Saturday, July 24, 2010

சுழற்சியில் மாட்டிய குருவும் சிஷ்யனும்



போன ஜென்மத்தை காட்டுகிறேன் வா என என் நெற்றிப் பொட்டில் கை வைத்தார் குரு நாதர்.

அந்த ஜென்மத்தின் நினைவுகள் தெரியத்து வங்கியது.

அதில் அடுத்த ஜென்மத்தை காட்டுகிறேன் வா என என் நெற்றிப் பொட்டில் கை வைத்தார் குரு நாதர்.

இவ்வாறு நாங்கள் பிறவிச் சுழற்சியில் மாட்டிக்கொண்டோம்..!

-----------------ஓம்-----------------

எந்த சிஷ்யனிடமும் குரு தான் அதை செய்கிறேன் இதை செய்கிறேன் என கூறுவதில்லை.
அவ்வாறு கூறுபவர் அகந்தையின் சொரூபமாக தான் உயர்ந்தவன் என காட்டவே செய்கிறார்.

அவர் குரு நிலையில் இருக்க வாய்ப்பில்லை.

பல ஜென்மங்களை காட்டுகிறேன் என கூறுபவரை விட...

உனக்கு உன் இருப்பை மட்டுமே காட்டுகிறேன் என்ற விழிப்புணர்வை கொடுப்பவரை குருவாக இருக்க முடியும்.

கடவுள் ஒரு காட்டு எருமை..!

“குருஜீ நீங்க பிறக்கு போதே இந்த தாடி இருந்துச்சா?”

“தினமும் ஏன் குருஜீ மாலையை விரலால தேச்சு சேதமாக்கனும்?”

“எப்பவும் நாமதான் மூச்சு எடுக்கறோமே அப்பறம் ஏன் காலையில தனியா ஒரு மணிநேரம் மூச்சு எடுக்கனும்?”

மேற்கண்ட கேள்விகளின் நாயகன் மாதவனுக்கு பதினாறு வயது நேற்றுடன் முடிந்து. வயதுக்கு ஏற்ற வளர்ச்சி இல்லை என்பார்கள். சிறு வயதிலிருந்தே மிகவும் குறும்புக்காரனாக வளர்ந்ததால் வீட்டில் இவனின் சேட்டைகளை அளவிட முடியாமல் பெற்றோர்கள் தவித்தார்கள்.

நல்வழிபடுத்தும் நோக்கில் பரமாணந்த ஆசிரமத்தில் கொண்டு விட்டு விட்டார்கள். ஆசிரமத்தில் அவனுக்கு தெரியாததே இல்லை என்பதை போல எந்த வேலையை கொடுத்தாலும் சலிக்காமல் செய்வான். சில நேரங்களில் சிறப்பாக செய்கிறேன் பேர்வழி என தனது புத்திச்சாலித்தனத்தால் குளறுபடிகளும் நடக்கும். அசிரமத்தில் பலர் இவனை கிண்டலும் கேலியும் செய்வதுண்டு.

இவனின் முட்டாள் தனமான கேள்விகளுக்கு சில நேரம் குரு பொருமையாக பதில் அளித்துக்கொண்டு இருப்பார். சில நேரங்களில் சிரித்துவிட்டு செல்வார். குரு மாதவனுக்கு முக்கியத்துவம் கொடுத்து விளக்குவது ஆசிரமவாசிகளுக்கு ஆச்சரியத்தை கொடுக்கும்.

இவ்வளவு பொறுமையான குருவையே ஒரு நாள் கோபப்படுத்தினான் மாதவன். குரு தனது அன்றாட பூஜைக்காக மலர்களை நந்தவனத்தில் பறித்துக் கொண்டிருந்தார்.


உருவமற்ற பரம்பொருளை மானச பூஜை செய்வது குருவின் பூஜாமுறைகளில் ஒன்று. அவ்வாறு அவர் பூஜைக்காக தயாராகி வரும்பொழுது மாதவன் குருவின் அருகே வந்தமர்ந்து அவர் செய்வதை கவனித்துக் கொண்டிருந்தான்.

திடீரென பூ இருக்கும் தட்டிலிருந்து மகிழம் பூவை எடுத்து நாசிக்கு அருகில் வைத்து நுகர்ந்தான்.

இச்செய்கையை கண்ட குரு, “மாதவா கடவுளுக்கு வைத்திருக்கும் பூவை இப்படி செய்யலாமா? போ வெளியே” என கோபம் கொண்ட வார்த்தைகளால் கூறினார்.

தன் செய்த செய்கையை உணராத மாதவன் “குருவே கடவுள் எப்படி இருப்பார்?” என வேறு கேள்வியை கேட்டான்.

கோபத்தின் உச்சத்திற்கே சென்ற குரு “கடவுள் காட்டு எருமை போல இருப்பார். இப்பொழுது நீ வெளியே செல்” என கோபம் தனியாது கூறினார்.

குருவிடம் ஏற்பட்ட திடீர் மாற்றத்தை குழப்பத்துடன் பார்த்தவாறே வெளியே சென்றான் மாதவன்.

நாட்கள் மாதத்திலும் ... மாதங்கள் வருடத்திலும் கரைந்தது.

ஒரு நாள் அருகில் இருக்கும் புண்ணிய தலத்திற்கு பயணமானார் குரு. மாதவன் இல்லாமல் பயணமா? அவனும் குருவுடன் பயணித்தான்.

கோவிலின் வாயில் அருகே அதிக கூட்டம் இருப்பதை கண்டார்கள். திருவிழா நேரம் என்பதால் இறைவனின் திருவீதி உலாவிற்காக கூட்டம் குழுமி இருந்தது. கோவிலின் வாயிலில் இருவரும் நின்றார்கள்.

இறைவனின் பல்லாக்கை கோவிலுக்குள் இருந்து வெளியே எடுத்து வரும் நிலையில் கோவிலின் வாசலில் நெரிசல் ஏற்பட்டது. இதனால் பல்லாக்கை சரியாக வெளியே கொண்டு வர முடியவில்லை.

நெரிசலை கண்ட குரு, “ஓ இறைவனை நகர் வலம் கொண்டு செல்ல மிகவும் சிரமம் ஏற்படுகிறதே..” என புலம்பினார்.

இதைக்கேட்ட மாதவன், “குருஜீ... மிகப்பெரிய காட்டெருமையை இந்த சின்ன வாயிலில் கொண்டு வர முடியுமா? வாயிலை அகலப்படுத்த வேண்டும். முட்டாள்கள்” என்றான்.

--------------------------------ஓம்----------------------------------------

இறைவன் அருவமானவன்.
இறைவன் குருவின் வாக்கினால் உருவமாகிறார்.

குருவே இறைவனை நமக்கு காட்டும் கண்களாக இருக்கிறார்.
அதில் தெரியும் காட்சிகள் என்றும் தெய்வீகமானது.

குரு கூறும் எவ்வாக்கியமும் மஹாவாக்கியமாகிவிடும்.