருளாக பார்க்கிறேன். குரு நிலையை அடைய சாஸ்திரம் தேவையில்லை. விழிப்புணர்வே தேவை”.


அன்று முதல் மஞ்சுநாதன் தன்னை கடவுளுக்கு சொந்தமாக்க துவங்கினான்.

-------------------ஓம்--------------------------

குரு நிலை என்பதை நாம் எளிமையாக எண்ணிவிடுகிறோம். பகவத் கீதையையோ அல்லது வேறு ஆன்மீக கருத்துக்களையோ சுவை பட பிரசங்கம் செய்பவர்கள் குரு நிலையில் இருக்கிறார்கள் என நினைத்து கொள்ளுவது தவறு. அதே நேரத்தில் கடவுளை பற்றி சுவை பட பேச தெரியாதவர்கள் எல்லாம் குரு இல்லை என முடிவு செய்வதும் தவறு. குருவை விழிப்புணர்வு நிலையிலேயே புரிந்துகொள்ள முடியும்.

குரு நிலை அடைய விரும்புனால் விழிப்புணர்வு அடைவதே வழி அதை விடுத்து, சித்துக்களை கற்பதோ- புராணங்களை மனப்பாடம் செய்வதோ முட்டாள் தனம்.

விழிப்புணர்வு பெற்றவர்களுக்கு எதுவம் கற்க வேண்டியதில்லை. விழிப்புணர்வற்றவர்களுக்கு அனைத்தையும் கற்றாலும் எதுவம் பயனில்லை.

Sunday, October 26, 2008

ஆஸ்ரமத்தை விட்டு வெளியேறுகிறேன்

தியானத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆஸ்ரமம் அது.


ஓர் தெய்வீகமான மெளனம் அங்கே சூழ்ந்திருந்தது. ஓர் கையை தலையிலும் தொடையிலும் வைத்தவண்ணம் தனது ஆசனத்தில் அமர்ந்திருந்தார் சத்குரு.

அவரது கண்கள் எங்கோ நிலைத்திருந்தது. அவரது உடல் அசைவற்று இருந்தது , அவர் சமாதி நிலையில் இருப்பதை காட்டியது.சத்குருவை பார்த்த படி அவரது சிஷ்யர்களும் மக்களும் அமர்ந்திருந்தனர்.

ஓர் இளைஞன் கைகளில் மலர் மாலை மற்றும் பழங்களுடன் அவர் முன் வந்து நின்றான்.
அவருக்கு மலர்மாலையை அணிவித்து அவரை விழுந்து வணங்கி கேட்டான் “குருவே என்னை உங்கள் சிஷ்யனாக ஏற்று எனக்கு சன்னியாசம் வழங்குங்கள்.”

தனது சமாதியிலிருந்து கலைந்த அவர், அவனை தீர்க்கமாக பார்த்தார். “உன்னிடத்தில் சன்னியாசத்திற்கான கூறு இல்லை.


முயற்சி செய் , அழ்ந்த முயற்சி உன்னை மேம்படுத்தும்” என சொல்லி அவனை பார்த்தார்.

அந்த இளைஞனோ விடுவதாக இல்லை. “அவ்வாறு சொல்லி என்னை தவிர்க்காதீர்கள். என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்” என இரு கரம் கூப்பி தொழுதான்.

குரு புன்புறுவல் செய்தவாறே கூறினார்...“சரி உன்னை ஏற்றுக்கொள்கிறேன். சன்னியாசம் கொடுப்பதற்கு முன் நீ சிலகாலம் இங்கு இருந்து வா. உனது சன்னியாசம் கொடுக்கப்படும் நாளை பிறகு கூறுகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை உண்டு. நீ யாருடனும் சைகையிலோ வாய் மூலமாகவோ பேச கூடாது. . மூன்று வருடத்திற்கு ஒரு முறை என்னிடம் மட்டும் பேசலாம். அதுவும் ஒரு வாக்கியம் தான். இதற்கு சம்மதித்தால் நீ இங்கு இருக்கலாம்”

தன்னை ஏற்று கொண்ட குருவை கண்கள் குளமாக தொழுது விட்டு தலையசைத்தான் இளைஞன்.

“மெளனி” என்ற எழுதபட்ட வாசகம் கழுத்தில் இருக்க ஆஸ்ரமத்தை வலம் வர துவங்கினான் அந்த இளைஞன்.

மூன்று வருடம் கழித்தது. குரு முன் வந்தமர்ந்தான்..

குரு அவனை நோக்கி கூறினார்..“..இன்று நீ பேசும் நாள். நீ பேச விரும்புவதை ஒரே வாக்கியத்தில் கூறு”

இளைஞன் கூறினான் ,“குருவே எனக்கு கொடுக்கப்பட்ட படுக்கை வசதி குறைவாக இருக்கிறது”.

குரு கூறினார், “ நன்று. உனது மெளனம் தொடரட்டும்”.
.
.
.
.
.
.
மீண்டும் மூன்று வருடம் கழித்தது. அந்த நாளும் வந்தது.

குரு அவனை நோக்கி கூறினார்..“..இன்று நீ பேசும் நாள். நீ பேச விரும்புவதை கூறு”

இளைஞன் கூறினான் ,“குருவே என்னை பிறர் சரியாக நடத்துவதில்லை”.

குரு கூறினார், “ நன்று. உனது மெளனம் தொடரட்டும்”.
.
.
.
.
.
.
.
.
.
மீண்டும் மூன்று வருடம் கழித்தது. அந்த நாளும் வந்தது.

குரு அவனை நோக்கி கூறினார்..“..இன்று நீ பேசும் நாள். நீ பேச விரும்புவதை கூறு”

இளைஞன் கூறினான் ,“குருவே எனக்கு ஆஸ்ரம வாழ்க்கை திருப்தி இல்லை. ஆஸ்ரமத்தை விட்டு வெளியேறுகிறேன்”.

குரு கூறினார், “ நன்று. உனது பயணம் தொடரட்டும்”.

--------------------------------ஓம்-------------------------------------
இக்கதை ஓர் ஜென் கதையை தழுவி சொல்லப்பட்டது.

தன்னில் அமைதியையும் உள்நிலையில் ஈடுபாட்டையும் காணாதவர்கள் ஆன்மீக வாழ்க்கையை தேர்ந்தெடுத்தல் தவறானது.

குரு சிஷ்ய உறவின் தெளிவையும், தான் எதற்காக இருக்கிறோம் என்ற இருப்பும் காண தவறுவதால் ஏற்படும் குறையே இதற்கு காரணம்.

இந்த குறைபாடு குரு சிஷ்ய உறவில் மட்டுமல்ல. அனைத்து வகையான உறவு முறையிலும் உண்டு.குரு சிஷ்யா நிலையில் கணவன் - மனைவி, தந்தை மகன், தலைவர் - பணியாள் என வேறு உறவு முறைகளை வைத்து இக்கதையை சிந்தித்துப்பாருங்கள். யாரை வைத்தாலும் அவர்கள் உறவில் வரும் தடுமாற்றத்தின் காரணம் யாரோ ஒருவர்

தனது இருப்பை உணராமல் தன் சுகத்தை மட்டுமே உணருகிறார்கள் என்பது தான்.

உங்கள் இருப்பை உணர்ந்து உள் நிலையைல் விழிப்புணர்வு பெருங்கள். அனைத்து உங்களுக்கு ஆனந்தமயமாக தெரியும்.

Wednesday, October 15, 2008

நான் கடவுள்

நகரத்தின் மையத்தில் உள்ள பொதுக்கூட்ட மைதானம்.


கண்களுக்கு எட்டிய வரை மக்கள் கூட்டம். மக்கள் அனைவரும் ஒருமுக சிந்தைனையுடன்அமர்ந்திருந்தனர். ஒரு புறம் சிறு குழுவாக பக்த்தர்கள் இசைத்த பஜனை பாடல்கள் ஒலித்துக் கொண்டு இருந்தது. அந்த மண்டபம் பூக்களாலும் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேடையில் அலங்கார வளையம் மற்றும் மரத்தால் ஆன ஆசனம் என அனைத்து அம்சமும் ஒர் ஆன்மீக நிகழ்ச்சி நடைபெறப்போவதை குறித்தவண்ணம் இருந்தது.



ஆம். அனைவரும் சத்குரு ஞானேஷ்வர் வருகைக்காக காத்திருந்தனர்.

கூட்டத்தில் திடீரென சலசலப்பு. பின்பு அமைதி ஏற்பட்டது...
கூடியிருந்த கூட்டத்தின் நடுவே மக்கள் இருபுறமும் விலக ஓர் பாதை உருவானது..

சத்குரு தனது சிஷ்யர்களுடன் இரு புறமும் குழுமி இருந்த மக்களை வணங்கியபடியே மேடையை நோக்கி நடந்தார்.

பஜனை குழுவின் பாடல்கள் உச்சகட்டத்தை எட்டியது.

சிலர் அவர் கால்களை ஸ்பரிசிக்க முயன்றார்கள், சிலர் ஆவேசமாக அவரின் பெயரை உச்சரித்தனர்.

மேடையில் ஏறியதும் அனைவரையும் ஒருமுறை தனது ஞானம் நிறைந்த கண்களால் பார்த்தார்.

கூட்டம் அமைதியடைந்தது.

”எனது ஆன்மாவிற்கு அருகில் இருப்பவர்களே.....” என தொடங்கி தனது ஆன்மீக அருளுரையை துவங்க...அனைவரும் அதில் மூழ்கினர்.

ஒரு மணிநேரம் அங்கு யாரும் அசையக்கூட இல்லை. தனது ஆன்ம ஆற்றலாலும் , ஞான கருத்தாலும் மக்களை கட்டிவைத்தார் சத்குரு.

குருதேவரின் சிஷ்யர் ஒருவர் மக்களை பார்த்து கூறினார், “ சத்சங்கம் துவங்குகிறது, உங்களுக்கு சத்குருவிடம் கேட்க விரும்பும் கேள்வியை கேட்கலாம்”.


இதே நேரம் தேவலோகத்தில்.... கடவுள் இக்காட்சிகளை பார்த்துகொண்டிருந்தார்.
தன்னை பற்றி பேசும் ஆன்மீகவாதிக்கும், அதை கேட்டு ஆன்மீக வயப்பட்டிருக்கும் மக்களுக்கும் தனது திருக்காட்சியை ஏற்படுத்தும் வண்ணம் அவர்கள் முன் தோன்ற எண்ணினார்.


ஆன்மீகம் பற்றி, வாழ்வியல் பற்றி, தத்துவம் பற்றி என பல கேள்விகள் ஒவ்வொருவராக எழுந்து கேட்டார்கள். அனைத்துக்கும் சத்குரு ஞானேஷ்வர் புதிய புரிதலை ஏற்படுத்தும் கோணத்தில் பதில் அளித்துக்கொண்டிருந்தார்.

எளிய உடையில் வந்தால் அவர்களுக்கு குழப்பம் ஏற்படும் என எண்ணி அவர்கள் வழிபடும் வடிவிலேய தங்க கீடம், பட்டு பீதாம்பரம் அணித்து பரமத்மா மெல்ல நடந்து அந்த சபைக்கு நடுவே வந்தார்.

அனைவரின் கவனமும் அவரிடத்தில் திரும்பியது. அவர் மெல்ல நடந்து சத்குரு இருக்கும் மேடைக்கு அருகே வந்தார். அதற்குள் சத்குருவின் சிஷ்யர்கள் அவரை கூடி என்ன வேண்டும் என வினாவ தொடங்கினார்கள்.

பரமாத்மா புன்புறுவலுடன் கூறினார் ..”நான் கடவுள்”.

இதை கேட்ட சிஷ்யர்களும் மக்களும் கூக்குரலிட்டனர். அனைவரும் கூச்சலிடவே கைகளால் அமைதிப்படுத்திவிட்டு சத்குரு கடவுளை பார்த்தார்,

கடவுள் நம்பிக்கையுடன் சத்குருவை ஆழமாக பார்த்தார்.

சத்குரு சிஷ்யர்களை பார்த்து கூறினார்...”சத்சங்க்த்தின் நடுவே குழப்பம் விளைவிக்கும் இவரை கூட்டி சென்று எனது அறையில் அமரச்செய்யுங்கள்”


சிஷ்யர்கள் இருவர் கடவுளின் கைகளை பற்றி சத்குருவின் அறைக்கு அவரை கொண்டு சென்று அடைத்து வாயிற்கதவை சாத்தினார்கள்.

”சத்குருவிற்கு ஜெய்... சத்குருவிற்கு ஜெய்”
குழப்பம் விளைவித்தவரையும் மன்னித்துவிடும் சத்குருவின் தன்மையை கண்டு மக்கள் கோஷம் எழுப்ப துவங்கினர்.


சத்சங்கம் மீண்டும் துவங்கி மக்களுக்கு ஞானகருத்துகளை சத்குரு கூற துவங்கினார்.பின்பு மங்கள இசையுடன் சத்சங்க நிகழ்ச்சி நிறைவடைந்தது...

அந்த நகர பிரபலங்களும் பிரமுகர்களும் சத்குருவை காண வரிசையில் நின்றனர். ஆனால் சத்குரு இயல்புக்குமாறாக அனைவரையும் சந்திப்பதை தவிர்த்துவிட்டு தனது அறைக்கு திரும்புனார்.

சிஷ்யர்களை தனது அறைகதவை திறக்க சொல்லி அவர்களை வெளியே நிற்கசொன்னார்.

உள்ளே சென்ற வேகத்தில் அறைகதவை உற்புறமாக தாழிட்டு , அறுபட்ட மரம் போல் கடவுளின் காலில் விழுந்தார்.

தனது முகத்தை அவரின் கால்களில் புதைத்த வண்ணம் தழுதழுத்த குரலில் கூற துவங்கினார்...” பிரம்ம சொருபனே உங்களை பார்த்த உடனே கண்டுகொண்டேன். ஆனால் மக்கள் அறியாமையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் தான் கடவுள் என தெரிந்திருந்தால்.. தனது வாழ்க்கைக்கு தேவையான சுயநல கருத்துக்களை கேட்க துவங்குவார்கள். உங்களுடன் இருக்கும் ஆனந்தத்தை பருக தயாரக இருக்கமாட்டார்கள். இந்த எளியவனை மன்னித்தருளும்...”

தனது வருகையின் தவறை உணர்ந்த கடவுள் மறைந்தார்...


-----------ஓம்------------

கோவில், மடாலயம் என எங்கும் குவியும் மக்கள் பெரும்பன்மையாக தனது வாழ்க்கையின் தேவை பூர்த்தி செய்யும் கோரிக்கை மனதில் கொண்டிருக்கிறார்கள்.


இந்த பிறப்பை வாழும் சூழ்நிலையை படைந்தவனுக்கு நன்றி சொல்லும் இயல்பு எங்கும் காணப்படுவதில்லை.


பிறருக்காக பரார்தனை செய்தல் என்பதும் குறைந்து வாருகிறது.
தன்னை அறிதல் என்பதை காட்டிலும் தன் சுயநலத்தின்பால் மக்களுக்கு தேடல் அதிகம்.

சுயநலம் மிக மிக - கடவுளே எதிரில் வந்தாலும் நமக்கு பல சமயம் அவரை காணமுடிவதில்லை.
வேண்டுதல் என்பது தனது வாழ்க்கையில் உள்ள சிறு சம்பவத்தை வேண்டுவதல்ல.

வேண்டுதல் என்பது அதனுடன் அதுவாகவே ஆக அதனிடத்தில் வேண்டுவதை குறிக்கும்.


Sunday, October 5, 2008

கடவுளை காண்பது எப்படி?

காய்ந்த சருகாக தலைமுடி.... கண்களில் ஓர் தெய்வீக ஒளி. உடலில் குறைந்த ஆடையும் அவரை ஞான செல்வந்தராக காட்டியது.

வழக்கமாக தான் அமரும் ஆற்றங்கரை அரசமரத்தடியில் அமர்ந்து உதயமாகும் சூரியனை உற்று பார்த்துக் கொண்டிருந்தார் ஞானி.

“ஐயா குருவே ...எனக்கு வழிகாட்டுங்கள் ....” என கூறியவாரே...திடீரென ஓர் கரம் அவரின் கால்களை பற்றியது..அவரின் கால்களில் தனது தலையை வைத்து ஒருவன் கதறிகொண்டிருந்தான்.


சலனமற்ற ஓர் பாறை போன்று ஞானி உட்கார்ந்திருந்தார். அவரின் கண்கள் சூரியனை விட்டு அகலவில்லை.

“உங்களிடம் எத்தனையோ முறை கேட்டுவிட்டேன். எனக்கு கடவுளை காண வேண்டும். எனக்கு காட்டுங்கள்.... எனக்கு காட்டுங்கள்....” அவனது குரலில் ஓர் கடவுளை பார்க்க வேண்டும் என்ற உறுதி தெரிந்தது.

இன்று மட்டும் நடப்பதல்ல இந்த காட்சி... பல நாட்களாக தினம் இவன் வருவதும்..ஞானி சலனமற்று அமந்திருப்பதும் வாடிக்கையாகி விட்டது...

ஆனால் இன்று ....மெல்ல ஞானி அவனை நோக்கி திரும்பினார்.. அவன் கைகளை பற்றி அவனுடன் ஆற்றை நோக்கி நடந்தார்.

இருவரும் ஆற்றில் இறங்கினார்கள். இவனும் தனக்கு மார்பு வரை ஆற்றில் இறக்கி
ஞானி மந்திர உபதேசம் தருவார் என நினைத்தான்.

சற்றும் எதிர்பாராத விதமாக அவனின் கழுத்தை பிடித்து நீரில் அமிழ்த்தினார் ஞானி.

சுவாசம் திணறியது. திக்கு முக்காடினான்...

இறப்பின் எல்லையை உணர்ந்தான்..

சில நொடிகளுக்கு பிறகு அவனை விட்டார் ஞானி.


“யேஹ்....”
எனும் சப்தத்துடன் ஆற்றிலிருந்து வெளிவந்து பெரும் மூச்சு எடுத்தான்.

தன்னை திடப்படுத்திக் கொண்டு ஆற்றின் கரையை நோக்கி ஓடினான்.

திரும்பி பார்த்தால் ஞானி மெல்ல சலனமில்லமல் நடந்து வந்துகொண்டிருந்தார்.

அவனுக்கு கோபம் தலைக்கேறியது.“உங்களுக்கு கடவுளை காணும் வழி தெரியாவிட்டால் தெரியாது என சொல்ல வேண்டியது தானே? என்னை கொலை செய்ய வேண்டுமா? உங்களை நம்பி வந்ததுக்கு இதுதான் பலனா?”

தீர்க்கமாக பார்த்த ஞானியின் உதடுகள் அசைய துவங்கியது...”தினமும் கடவுளை காட்டு... கடவுளை காட்டு என கேட்டதால் உபயோகம் இல்லை. தண்ணீரில் மூழ்கியதும் வேறு சிந்தை இல்லாமல் சுவாசத்தை எடுக்கவேண்டும் என்பது மட்டுமே பிரதானமாக இருந்ததல்லவா? அது போல கடவுளை காணவேண்டும் என்பதை மட்டும் சிந்தையில் வைத்து முயற்சி செய். கடவுளை காணலாம்.” என்றார்

இவனக்கு புது சுவாசம் கிடைத்தது.

------------------------------ஓம்-----------------------------------------

கடவுளை காணவேண்டும் என பலர் கேட்டும் செவி சாய்க்காத பரமஹ்ம்சர் நரேனுக்கு செவிசாய்த்ததின் ரகசியம் தெரிந்ததா?

இந்த கருத்தை சிருங்கேரி மஹா சன்னிதானம் நவீன யுகத்திற்கு ஏற்றார்ப்போல் நகைச்சுவையுடன் கூறுகிறார். ரூபாய் நோட்டுக்களை எண்ணும் பொழுது வேறு சிந்தனை ஏற்படுமா? அதுபோல கடவுளை காண வேண்டும் எனும் ஒருமுக சிந்தனை நிச்சியம் அவரை வெளிப்பட வைக்கும் என்கிறார்.

நாமும் முயற்சி செய்வோமா?

Wednesday, October 1, 2008

ரசவாதம் செய்யும் முறை


ஜெயசிம்மன் வாழ்க்கையில் அனுபவிக்காத பணமோ அந்தஸ்தோ இல்லை. நீண்ட பரம்பரையாக செல்வந்தராக வாழந்த குடும்பவம் அவனுடையது.

ஆனால் தற்போதய அவனின் நிலை நேர்மாறாக அமைந்து விட்டது. ஒரு வேளை உணவுக்கே பிறரின் கையை எதிர்பார்க்கும் நிலை.வாரி கொடுத்த கையால் வாரி எடுத்து உண்ணும் நிலை ஏற்பட்டதற்கு ஒரே ஒரு காரணம் தான்.

அது - ரசவாதம்

அன்று ஒருநாள் தனது நண்பர்களுடன் உரையாடும் பொழுது ரசவாதம் எனும் விஷ(ய) வாதம் விவாதிக்கப்பட்டது. எந்த பொருளையும் தங்கமாக்கும் ரசவாத வித்தையை கற்றுக்கொள்ளும் ஆவல் அவனுக்கு கிளர்ந்தெழுந்தது. தனது செல்வ நிலையை ரசவாதம் செய்து பெருக்கி தனது பல சந்ததியினர் செல்வ நிலையுடன் வாழவைக்கும் எண்ணம் ஜெயசிம்மனுக்கு ஏற்பட்டது.

பலரை வரவழைத்தான், எத்தனையோ ஆராய்ச்சிகள் நடந்தது. சித்தர் என அழைக்கப்படவர்களுக்கு முன் தலை வணங்கினான்- அவர்களை பூஜித்தான், ஆனால் நடந்தது என்னமோ வேறு. தனது சொத்துக்கள்,குடும்பம் மற்றும் கெளரவம் என அனைத்தையும் இழந்து மண் குடிசையில் வாழும் நிலை ஏற்பட்டது.

இனி வரும் சந்ததிகளுக்கு பொருள் சேர்க்க எண்ணியவனுக்கு தனது அடுத்த வேளை உணவுக்கு அலையும் நிலைக்கு தள்ளப்பட்டான்.

சிரமம்மான நிலையில் வாழும் அவனுக்கு வரண்ட நிலத்தில் சில துளி மழை பொழிவை போல இனிப்பான ஒர் செய்தி கேட்டான். அவனது ஊருக்கு பிரம்ம ஞானி வருகிறார் என கேள்விபட்டதும் அவனது மகிழ்ச்சிக்கு அளவில்லை.

பிரம்ம ஞானி தனது யோகசக்தியாலும் ஞான சக்தியாலும் பலரை வழிகாட்டுபவர். அவரை பற்றிய அற்புத செய்திகளை பல காலங்களாக கேட்டிருக்கிறான். அவர் தனது நிலைக்கு ஓர் மருந்தாக அமைவார் என எண்ணினான். அவரால் தனக்கு ரசவாத வித்தையை கற்றுக்கொடுக்க முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை வந்தது. அவரிடம் கற்றதும் தனது இழந்த செல்வத்தை மீட்டுகொள்ள முடியும் என நம்பினான் ஜெயசிம்மன்.

பிரம்மஞானியை சந்தித்து வணங்கி நின்றான். மெல்ல கண்களை திறந்த ஞானி அவனை பார்த்து கேட்டார்... ”எனது அன்பு ஜெயா ரசவாதம் பற்றி அறிய ஆவாலா?”

தனது மன நிலையை சொல்லமலே வெளிப்படுத்திய பிரம்ம ஞானியை கண்ணீர்மல்க பார்த்தான் ஜெயசிம்மன்.

ஒர் நீர் நிறைந்த பாத்திரத்தை கொண்டுவர சொன்னார் பிரம்மஞானி. குனிந்து நிலத்திலிருந்து சிறிது மண் எடுத்து அந்த பாத்திரத்தில் மெல்ல போட்டார் பிரம்ம ஞானி.

ஆச்சரியமான மாற்றம் நிகழ்ந்தது. மண் நீரை தொட்டு பாத்திரத்தின் அடியில் செல்லும் பொழுது தங்க துகள்களாக மாறி இருந்தது.

ஜெயசிம்மனுக்கு தனது கண்களை நம்ப முடியவில்லை. இவ்வளவு எளிதாக யாரும் ரசவாதம் செய்து பார்த்ததில்லை.
ஆச்சரியம் விலகாமல் ஆச்சாரியரிடம் கேட்டான்...”குருவே இது எப்படி சாத்தியம்? மண்னை நீரில் இட்டால் பொன்னாகுமா? எதாவது மந்திரம் சொல்ல வேண்டுமா?”

அவனை அர்த்தத்துடன் பார்த்த குரு கூறினார், “ஜெயா மண்ணை பாத்திரத்தில் இடும் பொழுது தங்கத்தின் மேல் பற்று வைக்கக்கூடாது. பற்றில்லாமல் இருந்தால் பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்து பொருளும் உனக்கு தங்கமே. இதுவே ஞான ரசவாதம்”

ஜெயசிம்மனின் உள்நிலை ரசவாதம் அடைந்தது.

---------------------ஓம்-------------------------------------

பற்று என்பது இல்லாமல் இரு என்கிறார்கள் சிலர் பற்றுடன் இரு என்கிறார்கள். எதை பின்பற்றுவது ? என பலர் கேட்பதுண்டு.

ஒன்றின் மேல் ஆசை படும்பொழுது பற்று ஏற்படுகிறது அதை தொடர்ந்து சிக்கல்களும் முளைக்கிறது.

ஒரு சாரார் ஆசைபடாதே என்கிறார்கள், ஒரு சாரர் அத்தனைக்கும் ஆசைபடு என்கிறார்கள் என பலர் குழப்பதில் இருக்கிறார்கள்.

நான் புதிதாக சொல்ல ஒன்றும் இல்லை.

கெளதம புத்தன் சொன்னான்- ஆசை அறுமின்.
வள்ளுவன் எழுதினான் - பற்றுக பற்றற்றான் பற்றினை.

ஆனால் இவை அனைத்தும் முடிவல்ல. இதை பின்’பற்றினாலும்’ சில பிரச்சனைகள் ஏற்படும்.

ஆசையில்லாமல் இருக்க வேண்டும் என்பதும் ஓர் ஆசைதானே?

திருமூலனே சரியாக சொன்னார்.

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோடயினும் ஆசை அறுமின்கள்
ஆசைப்படபட ஆய்வரும் துன்பங்கள்

ஆசைவிடவிட ஆனந்தம் ஆமே.

-திருமந்திரம் 2615

ஆசை அறுப்பீர்கள் தானே?

Sunday, September 7, 2008

சிவன் எங்கே இருக்கிறார்?

ஆலமரத்தின் மேல் ஒரு குயில் மெல்ல கூவியது...

மரத்தின் அடிப்பகுதியில் குருவின் முன் அமர்ந்திருந்தான் விஸ்வநாத பிரம்மச்சாரி.

அவனது கண்கள் கலங்கி இருந்தன... தனது கைகளால் குருவின் கால்களை பற்றியவாறே பேச துவங்கினான்...”குருவே உங்களிடமிருந்து வேத சாஸ்திரத்தையும் பிரம்ம சூத்திரத்தையும் முழுமையாக கற்றுகொண்டேன். உண்மை பொருளை கூறும் அனைத்து கருத்துக்களையும் நீங்கள் எனக்கு விளக்கியுள்ளீர்கள். உங்களிடம் பணிவிடை செய்வதிலும் , உங்களுடன் இருப்பதிலும் எனக்கு நிகரில்லாத ஆனந்தம் கிடைக்கிறது. இப்படி இருக்க என்னை ஏன் வேறு இடத்தில் இருக்கும் ஒரு ஞானியை குருவாக ஏற்க கட்டளை இடுகிறீர்களே. இது நியாயமா?”..

அவனை மெல்ல தனது கரத்தால் தூக்கி குரு அவனை தீர்க்கமாக பார்த்தார்..”விஸ்வநாதா..! சாஸ்திர ஞானத்தை மட்டும் தான்
என்னால் உனக்கு வழங்க முடியும். உனக்கு பிரம்ம ஞானத்தை வழங்க குரு ஒருவர் காத்திருக்கிர்றார் . காசிக்கு அருகில் இருக்கும் வனத்தில் வசிக்கும் அவரை கண்டு ஞானம் அடைவாயாக...வளர்ச்சி அடையும் வரைதான் புழு கூட்டில் வசிக்க முடியும். அதன் பின் வண்ணத்து பூச்சியாக மாற கூட்டை கடந்து சென்றாக வேண்டும்...சென்று வா”...என்றார் குரு.


பிரிய மனமில்லாமல் தனது குருநாதரிடமிருந்து விடைபெற்றான் விஸ்வநாத பிரம்மச்சாரி..




காசியை அடைந்து அங்கு அவன் பெயரில் வீற்றிருக்கும் விஸ்வநாதரை தரிசித்துவிட்டு , நகரின் வெளியே இருக்கும் வனத்தை நோக்கி நடந்தான்.

வனத்திற்கு உள்ளே இரு நாட்களாக நடந்தும் யாரும் கண்களுக்குதட்டுபடவில்லை. தனது குரு அனுப்பியதன் நோக்கம் புரியாமல் குழப்பம் மேலோங்க பயணத்தை தொடர்ந்தான். பசியும் தாகமும் அவனை சோர்வடைய செய்தது. வழியில் தென்பட்ட தடாகத்தில் நீர் அருந்த குனிந்தான்.

அந்த தடாகத்தின் மேல்பரப்பில் அருகில் இருந்த கோவில் கோபுரம் நிழலாகதெரிந்தது... நடுக்காட்டில் கோவில் இருப்பதை கண்டு ஆச்சரியத்துடன் அதை அடைந்தான்..

கோவில் வாசலை அடையும் முன் உள்ளே இருந்து ஓர் குரல் பேச துவங்கியது.....
”வா விஸ்வநாத உனக்காகத்தான் காத்திருக்கிறேன்...உனது குரு என்னை பார்க்கவே அனுப்பினார்..”

தனது ஞான குருவை காணும் ஆவலில் கோவிலின் உள்ளே சென்றான் விஸ்வநாதன்.

அங்கே கண்ட காட்சி அவனை மாபெரும் அதிர்ச்சி அடைய செய்தது...


பரதேசி போன்ற தோற்றம் கொண்ட ஒருவர்...கருவறையில் இருக்கும் சிவலிங்கத்தின் மேல் தனது கால்களை வைத்து ஆட்டியவாறு தலையில் கைகளை வைத்து கொண்டும் படுத்திருந்தார்.

விஸ்வநாதனுகோ கோபத்தை கட்டுபடுத்த முடியவில்லை. “எனது குருஉங்களை பற்றி உயர்வாக கூறி அனுப்பினார். நீங்கள் அவர் சொன்னதற்கு நேர்மாறாக அல்லவா இருக்க்கிறீர்கள். ஐயா சற்று சிவன் மேல் இருக்கும் காலை எடுத்து கீழே வைக்க கூடாதா?” என்றான்.

அந்த பரதேசி சற்றும் அவனது கருத்துக்களை காதில் போட்டுக்கொள்ளாமல்அவனை பார்த்து கூறினார்..”ஓ நீ அவ்வளவு பக்திமானா? உனக்குவேண்டுமென்றால் எனது கால்களை எடுத்து வேறு இடத்தில் வை. என்னால் கால்களை எடுக்க முடியாது..” என்றார்.

கோபத்தின் உச்சகட்டத்திற்கு சென்ற விஸ்வநாதன் , அவரின் கால்களை பற்றி சிவலிங்கத்தின் மேலிருந்து எடுத்து வேறு இடத்ததிற்கு மாற்ற முயற்சிசெய்தான்.
கால்களை எங்கு வைத்தாலும் அங்கே ஓர் சிவலிங்கம் முளைத்தது...

பல இடங்களில் மாறி மாறி வைத்தான்...அனைத்து இடத்திலும் சிவலிங்கம்தோன்றின...

கடைசியல் முடிவுக்கு வந்தவனாக...

தனது தலையில் அவரின் கால்களை வைத்து கொண்டான்...

தானே சிவமானான்...

----------------------------------ஓம்-----------------------------
திருவடி ஞானஞ் சிவமாக்கு விக்குந்
திருவடி
ஞானஞ் சிவலோகஞ் சேர்க்குந்
திருவடி
ஞானஞ் சிறைமல மீட்குந்
திருவடி
ஞானமே திண்சித்தி முத்தியே.
திருமந்திரம்
- 1598

ஞானகுருவின் திருவடி நம்மை முழுமையான பரப்பிரம்ம நிலைக்கு கொண்டுசெல்லும். வேத நூல்களோ அல்லது தத்துவமோ எட்ட முடியாத எல்லையை குருவின்கருணை எளிதில் எட்டிவிடும்.


Friday, September 5, 2008

பிரம்ம ஞானத்தை தேடு ...


கங்கைக்கரை பகுதி.....மெல்லிய தேவலோக இசை போன்ற பாடல் காற்றில் கசிந்து வந்தது....


ஒளிரும் தேகமும் ஞானம் ததும்பும் முகமுடன் பிரம்ம ஞானி அமர்ந்திருந்தார்.
அவரின் ஆசனத்தை சுற்றி சிஷ்யர்களும் பொதுமக்களும் ஆனந்தமயமான நிலையில் இருந்தனர்.

இறைநாமத்தை சங்கீதமாக ஒரு குழு இசைத்துக் கொண்டிருந்தது.
இவை அனைத்தையும் மெளன சாட்சியாக ரசித்துக்கொண்டிருந்தாள் கங்கை.. தேவலோகத்திலிருக்கும் அனைவரும் தங்கள் இடத்தை விட்டு அங்கு வந்துவிடலாம் என எண்ணும் அளவிற்கு தெய்வீக சூழ்நிலையை அங்கு காண முடிந்தது.

தன்முன்
னே ஓர் உருவம் நிழலாடுவதை கண்ட ஞானகுரு கண்களை திறந்தார். எதிரில் பட்டுவேஷ்டி அணிந்து உடல் முழுவதும் சந்தனம் பூசிய நிலையில் ஒருவர் வணங்கி நின்றார். கைகளில் தங்கத்தால் ஆன தட்டும் அதில் வைரம் வைடூரியம் என விலைமதிக்க முடியாத பொருட்கள் நிறைந்து வழிந்தது..

பணக்கார தோரணை கொண்ட அந்த மனிதர் ஞானகுருவை பார்த்து..” உலக மக்களை உயர்நிலைக்கு அழைத்து செல்லும் குருவே...உங்களிடம் எத்தனையோ முறை பிரம்ம ஞானத்தை
உபதேசிக்க கேட்டேன் ஆனால் நீங்கள் மனம் இளகவில்லை. என்னிடம் இருக்கும் விலைமதிக்க முடியாத செல்வத்தை உங்கள் காலடியில் சமர்ப்பிக்கிறேன். எனக்கு பிரம்ம ஞானத்தை உபதேசியுங்கள்...” என கேட்டார்.


ஞான குரு மெல்ல எழுந்து தனது காவி துணியில் அனைத்து செல்வங்களையும் போட சொன்னார். அவரின் காவித்துணியில் அனைத்தும் போடப்பட்டதும் அதை மூட்டையாக கட்டி, தலைக்கு
மேல் உயர்த்தி யாரும் எதிர்பாராத வண்ணம் கங்கையில் எறிந்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத பணக்காரர் கங்கை நீரில் பாய்ந்து அந்த மூட்டையை பிடிக்க நீந்தினார்.


கங்கையின் வேகத்திற்கு மூட்டையும் அவரும் அடித்துச்செல்லப்பட்டார்கள்.
அதுவரை கண்களை மூடி அமர்ந்த்திருந்த சிஷ்யர்கள் நீரில் செல்வந்தர் குதித்த சப்தம் கேட்டு கண்களை திறந்து பார்த்தனர்.

குழப்பம் கொண்ட சிஷ்யர்கள் குருவிடம் கேட்டார்கள்...”குருதேவா என்ன நடக்கிறது? அவர் கங்கையில் குதித்து என்ன தேடிக்கொண்டிருக்கிறார்..?”


தனது ஆசனத்தில் அமந்த ஞான குரு புன்புறுவலுடன் சிஷ்யர்களை பார்த்து கூறினார்...

”அவர் பிரம்ம ஞானத்தை தேடுகிறார்”


----------------------ஓம்------------------------------------------------


நம்மில் பலர் ஆன்மீக உயர்வு நிலையை பணத்தை வழங்குவதன் மூலம் பெறலாம் என எண்ணுகிறார்கள்.

என்னிடத்தில் பலரும் தீட்சை தாருங்கள் அதற்காக நன்கொடை தருகிறோம் என கேட்டதுண்டு.
அப்பொழுது ஞானகுரு கதை எனக்கு நினைவு வருவதுண்டு.

செல்வந்தருக்கு விலைமதிக்க முடியாத செல்வம் பிரம்ம ஞானத்திற்கு ஈடாக தெரிந்ததால்
குருவும் அது பணக்காரனின் பிரம்ம ஞானம் என குறிப்பிடுகிறார்.

கடவுளை பார்க்க கோவிலில் “சிறப்பு” நுழைவாயில் வழியாக செல்லுவதிலிந்து ஆரம்பிக்கிறது நமது ஆணவ செருக்கு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

Thursday, September 4, 2008

ஞானிக்கும் சித்தருக்கும் என்ன வித்தியாசம்?

இளஞ்சூரியன் தனது கதிர்களை சுருக்கிக்கொண்டிருக்கும் மாலை வேளை. தனது சிஷ்யர்களுடன் பயணப்பட்டு கொண்டிருந்தார் பிரபுலிங்கா எனும் ஞானி.
கோகர்ணம் எனும் அழகிய நகரத்தை அடைந்தார்கள்.


கடற்கரையோரம் அமர்ந்து சிஷ்யர்களுடன் சத்சங்கமித்தார் ஞானபுருஷர். தனது சிஷ்யர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவரிடமிருந்து விரிவானதும் ஆழமானதுமான பதில்கள் வெளி வந்தவண்ணம் இருந்தது.


அவரின் முதன்மை சிஷ்யன் பணிவுடன் அவர் முன்வந்து கேள்வி கேட்க துவங்கினான்..

“சத்குரு பல சித்துகள் கைவரப்பட்ட சித்தர் கோரக்நாத் இந்த ஊரில் வாழ்ந்து வருகிறார். அவரின் ஆன்மீக நிலைக்கும் உங்கள் ஆன்மீக நிலைக்கும் என்ன வித்தியாசம்?”

“அனந்தா... எனக்கு எப்படி அவரின் நிலை தெரியும்? ”...தனது உடலை சுட்டிகாட்டி தொடர்ந்தார் ஞானி, “...இதற்கு இதை தவிர அன்னியமான வஸ்து கிடையாது”.

சிஷ்யனுக்கோ அவரின் பதில் திருப்தியை கொடுக்கவில்லை. குருவுக்கு தெரியாமல் சித்தர் கோரக்நாதை சந்தித்து தனது குரு சொன்ன கருத்துக்களை கூறினான்.

எனது அருமை தெரியாமல் உனது குரு அவ்வாறு கூறி இருக்கலாம். நாளை அவர் இருக்கும் இடத்திற்கு நான் வந்து சந்திக்கிறேன். அப்பொழுது அவர் என்னை பற்றி அவர் மட்டுமல்ல அனைவரும் புரிந்துகொள்வீர்கள்” என்றார் கோரக்நாத் சித்தர்.


அதிகாலை நேரம் தனது சிஷ்யர்களுடன் தியானத்தில் இருந்தார் ஞானி பிரபுலிங்கா... சித்தர் அவரின் இருப்பிடத்திற்கு வந்தார்...


கண்களை திறந்து பார்த்த ஞானி அவரை வரவேற்று அமரவைத்தார்.அவர் வந்த காரணத்தை கேட்டார்.

“எனது பெயர் கோரக்நாத், என்னை பற்றி தெரியாது என உங்கள் சிஷ்யர்களிடம் சொன்னீர்களாமே? என்னை பற்றி கூறவே வந்திருக்கிறேன். அஷ்டமா சித்தியை கைவரப்பட்டவன் நான். எனது உடலை காயகல்பமாக்கி இருக்கிறேன்...” என கூறியவாரே தனது இடுப்பில் வைத்திருந்த வாளை எடுத்து தனது மார்ப்பில் குத்தினார்....


அனைத்து சிஷ்யர்களும் அந்த பயங்கரமான செயலால் அதிர்ச்சி அடைந்து எழுந்து நின்றார்கள்...
ஆனால் கோரக்நாத் கையில் இருந்த வாள் வளைந்து போயிற்று. அவர் உடல் காயகல்பம் ஆனதால் வாளைவிட கடினமாக மாறியிருந்தது.

கோரக்நாத் ஞானி பிரபுலிங்காவை பெருமையுடன் பார்த்தார்...அவர் பார்வையில் உன்னால் இதுபோல முடியுமா என்று கேட்பது போல இருந்தது.

தனது சிஷ்யர்களிடம் வாள் கொண்டு வர சொன்னார். அதை கோரக்நாத்திடம் கொடுத்து தனது உடலில் பாய்ச்ச சொன்னார்....


முழுவேகத்துடன் வாள் வீசினார் கோரக்நாத்.... வாள் பிரபுலிங்காவின் உடலில் புகுந்து மறுபுறம் வெளியே வந்தது...
மெல்ல வாளை சுழற்றினாலும் காற்றில் சுழலுவதை போல சுழன்றது...அவர் உடல் அங்கு இருந்தாலும் வாள் அதை தொட முடியவில்லை...


ஞானி பிரபுலிங்கா மெல்ல புன்புறுவலுடன் கூறினார்....”சித்த நிலை என்பது உனது சித்தத்துடன் நின்றுவிடுவது...ஞான நிலை என்பது நான் எனும் அகந்தையை வேறுடன் எடுத்து சித்தத்தை கடந்து சுத்த வெளியில் இருக்கும் தன்மை... ஒருவன் ஞானம் அடைந்ததும் ஆகாசத்தை போல ஆகிவிடுகிறான்..அவனை எதுவும் தடுக்கவோ அசுத்தப்படுத்தவோ முடியாது...ஞானி எல்லை அற்றவன்...சித்தன் உடல் எனும் எல்லைக்கு உட்பட்டவன்..”

சித்தர் கோரக்நாத் ஞானியின் கால்களில் பணிந்தார்...தனக்கு ஞானத்தை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்...

சத்குரு பிரபுலிங்கா பிரம்ம சொரூபத்தை அவருக்கு அளிக்கதுவங்கினார்...


----------------ஓம்---------------

ஆன்மீகத்தை தேடிவரும் பக்தர்கள் அனைவரும் சரியான பாதையில் செல்வதில்லை.
ஞானத்தை தேடாமல் சிலர் காட்டும் போலி வித்தையில் மதிமயங்கி மாயத்தில் விழுகிறார்கள்.

வாயிலிருந்து லிங்கம் எடுப்பவருக்கும் , கடன் தொல்லை நீங்க தீட்சை தருகிறேன் என விளப்பரம் செய்பவர்களிடம் செல்லும் மக்கள் உண்மை நிலையை விளக்கும் ஞானிகளிடன் செல்வதில்லை. அந்த ஞானி சமாதி அனதும் அவர் சமாதியில் தூமம் காட்டும் இழிநிலையிலேயெ இருக்கிறார்கள்..

உள்ளத்தில் உள்ளே உளபல தீர்த்தங்கள் என திருமூலர் கூறியவாக்கை கருத்தில் கொண்டு பிரம்ம ஞானத்திற்கு பாடுபடுவோம்...

Tuesday, September 2, 2008

தூரப்போ....


குகன் எனும் ஒரு பாமர விவசாயி வாழ்ந்துவந்தான் . சிறிதளவு படிப்பறிவு இருந்ததால் பல ஆன்மீக புத்தகங்களை படித்தான். அதன்விளைவாக தனக்கும் ஆன்மீக ரீதியான முன்னேற்றம் ஏற்பட்டு முக்தி அடையவேண்டும் எனஎண்ணினான். அந்த ஊரில் உள்ள கோவில் அர்ச்சகரை அணுகி ஆன்மீகவாழ்க்கைக்கு என்ன செய்யவேண்டும் என விசாரித்தான்.

"நீர் நல்ல அதிர்ஷ்டகாரந்தானையா ... பக்கத்தூரில் ஸ்ரீ-ல-ஸ்ரீ பக்தானந்தா ஸ்வாமிகள் அவர்களே விஜயம் பண்ணிருக்கார் . அவர்கிட்ட போன மந்திரஉபதேசம் செய்வார். அதை ஜபிச்ச போதும் உனக்கு எல்லாம் கிடைக்கும். சுவாமிகோபக்காரர் , சுவாமிகள் கிட்ட போகும்போது பவ்யமா அடக்கமா போகணும். உபதேசம் வாங்கறதுக்கு பதிலா சாபம் வங்கிடாதே சரியா? "..என கூறியஅர்ச்சகரை பார்த்து நன்றி கூறிவிட்டு பக்கத்து ஊருக்கு பயணமானான்.

குகன் எதிர்பார்த்ததை விட அங்கு மக்கள் கூட்டம் கடல் போல திரண்டிருந்தது. தனது வீட்டில் விளைந்த சிறிய மாம்பழங்களை கணிக்கையாக கொடுக்க எடுத்துவந்திருந்தான். சுவாமிகளை நெருங்க முடியுமா என சந்தேகம் கொள்ளும்வண்ணம் மக்கள் நெருக்கம் அதிகமாக இருந்தது. பலமணிநேரம் காத்திருந்தான், சுவாமிகளை பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லை.

சுவாமிகளின் குளத்தில் குளித்து விட்டு பூஜைக்கு வரும் வழியில் கூட்டம்குறைவாக இருப்பதை கண்டு வேகமாக தரிசிக்க ஓடினான். சுவாமிக்கு அருகில்வரும் சமயம் குகன் கால் தடுக்கி சுவாமிகளின் பாதத்தில் விழுந்தான். மாம்பழங்கள் திசைக்கு ஒன்றாக பறந்தன...

அதைகண்டு திடுக்கிட்ட சுவாமிகள், சினம் கொண்டு "தூர போ " எனஆத்திரத்துடன் காலால் அவனை எட்டி உதைத்தார்.

வெள்ளை மனம் கொண்ட குகன், சுவாமி தனக்கு உபதேசம் அளித்துவிட்டார் எனநம்பினான். தன்னை காலால் தொட்டு ஸ்பரிச தீட்சை கொடுத்ததாகவும் "தூரப்போ" என்ற மந்திரம் கொடுத்ததாகவும் முடிவுசெய்து யாரும் தொந்திரவுசெயாதவண்ணம் வனத்தில் சென்று தவம் இருக்க துவங்கினான்.

பல வருடங்கள் கடந்தது...

ஒருநாள்....வனத்தில் ஒரு இடத்தில் கரையான் புற்றுக்கு உள்ளே இருந்துதொடர்ந்து ...'தூரப்போ" எனும் மந்திர ஒலி கேட்டவண்ணம் இருந்தது.
திடீரென தனது உடலில் ஏற்பட்ட அதிர்வால் கரையான் புற்றை உடைத்துகொண்டு வெளிப்பட்டார் ஒரு முனிவர்.

'தூரப்போ" எனும் மந்திரம் அவருக்கு ஸித்தி ஆயிருந்தது. தனது உடலை நீட்டி சரி செய்து நடக்க துவங்கினார். வழியில் காட்டு மரம் ஒன்று வேருடன் விழுந்துபாதையை மறைத்துக்கொண்டிருந்தது.

பிரம்மாண்டமான அந்தமரத்தை கூர்ந்து பார்த்து கூறினார் "தூரப்போ..."

பல யானைகள் கட்டி இழுக்க வேண்டிய அந்த மரம், அவரின் ஒரு சொல்லுக்குகட்டுப்பட்டது போல பல அடிதுரம் தூக்கி எறியப்பட்டது.

தனது மந்திரம் வேலை செய்வதை உணர்ந்தார் குகன் எனும் மாமுனி.
கட்டிற்கு அருகில் இருக்கும் ஊருக்கு பயணமானார். அங்கு எளிமையாக தனதுவாழ்கையை அமைத்து கொண்டார்.

யார் வந்து தனது கஷ்டத்தை கூறினாலும் , அந்த கஷ்டத்தை மனதில் நினைத்து ஒருமுறை தனது மகாமந்திரத்தை ஜெபிப்பார்...."தூரப்போ" உடனடியாகஅவர்களின் கஷ்டம் விலகிவிடும்.

நோயுற்றவர்கள் வந்தால் நோயை நினைத்து .."தூரப்போ" என்றதும் உடனடியாககுணமடைவார்கள். மெல்ல தூரப்போ சுவாமிகளின் புகழ் பரவ ஆரம்பித்தது.

வயது முதிர்த நிலையில் ஒரு துறவி துரப்போ சுவாமிகளை பார்க்க தனதுசிஷ்யர்களுடன் வந்திருந்தார். தனக்கு உடல் முழுவதும் ஒருவித ரோகம்வந்திருப்பதாகவும், துரப்போ சுவாமிகளின் சக்தியை கேள்விப்பட்டு வந்ததாகவும் தன்னை குணப்படுத்தவேண்டும் என வேண்டினார்.

முதிர்ந்த துறவியை கண்ட துரப்போ சுவாமிகளின் எழுந்து அவரின் கால்களில்விழுந்தார். "....மகா குரு ஸ்ரீ-ல-ஸ்ரீ பக்தானந்
தா சுவாமிகள் அவர்களே நீங்கள் தான் எனது குரு. உங்கள் உபதேசத்தால் தான் இந்த சக்தி கிடைத்தது. நீங்கள் வேண்டுவதா? கட்டளை இடுங்கள் உங்கள் சிஷ்யன் நான் உடனேசெய்கிறேன் என்றார்.." துரப்போ சுவாமிகளின்.

தனது மந்திரத்தை மீண்டும் மனதில் நினைத்து குருவை பார்த்தார். அவர் உடலில்உள்ள ரோகம் நீங்கியது.

பக்தனந்த சுவாமிகளுக்கு ஒரே குழப்பம், இவருக்கு நாம் உபதேசித்தோமா எனசந்தேகம் கொண்டு துரப்போ சாமிகளிடம் கேட்டார்.

தனக்கு நேர்ந்த அனுபவங்களை கூறினார் துரப்போ சுவாமிகள்.

தனது ஆணவத்தாலும் கோபத்தாலும் தவறு நடந்ததை உணர்த்த பக்தனந்தசுவாமிகள் ...."துரப்போ சுவாமிகளே எனது அலட்சியத்தாலும் ஆணவத்தாலும் அன்று உங்களிடம் அப்படி நடந்து கொண்டேன். எனது ஆணவம் என்னை விட்டுபோக என் ஆவணத்தை பார்த்து தூரப்போ எனும் மந்திரத்தை சொல்லி இந்தபாவிக்கு மோட்சம் அளியுங்கள் .." என வேண்டினார்.

"எனது குருநாதா...எனக்கு நீங்கள் தீங்கு எதையும் விளைவிக்க வில்லை. உங்களை ஆணவம் கொண்டவராக பார்க்கும் அளவுக்கு நான் வளர்ந்துவிடவும் இல்லை. நீங்கள் அளித்த மந்திரம் உங்களையும் என்னையும் இணைத்துநன்மையையே ஏற்படுத்தி உள்ளது. இனிவரும் காலத்தில் உங்களின் எளியசிஷ்யனாக இருக்க ஆசைப்படுகிறேன்...இதற்கு நீங்கள் அனுமதி அளிக்கவேண்டும்..." என தூரப்போ சுவாமிகள் வேண்டினார்.

பின்பு தூரப்போ சுவாமிகள் சப்தமாக கூறினார்..."எனக்குள் இருக்கும் மந்திர ஆற்றலை பார்த்து கடைசியாக சொல்கிறேன் ...

"தூரப்போ"....

அங்கே துரப்போ சுவாமிகள் மறைத்து குகன் நின்று இருந்தான்...
தனது குரு பக்தனந்
தா வுடன் எளிய சிஷ்யனாக பயணமானான் குகன்.

-------------------------ஓம்--------------------------

குரு நிலையை உணர்தவர்கள் அனைத்தையும் துறக்க முடியும்...
குருவை ஆழமாக பூஜிப்பவர்கள் தான் குருவை உணர முடியும்... குரு அருள் பெறமுடியும்...

தெளிவு குருவின் திருமேனி காண்டல் என திருமூலர் கூறிய வாக்கு மிகவும் சக்திவாய்ந்தது தானே?

Thursday, August 14, 2008

சிவயோகி கண்ணுசாமி

கன்னகோல் கண்ணுசாமியை அனைவருக்கும் தெரியும். அவனின் முக்கிய தொழிலே திருடுவதுதான்.

கண்ணுசாமியின் தொல்லை தாங்க முடியாமல் ஊர் பஞ்சாயத்து அவனுக்கு தண்டனை கொடுத்து தலை மொட்டை அடிக்கப்பட்டு ஊரைவிட்டே ஒதுக்கி வைத்தார்கள்.

இதனால் சரிவர தொழிலை செய்ய முடியாத காரணத்தால் வறுமையில் வாடினான் கண்ணுசாமி. இந்த ஊரில் இருந்தால் வறுமையில் வாடி இறந்து போக நேரிடும் என வேறு ஊருக்கு சென்று தொழில் செய்ய எண்ணினான்.

கால்நடையாக பல நாட்கள் நடந்து ஒரு ஊரை அடைந்தான். பசி அவனை பாடாய் படுத்தியது. சூரியன் சாயும் மாலை நேரத்தில் உணவுக்காக தேடுதலை தொடங்கினான்.

பசி தாங்க முடியாமல் அங்கும் இங்கும் அலைந்தான். அங்கு தோட்டம் ஒன்று இருப்பதை கண்டான். பூசணிக்காய்கள் விளைவிக்கப்பட்டு பெரிய தோட்டமாக காட்சியளித்தது. ஒரு பூசணி பழத்தை உண்டால் தனது பசி அடங்கும் என நினைத்த கண்ணுசாமி மெல்ல பூனை போல தோட்டத்தில் இறங்கினான். நல்ல பழுத்த பூசணிப்பழத்தை பறிக்க முற்படும் பொழுது திடீரென காவல்காரன் யாரோ தோட்டத்தில் நடமாடுகிறார் என பார்த்துவிட்டான்.

காவல்காரனின் கூச்சல் கேட்டு ஆட்கள் ஓடிவர கண்ணுசாமிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.கரும்பு அல்லது வாழை தோட்டம் என்றால் மறைந்துகொள்ளலாம். பூசணி தோட்டத்தில் மறைந்து கொள்ள இடமா இருக்கும்?

உடனடியாக அவனின் தொழில் புத்தி வேலை செய்ய துவங்கியது. தனது உடைகளை அவிழ்த்து தோட்டத்துக்கு வெளியே வீசி எறிந்தான். உடல் முழுவதும் பூசணிக்காய்கள் மேல் இருக்கும் சாம்பலை எடுத்து பூசிக்கொண்டான்.

காவலாளியுடன் ஓடிவந்த மக்கள் மழிக்கப்பட்ட தலையும், மெலிந்த தேகமும் , கோவணமும் மற்றும் திருநீர் பூசப்பட்ட உடலுடன் ஒரு சிவயோகி நின்று இருப்பதாய் கண்டனர்.
அனைவரும் அவரின் கால்களில் விழுந்து வணங்கி ஆசி வேண்டினர்.

இனி கன்னகோல் கண்ணுசாமியை நாம் சிவயோகி என்றே அழைப்போம்.

சிவயோகியை அழைத்துவந்து அந்த தோட்டத்தின் ஒரு மூலையில் குடிசை அமைத்து தங்க வைத்தனர். உணவு வழங்கினார். சிவயோகிக்கு மகிழ்ச்சி தங்கவில்லை. பசியால் பூசணியை சாப்பிட போன சிவயோகிக்கு இப்போலோது விதவிதமான உணவுகள் கிடைக்க துவங்கியது. தான் வாய் திறந்தால் உண்மை தெரிந்துவிடும் என்பதால் மௌனமாக இருந்தார் சிவயோகி. யாரிடமும் பேசுவதில்லை.

சிவயோகி அந்த ஊருக்கு வந்திருப்பது காட்டுத்தீயாக பரவியது. கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து தரிசிக்க துவங்கினார்.

ஆன்மீக தேடல் உள்ள ஒரு வாலிபன் சிவயோகியை காண வந்தான். அவர் முன் அமார்ந்து பல ஆன்மீக கேள்விகளை கேட்டான். ஒன்றுக்கும் சிவயோகி பதில் சொல்லவில்லை. மௌனமாக அவனை பார்த்துகொண்டிருந்தார்.

இளைஞனும் விடுவதாக இல்லை. சிவயோகியின் கால்களை பிடித்து "ஐயனே ஞானம் அடைய என்ன செய்ய வேண்டும் என கூறுங்கள். அதுவரை உங்கள் காலடியை விடமாட்டேன்" என்றான்.

சிவயோகிக்கோ என்ன செய்வது என்றே தெரியவில்லை. வாலிபன் போக விட்டால் இன்று கிடைக்கும் உணவும் காணிக்கைகளும் பாதிக்கப்படுமே என எண்ணினார்.
பலர் கூடி இருக்க இவன் நம்மை சிக்கலில் மாட்டிவிடுவான் என நினைத்து...அவனை மெல்ல கைகளால் தூக்கினார்.

வாய்திறந்தால் தனது ஞானம் தெரிந்துவிடும் என சைகையில் தனது கதையை சொல்ல துவங்கினார். அங்கும் இங்கும் அலைவது போலவும் , பூசணிக்காயை குறிக்க பந்து போல கண்பித்து , உடலில் அதை பூசினதாக சைகை செய்தார்.

அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த வாலிபனுக்கு கண்களில் கண்ணீர் வர ஆரம்பித்தது. "குருவே...அருமையான உபதேசம். அலைந்து திரியாதே , ஜகம் அனைத்தும் உனக்கு உள்ளேயே இருக்கிறது என அருமையான உபதேசத்தை எனக்கு அளித்தீர்கள், எனது ஞானத்தின் சாவி உங்களிடம் கிடைத்தது" என வாலிபன் கூறினான்.

சிவயோகியை முன்று முறை சுற்றி விழுந்து வணங்கி விடைபெற்றான். தனக்குள்ளே இருக்கும் விஷயத்தை தேடி தேடி ஒரு நாள் ஞானம் அடைந்தான் வாலிபன்.

----------------------ஓம்-----------------------------------------
இந்த கதையில் திருடன் குருவாக இருப்பதாய் கண்டு இது சாத்தியமா என எண்ணலாம். வால்மிகி கூட ஒரு கொள்ளைக்கரனாக இருந்தார், பிறகு ராம நாமத்தால் உலகின் அனைவரின் மனதையும் கொள்ளையடித்தார் அல்லவா?

திருமூலர் தனது மந்திரத்தில் "கள்ள புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே" என்கிறார்.
நமது ஆன்மாவிற்கு தெரியாமல் கள்ளத்தனமாக செயல்படும் புலன்களை நல்வழிப்படுத்தினால் ஆன்மீக உயர்வு பெறலாம்.

குரு எப்படிப்பட்டவர் , குரு ஞானம் அடைந்தவரா என்பது முக்கியமில்லை,
நாம் அவர் மூலம் ஞானம் பெறுவோமா என்பது தான் முக்கியம்.

Tuesday, August 12, 2008

குரு நமச்சிவாயர்

நினைத்தாலே முக்தியளிக்கும் திருவண்ணாமலை....

அண்ணாமலையானின் மடியில் இருப்பதை போல அமைத்திருந்தது அந்த குகை.


பெரிய கோவிலின் கோபுரங்கள் பார்க்கும் வண்ணம் இருந்த குகையின் வெளியே அமர்ந்திருந்தார் குகை நமச்சிவாயர்.

அடிக்கடி நமச்சிவாய நாமத்தை சொல்வதாலும் , குகையில் வசிப்பதாலும் அம்முனிவரை அனைவரும் குகை நமச்சிவாயர் என அழைத்தனர்.

அவருக்கு அருகில் அவரது சிஷ்யன் தனது குருவிக்கு உதவ அருகில் நின்று இருந்தான்.

"குளுக்"
ஆழ்ந்த அமைதி சூழ்ந்திருந்த வேலையில் சிஷ்யன் சிரிக்கும் ஒலி கேட்டு நிமிர்ந்தார் குகை நமச்சிவாயர்.

"என்னப்பா அவ்வளவு சிரிப்பு? அந்த வேடிக்கையை எனக்கும் சொல்ல கூடாதா?" என்றார் குகை நமச்சிவாயர்.

"குருவே எனது இடையூருக்கு மன்னிக்கவும். திருவாரூர் தேர் வரும் பொழுது அதன் முன் ஆடிய பெண் ஒருவள் கால் தடுக்கி விழுந்தால் , அனைவரும் சிரித்தனர் அதனால் நானும் சிரித்தேன் " என்றார்.

குகை நமச்சிவயருக்கோ ஒரே ஆச்சரியம். திருவண்ணாமலை வசித்துக்கொண்டு எப்படி நம் சிஷ்யன் திருவாரூரை ரசிக்கிறான் என நினைத்து கொண்டார்.

சில நாட்கள் சென்றன...

குகை நமச்சிவாயர் அமர்ந்து சிஷ்யனுடன் ஞான கருத்துக்களை விளக்கி கொண்டிருந்தார்.

திடீரென பதற்றமாக சிஷ்யான் தோளில் கிடக்கும் துண்டை எடுத்து உதறி மீண்டும் அணிந்து கொண்டார்.

சிஷ்யனின் பதட்டத்தை கண்ட குரு அதன் காரணத்தை கேட்டார்.

"சிதம்பரத்தில் நடராஜர் சந்நிதியில் தீபாராதனை காட்டும் பொழுது அங்கு இருந்த திரை சீலை தீ பற்றி கொண்டது . அதை அணைத்தேன், அதனால் உங்கள் பேச்சை நடுவில் தடுத்ததற்கு என்னை மன்னியுங்கள்" என்றார்.

சிஷ்யனின் செயல் வினோதமாக இருப்பதால் அவனது குரு பக்தி உண்மையா எனவும் சோதிக்க எண்ணினார்.

சிஷ்யன் அருகில் இருக்கும் பொழுது திடீரென வாந்தி எடுத்தார். சிஷ்யனை அழைத்து "இதை யார் காலிலும் படாத இடத்தில் போட்டுவிட்டு வா" என பணிந்தார்.

சிறிதி நேரத்திக்கு பிறகும் சிஷ்யன் எங்கும் செல்லாமல் அங்கு இருப்பதை கண்டு நான் இட்ட பணியை செய்தாயா? என கேட்டார்.

"ஐயனே அதை அப்பொழுதே செய்துவிட்டேன்" என்றான் சிஷ்யன்.

"எங்கு அதை போட்டாய்?" என்றார் குகை நமச்சிவாயர்
.
"குருவே யார் காலும் படாத இடம் எனது வயிறு மட்டுமே. எனவே நீங்கள் கொடுத்ததை விழுங்கி விட்டேன்" என்றான் குரு பக்தியில் சிறந்த சிஷ்யன்.

தன்னை விட பக்தியிலும் ஞானத்திலும் சிறந்து விளங்கும் சிஷ்யனை பெருமிதத்துடன் பார்த்தார் குரு.

சிஷ்யனனே உனது பக்தியால் என்னையே மிஞ்சிவிட்டாய் , இனிமேல் உன்னை அனைவரும் குரு நமச்சிவாயர் என அழைப்பார்கள் என ஆசிர்வதித்தார் குகை நமச்சிவாயர்

----------------- ஓம்-------------------
கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக
உள்ள பொருளுடன் ஆவியுடன்ஈக
எள்ளத்தனையும் இடைவேடா தேநின்று
தெள்ளி யறியச் சிவபதந் தானே
திருமந்திரம் - 1692

குருவிடம் காட்டும் பணிவு நம்மை உயர் நிலைக்கு கொண்டுசெல்லும்.

குருவின் அருள் இருக்குமானால் நமது ஆன்ம சாதனையில் பல முன்னேற்றம் இருக்கும். அதை தவிர வேறு என்ன வேண்டும் இப்பிறவியில்?

Saturday, August 9, 2008

ஓர் துறவி இப்படி செய்யலாமா?

குருவும் சிஷ்யனும் பயணத்தில் இருந்தார்கள். சன்யாச தர்மத்தை கடைப்பிடிப்பதால் பிச்சை எடுக்க ஒரு பாத்திரம் மற்றும் ஒரு மாற்று உடையுடன் பயணத்தில் இருந்தார்கள்.

வழியில் ஒரு ஓடை குறுகிட்டது. அதை கடக்க இருந்த பாலம் பழுது பட்டிருந்தது. இருவரும் அதை பற்றி யோசித்து கொண்டிருக்கும் பொழுது அழகிய மங்கை ஒருவள் அங்கு வந்தாள்.
பாலம் பழுது பட்டிருப்பதை கண்டு வருத்தம் கொண்டாள். துறவி இருவரையும் பார்த்து, " தெய்வீகமானவர்களே அவசரமாக அக்கரைக்கு செல்ல வேண்டும். எனக்கு உதவி செய்ய முடியுமா?" என கேட்டாள்.

உடனே குரு சிறிதும் தாமதிக்காமல் அவளை தோள்களில் சுமந்து கொண்டு ஓடையில் இறங்கி மறுகரையில் சேர்த்தார். இச்செயல் சிஷ்யனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இருவரும் பயணத்தை தொடர்ந்தனர். சிறிது நேரத்துக்கு பின் குரு சிஷ்யனை கண்டார். பெருத்த யோசனையுடன் வரும் சிஷ்யனிடம் கேட்டார் "மகனே ஏன் இந்த யோசனை? வாழ்க்கையிலும் சரி வழிப்பயணத்திலும் சரி மனதில் கணம் இருந்தால்
பயணம் ருசிக்காது. சொல் என்ன உனக்கு பிரச்சனை?"

"எனது குருவே நாம் துறவி அல்லவா? அந்த பெண்ணை நீங்கள் தோளில் சுமந்து எப்படி சரியான செயலாகும் ?" என்றான் சிஷ்யன்.

சிஷ்யனை ஆழமாக பார்த்த குரு தொடர்ந்தார். ...
"உனது கேள்வியால் மகிழ்தேன். எனது சிஷ்யா , அப்பெண்ணை நான் சில நிமிடம் தான் தோளில் சுமந்தேன் ஆனால் நீயோ அவளை நெடுந்தொலைவு மனதில் சுமந்து கொண்டு வருகிறாயே இது மட்டும் முறையா? சன்யாசம் என்பது பற்றற்று மனதில் தூய்மையை சிறிதும் இழக்காமல் இருப்பதே ஆகும்.."

மனதில் இருந்த மங்கையை இறக்கி வைத்து பூரணத்துவம் அடைந்தான் சிஷ்யன்.

----------------------ஓம்------------------

இந்த கதையை படித்ததும் இது எல்லாம் நடைமுறையில் நடக்குமா? அல்லது சுவாரசியத்துக்காக புனயப்பட்டதா என சந்தேகம் உதிக்கலாம்.

பழங்கலம் முதல் இந்த கதை வழக்கத்தில் இருந்தாலும், இது குரு-சிஷ்யனுக்கு இடையே நடந்த உண்மை சம்பவமாகும்.

உண்மை சம்பவத்தை விவரிக்கிறேன் .....

ரிஷிகேஷ் எனும் ஆன்மீக பூமி.
மாலை நேரத்தில் கங்கை நதி ஓரமாக தெய்வீகமாக கட்சி அளித்தது ஆனந்த குடீரம்...

சத்சங்கம் முடிந்ததும் சன்யாசிகள் சூழ நடை பயிற்சியில் ஈடுபட்டார் குருநாதர்.
அந்த குழுவில் ஒரு தாயும் மகளும் தவிர அனைவரும் ஆண் சன்யாசிகள்.

அனைவரும் ஆசிரமத்தை விட்டு சிறிது வனப்பகுதில் நடந்து கொண்டிருக்கும் பொழுது அந்த விபரீதம் நடந்தது. தாயுடன் வந்த அந்த இளவயது மகள் திடீரென "ஐயோ" என கதறி கீழே விழுந்தாள். அவளை தேள் ஒன்று தீண்டிருந்தது..

தனது மகளுக்கு நேர்ந்த துன்பத்தை கண்ட தாயும் கதறி அழ துவங்கினார். சன்யசிகளோ என செய்வது என திகைத்து நின்றனர்.

குருநாதர் அங்கு நடப்பதையும் தனது சிஷ்யர்களின் செயல்பாட்டையும் கவனித்து கொண்டிருந்தார்.

சில சன்யாசிகள் ஆசிரமம் சென்று கட்டை மற்றும் கயிறுகளை கொண்டுவந்து அதில் அப்பெண்ணை கொண்டு செல்லலாம் என திட்டமிட்டனர். மேலும் சிலர் வேறு வழிமுறைகளை ஆலோசித்தனர்.

இதனிடையே ஒரு சன்யாசி விரைந்து வந்து அந்த கன்னி பெண்ணை தூக்கி தோளில் போட்டுகொண்டு காட்டுப்பாதையில் விரைவாக பயணித்து ஆசிரம மருத்துவமனையில் சேர்த்தார்.

சில காலத்துக்கு ஆசிரமம் முழுவதும் இதே பேச்சாக இருந்தது. கன்னி பெண்ணை எப்படி சன்யாசி தொட்டு தூக்கலாம் என பேசினார்கள். ஆனால் இதை குருவும், அப் பெண்ணை தூக்கிய சிஷ்யரும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.

சில மாதங்கள் சென்றன. ..

ஆசிரமத்தில் வளர்ந்து வந்த ஒரு நாய் நோய்வாய்ப்பட்டது. உடல் முழுவதும் சொறியும், சீளுமாக காட்சியளித்தது. நோய்வாய்ப்பட்ட நாயை கால் நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல யாரும் முன்வரவில்லை. உடனே அந்த சன்யாசி ஒரு துணியால் அந்த நாயை எடுத்து வாகனத்தில் வைத்து மருத்துவ மனைக்கு செல்ல உதவினார்.

சத்சங்கத்தில் குரு கூறினார். .."எனது சிஷ்யனுக்கு கன்னி பெண்ணும் , நோயுற்ற நாயும் ஒன்றுதான். சன்யாசம் ஆன்மாவில் இருக்கவேண்டும், மனதில் அல்ல."

இந்த உண்மை சம்பவத்தில் வரும் குரு : சுவாமி சிவானந்தர் - www.dlshq.org
சிஷ்யன் : சுவாமி சச்சிதானந்தா - www.swamisatchidananda.org

ஆதாரம் : வாழ்வும் வாக்கும் -சுவாமி சச்சிதானந்தா

Thursday, July 31, 2008

கொடி அசைந்ததும் காற்று வந்ததா?

மாலை வேளை....வேதாந்த ஆச்ரமம் ரம்யமாக இருந்தது...
நந்தவனத்துடன் கூடிய ஆச்ரமம் முன்பு மாணவர்கள் அமர்ந்து விவாதித்து கொண்டிருந்தனர்.

தர்க்கம் , மீமாம்சை என பல வேத கருத்துக்களை மாணவர்கள் அந்த ஆசிரமத்தில் பயின்று வந்தார்கள்.

அப்பொழுது தென்றல் வீசியது...நந்தவனத்தில் இருந்த மலர் கொடி அசைந்தது...
இதை கண்ட மாணவர்களுக்குள் தர்க்கம் ஆரம்பித்தது.

"காற்று வந்ததும் கொடி அசைந்ததா?" என ஒரு பகுதியும் ,
"கொடி அசைந்ததும் காற்று வந்ததா? " மற்றொரு பகுதியும்
என மாணவர்கள் இரு பகுதியாக பிரிந்தனர்.

இந்த தர்க்கம் முற்றிபோகவே , சப்தம் கேட்டு குரு நாதர் வெளியில் வந்தார்.

இரு குழுவின் தர்கத்தையும் கேட்டார்.

பின்பு அனைவரையும் பார்த்து கூறினார் ..."பிரிய ஆன்மாக்களே...! கொடியும் அசையவில்லை, கற்றும் வீசவில்லை... உங்கள் மனம் அசைந்தது , அதனால் எண்ணம் உங்கள் மனதில் வீசியது. "

வேதாந்த மாணவர்கள் உண்மையான வேத சாரத்தை உணர்தார்கள்.

----------------------------- ஓம் ------------------------------------------------

ஆதி சங்கரரின் வேதாந்த கருத்தை எளிமையாக உணரும் கதை இது...

நமது கண்களில் தெரியும் உலகம் என்பது உண்மையல்ல. நமது மனம் அசைவதால் அனைத்தும் அசைவதாக தெரிகிறது...

அதனால் தான் வேதம் நம்மை "அசதோமா ஸத்கரமய" என இருள் நிலையில் இருந்து உண்மை நிலைக்கு வர ப்ராத்தனை செய்ய சொல்கிறது.


அசைவற்ற மனதை கொண்டு என்றும் ஆசையற்றவனை உணருவோம்.

Sunday, July 27, 2008

நாம ஜபம்

சப்த ரிஷிகளில் ஒருவரான நாரதர் எப்பொழுதும் கையில் தம்பூராவுடன், " ஓம் நமோ நாராயணாயா:" எனும் மந்திரத்தை சொன்னபடி மூன்று உலகையும் வலம் வருபவர். பக்திக்கு உதாரணமான நாரத முனிவர் பற்றி நமக்கு தெரியும்...
ஆனால் அவர் ஏன் அந்த மந்திரத்தை எப்பொழுதும் ஜபிக்கிறார் என தெரியுமா?


ஒரு நாள் வைகுண்டத்தில் ஸ்ரீமன் நாராயணன் அனந்த சயனத்தில் இருந்தார். அவரின் பாத கமலத்திற்கு அருகில் மகாலக்ஷ்மி அமர்த்திருந்தார்.
அங்கு வந்த நாரதர் "பரப்பிரம்ம சொரூபா, அனைவரும் உனது நாமத்தை சொல்கிறார்களே ? அப்படி என்ன இருக்கிறது உனது நாமத்தில்?" என கேட்டார்.

தேன் சொட்டும் சிரிப்புடன் மஹாவிஷ்ணு நாரதரை பார்த்தார். "நாரதா நாம ஜபத்தின் மகிமையை உனக்கு விளக்குவதை விட, நீயே பரீட்சித்து பார்த்து தெரிந்து கொள். பூலோகம் சென்று தென்திசை தேசத்தில் ஒரு வனம் இருக்கும். அங்கு வாழும் ஒரு புழுவிடம் மஹா மந்திரத்தை சொல்." என்றார்.

பரந்தாமன் சொன்ன வனத்தை நோக்கி பயணமானார் நாரதர். அங்கு ஒரு புழு இலையின் மீது ஊர்ந்து கொண்டிருந்தது. அதன் அருகில் சென்று கூறினார் ....
" ஓம் நமோ நாராயணாயா:"

உடனே அந்த புழு செத்து விழுந்தது.நாரதர் குழப்பம் அடைந்து வைகுண்டம் சென்றார்.
"பரமாத்மனே நான் நாமத்தை கூறியதும் அந்த புழு செத்து விழுந்தது. இது தான் உங்கள் நாம மகிமையா? " என கேட்டார் நாரதர்.

மந்தகாச புன்னகையுடன் மாதவன் கூறினார்.."நாரதா மீண்டும் பூலோகம் செல் அங்கு ஒரு பசு மாடு ஒரு கன்றை ஈனும் அதனிடம் சென்று மஹா மந்திரத்தை சொல்" என்கிறார்.

நாரதர் மீண்டும் பூலோகம் வந்தார். அங்கு இவருக்காகவே காத்திருந்ததை போல ஓர் பசு மாடு கன்றை ஈன்றது. கன்றின் அருகில் சென்று கூறினார் ....
" ஓம் நமோ நாராயணாயா:"

பிறந்து சில நிமிடங்களே வாழ்ந்த அந்து கன்று கீழே விழுந்து இறந்தது.
நாரதர் திடுக்கிட்டார். என்ன ஒரு பாவம் செய்து விட்டோம்?. பசுமாட்டை கொல்வதே மஹா பாவம். இதில் பிறந்து சில கணமேயான கன்றாக இருக்கும் பொழுதே அல்லவா கொன்றுவிட்டோம்.

வைகுண்டத்துக்கு ஓடோடி வந்தார் நாரதர். "பிரபோ ...! நான் மஹா பாவம் செய்து விட்டேன். உங்கள் நாமத்தை சொன்னதும் கன்று இறந்து விட்டது. இது என்ன விளையாட்டு? "

"நாரதா கவலை படாதே , மீண்டும் ஒரு முறை பூலோகம் சென்று மஹா மந்திரத்தை சொல். அங்கு ஒரு சிறுவன் விளையாடிக் கொண்டிருப்பான். இந்த முறை அவனிடம் சொல்" என்றார் அனைத்தும் அறிந்த அச்சுதன்.

நாரதருக்கோ பயம். ஏற்கனவே இரு முறை பட்ட அநுபவம் அவரை நடுங்க வைத்தது. ஒரு சிறுவன் தன்னால் மடிந்து விடக்கூடாதே என கவலை பட்டார்.
தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பூலோகம் வந்தார்.

அங்கு சிறுவன் பொம்மைகளுடன் விளையாடி கொண்டிருந்தான். அவனருகில் சென்ற நாரதர் கூறினார்....
" ஓம் நமோ நாராயணாயா:"

நீங்கள் எதிர்பார்த்தது சரிதான்.. அந்த சிறுவன் நாமத்தை கேட்ட மாத்திரத்தில் இறந்தான்.

நாரதருக்கோ பித்து பிடித்த நிலை அடைந்தார். வைகுண்ட வாசன் ஏன் நம் வாழ்கையில் விளையாடுகிறார் என சந்தேகம் கொண்டார்.

மீண்டும் வைகுண்டம் அடைந்தார். அங்கு ஸ்ரீ மந் நாராயணனும் மஹா லக்ஷிமியும் அமர்ந்திருக்க அவர்களின் பாத கமலத்திற்கு அருகில் ஒரு முனிவரும் அமர்ந்து இருந்தார்.

மனம் தடுமாறிய நிலையில் வந்த நாரதரை கண்ட கேசவன் கேட்டார் ," நாரத என்ன ஆயிற்று உனக்கு?" என வினாவினார்.

தனது ஐயத்தை கேட்பதற்கு முன் வைகுண்டத்தில் புதிதாக வந்த முனிவரை குழப்பத்துடன் பார்த்தார் நாரதர். பின்பு வைகுண்டவாசனை நோக்கி "ஐயனே இது என்ன சோதனை. நான் மஹா மந்திரம் ஜபிக்கும் இடத்தில் எல்லாம் உயிர்கள் அனைத்தும் இறந்து விடுகின்றன. பால் மனம் மாறாத பாலகன் அவனும் எனது நாமத்தை கேட்டு இறந்து விட்டான். உங்கள் நாமம் அவளவு கொடுமையானதா ? அல்லது நான் உச்சரித்தது தவறா?" என கேட்டார் பக்திக்கு சூத்திரம் சொன்ன நாரதர்.

வாசுதேவர் நாரதரை பார்த்தார் ," நாரதா நீ சொல்வதிலும் உண்மை இருக்கும் என நினைக்கிறேன். எங்கே என் முன்னாள் ஒரு முறை மஹா மந்திரத்தை கூறு" என்றார்.

அனந்த சயனன் இருக்கும் தைரியத்தில் தனது மனதை திடமாக்கி கண்களை மூடி மீண்டும் ஒருமுறை சொன்னார்.
" ஓம் நமோ நாராயணாயா:"

நாரதர் கண்களை திறந்து பார்த்ததும் , ஸ்ரீ மன் நாராயணனின் பாதத்தில் இருந்த முனிவர் உடலை விடுத்து பரமாத்மாவிடம் சரணடைந்தார்.

நாரதர் ஒருவித கலக்க நிலை அடைந்தார்.

வரம் அளிக்கும் கரிவரத மூர்த்தியானவர் நாரதரை பார்த்து கூறினார் "....பக்தியின் வடிவமான நாரதா...எனது நாமத்தை உச்சரித்தால் அனைத்து உயிர்களும் முக்தி அடையும். உனது நாமத்தை கேட்டதும் புழு பசுவாகவும், பசு பாலகனகவும், மறு பிறப்பை அடைந்தது. பாலகன் மாமுனியாக அவதரித்ததும் மஹா மந்தரத்தால் தான் . கடைசியாக நீ மஹா மந்திரத்தை உச்சரித்தும் அந்த மாமுனியும் முக்தி அடைந்தான்....

மஹா மந்திரம் அனைவரையும் முக்தியடைய வைக்கும் சாதனம் என்பதை உணர்த்தவே உன்னை பயன்படுத்தினேன். ... மஹா மந்த்திரத்தை கேட்பவர்களுக்கே முக்தி என்றால் , அதை ஜபிப்பவர்கள அடையும் பயனை எண்ணிப்பார்"


நரதனுக்கு அனைத்தும் புரிந்தது. அன்று முதல் கையில் தம்பூராவுடன் தொடர்ந்து
உச்சரிக்க தொடங்கிறார்...

" ஓம் நமோ நாராயணாயா:"

" ஓம் நமோ நாராயணாயா:"

" ஓம் நமோ நாராயணாயா:"


--------------------ஓம்--------------------------


இந்த கதையை படிக்கும் சுவாரசியத்தில் உங்களை அறியாமல் எத்தனை முறை மஹா மந்திரம் ஜபித்தீர்கள் பார்த்தீர்களா? உங்களையும் சுற்றி இருக்கும் அனைத்து வஸ்துவையும் வளமாக்கும் ஒரே மந்திரம் மஹா மந்திரமே.

மேலும் ஸ்ரீ மந் நாராயணனின் ஸஹஸ்ர நாமத்தில் உள்ள சில பெயர்களை கதையில் சேர்த்தால் ஸஹஸ்ர நாமம் சொன்ன பலனும் கிடைத்தது.


மஹா வாக்கியம் என்றும் பொய்ப்பதில்லை . மந்திர ஜபம் நம்மை நல்கதிக்கு நாரதரை போல கொண்டு செல்லும்.


" ஓம் நமோ நாராயணாயா:"