Thursday, August 14, 2008

சிவயோகி கண்ணுசாமி

கன்னகோல் கண்ணுசாமியை அனைவருக்கும் தெரியும். அவனின் முக்கிய தொழிலே திருடுவதுதான்.

கண்ணுசாமியின் தொல்லை தாங்க முடியாமல் ஊர் பஞ்சாயத்து அவனுக்கு தண்டனை கொடுத்து தலை மொட்டை அடிக்கப்பட்டு ஊரைவிட்டே ஒதுக்கி வைத்தார்கள்.

இதனால் சரிவர தொழிலை செய்ய முடியாத காரணத்தால் வறுமையில் வாடினான் கண்ணுசாமி. இந்த ஊரில் இருந்தால் வறுமையில் வாடி இறந்து போக நேரிடும் என வேறு ஊருக்கு சென்று தொழில் செய்ய எண்ணினான்.

கால்நடையாக பல நாட்கள் நடந்து ஒரு ஊரை அடைந்தான். பசி அவனை பாடாய் படுத்தியது. சூரியன் சாயும் மாலை நேரத்தில் உணவுக்காக தேடுதலை தொடங்கினான்.

பசி தாங்க முடியாமல் அங்கும் இங்கும் அலைந்தான். அங்கு தோட்டம் ஒன்று இருப்பதை கண்டான். பூசணிக்காய்கள் விளைவிக்கப்பட்டு பெரிய தோட்டமாக காட்சியளித்தது. ஒரு பூசணி பழத்தை உண்டால் தனது பசி அடங்கும் என நினைத்த கண்ணுசாமி மெல்ல பூனை போல தோட்டத்தில் இறங்கினான். நல்ல பழுத்த பூசணிப்பழத்தை பறிக்க முற்படும் பொழுது திடீரென காவல்காரன் யாரோ தோட்டத்தில் நடமாடுகிறார் என பார்த்துவிட்டான்.

காவல்காரனின் கூச்சல் கேட்டு ஆட்கள் ஓடிவர கண்ணுசாமிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.கரும்பு அல்லது வாழை தோட்டம் என்றால் மறைந்துகொள்ளலாம். பூசணி தோட்டத்தில் மறைந்து கொள்ள இடமா இருக்கும்?

உடனடியாக அவனின் தொழில் புத்தி வேலை செய்ய துவங்கியது. தனது உடைகளை அவிழ்த்து தோட்டத்துக்கு வெளியே வீசி எறிந்தான். உடல் முழுவதும் பூசணிக்காய்கள் மேல் இருக்கும் சாம்பலை எடுத்து பூசிக்கொண்டான்.

காவலாளியுடன் ஓடிவந்த மக்கள் மழிக்கப்பட்ட தலையும், மெலிந்த தேகமும் , கோவணமும் மற்றும் திருநீர் பூசப்பட்ட உடலுடன் ஒரு சிவயோகி நின்று இருப்பதாய் கண்டனர்.
அனைவரும் அவரின் கால்களில் விழுந்து வணங்கி ஆசி வேண்டினர்.

இனி கன்னகோல் கண்ணுசாமியை நாம் சிவயோகி என்றே அழைப்போம்.

சிவயோகியை அழைத்துவந்து அந்த தோட்டத்தின் ஒரு மூலையில் குடிசை அமைத்து தங்க வைத்தனர். உணவு வழங்கினார். சிவயோகிக்கு மகிழ்ச்சி தங்கவில்லை. பசியால் பூசணியை சாப்பிட போன சிவயோகிக்கு இப்போலோது விதவிதமான உணவுகள் கிடைக்க துவங்கியது. தான் வாய் திறந்தால் உண்மை தெரிந்துவிடும் என்பதால் மௌனமாக இருந்தார் சிவயோகி. யாரிடமும் பேசுவதில்லை.

சிவயோகி அந்த ஊருக்கு வந்திருப்பது காட்டுத்தீயாக பரவியது. கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து தரிசிக்க துவங்கினார்.

ஆன்மீக தேடல் உள்ள ஒரு வாலிபன் சிவயோகியை காண வந்தான். அவர் முன் அமார்ந்து பல ஆன்மீக கேள்விகளை கேட்டான். ஒன்றுக்கும் சிவயோகி பதில் சொல்லவில்லை. மௌனமாக அவனை பார்த்துகொண்டிருந்தார்.

இளைஞனும் விடுவதாக இல்லை. சிவயோகியின் கால்களை பிடித்து "ஐயனே ஞானம் அடைய என்ன செய்ய வேண்டும் என கூறுங்கள். அதுவரை உங்கள் காலடியை விடமாட்டேன்" என்றான்.

சிவயோகிக்கோ என்ன செய்வது என்றே தெரியவில்லை. வாலிபன் போக விட்டால் இன்று கிடைக்கும் உணவும் காணிக்கைகளும் பாதிக்கப்படுமே என எண்ணினார்.
பலர் கூடி இருக்க இவன் நம்மை சிக்கலில் மாட்டிவிடுவான் என நினைத்து...அவனை மெல்ல கைகளால் தூக்கினார்.

வாய்திறந்தால் தனது ஞானம் தெரிந்துவிடும் என சைகையில் தனது கதையை சொல்ல துவங்கினார். அங்கும் இங்கும் அலைவது போலவும் , பூசணிக்காயை குறிக்க பந்து போல கண்பித்து , உடலில் அதை பூசினதாக சைகை செய்தார்.

அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த வாலிபனுக்கு கண்களில் கண்ணீர் வர ஆரம்பித்தது. "குருவே...அருமையான உபதேசம். அலைந்து திரியாதே , ஜகம் அனைத்தும் உனக்கு உள்ளேயே இருக்கிறது என அருமையான உபதேசத்தை எனக்கு அளித்தீர்கள், எனது ஞானத்தின் சாவி உங்களிடம் கிடைத்தது" என வாலிபன் கூறினான்.

சிவயோகியை முன்று முறை சுற்றி விழுந்து வணங்கி விடைபெற்றான். தனக்குள்ளே இருக்கும் விஷயத்தை தேடி தேடி ஒரு நாள் ஞானம் அடைந்தான் வாலிபன்.

----------------------ஓம்-----------------------------------------
இந்த கதையில் திருடன் குருவாக இருப்பதாய் கண்டு இது சாத்தியமா என எண்ணலாம். வால்மிகி கூட ஒரு கொள்ளைக்கரனாக இருந்தார், பிறகு ராம நாமத்தால் உலகின் அனைவரின் மனதையும் கொள்ளையடித்தார் அல்லவா?

திருமூலர் தனது மந்திரத்தில் "கள்ள புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே" என்கிறார்.
நமது ஆன்மாவிற்கு தெரியாமல் கள்ளத்தனமாக செயல்படும் புலன்களை நல்வழிப்படுத்தினால் ஆன்மீக உயர்வு பெறலாம்.

குரு எப்படிப்பட்டவர் , குரு ஞானம் அடைந்தவரா என்பது முக்கியமில்லை,
நாம் அவர் மூலம் ஞானம் பெறுவோமா என்பது தான் முக்கியம்.

Tuesday, August 12, 2008

குரு நமச்சிவாயர்

நினைத்தாலே முக்தியளிக்கும் திருவண்ணாமலை....

அண்ணாமலையானின் மடியில் இருப்பதை போல அமைத்திருந்தது அந்த குகை.


பெரிய கோவிலின் கோபுரங்கள் பார்க்கும் வண்ணம் இருந்த குகையின் வெளியே அமர்ந்திருந்தார் குகை நமச்சிவாயர்.

அடிக்கடி நமச்சிவாய நாமத்தை சொல்வதாலும் , குகையில் வசிப்பதாலும் அம்முனிவரை அனைவரும் குகை நமச்சிவாயர் என அழைத்தனர்.

அவருக்கு அருகில் அவரது சிஷ்யன் தனது குருவிக்கு உதவ அருகில் நின்று இருந்தான்.

"குளுக்"
ஆழ்ந்த அமைதி சூழ்ந்திருந்த வேலையில் சிஷ்யன் சிரிக்கும் ஒலி கேட்டு நிமிர்ந்தார் குகை நமச்சிவாயர்.

"என்னப்பா அவ்வளவு சிரிப்பு? அந்த வேடிக்கையை எனக்கும் சொல்ல கூடாதா?" என்றார் குகை நமச்சிவாயர்.

"குருவே எனது இடையூருக்கு மன்னிக்கவும். திருவாரூர் தேர் வரும் பொழுது அதன் முன் ஆடிய பெண் ஒருவள் கால் தடுக்கி விழுந்தால் , அனைவரும் சிரித்தனர் அதனால் நானும் சிரித்தேன் " என்றார்.

குகை நமச்சிவயருக்கோ ஒரே ஆச்சரியம். திருவண்ணாமலை வசித்துக்கொண்டு எப்படி நம் சிஷ்யன் திருவாரூரை ரசிக்கிறான் என நினைத்து கொண்டார்.

சில நாட்கள் சென்றன...

குகை நமச்சிவாயர் அமர்ந்து சிஷ்யனுடன் ஞான கருத்துக்களை விளக்கி கொண்டிருந்தார்.

திடீரென பதற்றமாக சிஷ்யான் தோளில் கிடக்கும் துண்டை எடுத்து உதறி மீண்டும் அணிந்து கொண்டார்.

சிஷ்யனின் பதட்டத்தை கண்ட குரு அதன் காரணத்தை கேட்டார்.

"சிதம்பரத்தில் நடராஜர் சந்நிதியில் தீபாராதனை காட்டும் பொழுது அங்கு இருந்த திரை சீலை தீ பற்றி கொண்டது . அதை அணைத்தேன், அதனால் உங்கள் பேச்சை நடுவில் தடுத்ததற்கு என்னை மன்னியுங்கள்" என்றார்.

சிஷ்யனின் செயல் வினோதமாக இருப்பதால் அவனது குரு பக்தி உண்மையா எனவும் சோதிக்க எண்ணினார்.

சிஷ்யன் அருகில் இருக்கும் பொழுது திடீரென வாந்தி எடுத்தார். சிஷ்யனை அழைத்து "இதை யார் காலிலும் படாத இடத்தில் போட்டுவிட்டு வா" என பணிந்தார்.

சிறிதி நேரத்திக்கு பிறகும் சிஷ்யன் எங்கும் செல்லாமல் அங்கு இருப்பதை கண்டு நான் இட்ட பணியை செய்தாயா? என கேட்டார்.

"ஐயனே அதை அப்பொழுதே செய்துவிட்டேன்" என்றான் சிஷ்யன்.

"எங்கு அதை போட்டாய்?" என்றார் குகை நமச்சிவாயர்
.
"குருவே யார் காலும் படாத இடம் எனது வயிறு மட்டுமே. எனவே நீங்கள் கொடுத்ததை விழுங்கி விட்டேன்" என்றான் குரு பக்தியில் சிறந்த சிஷ்யன்.

தன்னை விட பக்தியிலும் ஞானத்திலும் சிறந்து விளங்கும் சிஷ்யனை பெருமிதத்துடன் பார்த்தார் குரு.

சிஷ்யனனே உனது பக்தியால் என்னையே மிஞ்சிவிட்டாய் , இனிமேல் உன்னை அனைவரும் குரு நமச்சிவாயர் என அழைப்பார்கள் என ஆசிர்வதித்தார் குகை நமச்சிவாயர்

----------------- ஓம்-------------------
கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக
உள்ள பொருளுடன் ஆவியுடன்ஈக
எள்ளத்தனையும் இடைவேடா தேநின்று
தெள்ளி யறியச் சிவபதந் தானே
திருமந்திரம் - 1692

குருவிடம் காட்டும் பணிவு நம்மை உயர் நிலைக்கு கொண்டுசெல்லும்.

குருவின் அருள் இருக்குமானால் நமது ஆன்ம சாதனையில் பல முன்னேற்றம் இருக்கும். அதை தவிர வேறு என்ன வேண்டும் இப்பிறவியில்?

Saturday, August 9, 2008

ஓர் துறவி இப்படி செய்யலாமா?

குருவும் சிஷ்யனும் பயணத்தில் இருந்தார்கள். சன்யாச தர்மத்தை கடைப்பிடிப்பதால் பிச்சை எடுக்க ஒரு பாத்திரம் மற்றும் ஒரு மாற்று உடையுடன் பயணத்தில் இருந்தார்கள்.

வழியில் ஒரு ஓடை குறுகிட்டது. அதை கடக்க இருந்த பாலம் பழுது பட்டிருந்தது. இருவரும் அதை பற்றி யோசித்து கொண்டிருக்கும் பொழுது அழகிய மங்கை ஒருவள் அங்கு வந்தாள்.
பாலம் பழுது பட்டிருப்பதை கண்டு வருத்தம் கொண்டாள். துறவி இருவரையும் பார்த்து, " தெய்வீகமானவர்களே அவசரமாக அக்கரைக்கு செல்ல வேண்டும். எனக்கு உதவி செய்ய முடியுமா?" என கேட்டாள்.

உடனே குரு சிறிதும் தாமதிக்காமல் அவளை தோள்களில் சுமந்து கொண்டு ஓடையில் இறங்கி மறுகரையில் சேர்த்தார். இச்செயல் சிஷ்யனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இருவரும் பயணத்தை தொடர்ந்தனர். சிறிது நேரத்துக்கு பின் குரு சிஷ்யனை கண்டார். பெருத்த யோசனையுடன் வரும் சிஷ்யனிடம் கேட்டார் "மகனே ஏன் இந்த யோசனை? வாழ்க்கையிலும் சரி வழிப்பயணத்திலும் சரி மனதில் கணம் இருந்தால்
பயணம் ருசிக்காது. சொல் என்ன உனக்கு பிரச்சனை?"

"எனது குருவே நாம் துறவி அல்லவா? அந்த பெண்ணை நீங்கள் தோளில் சுமந்து எப்படி சரியான செயலாகும் ?" என்றான் சிஷ்யன்.

சிஷ்யனை ஆழமாக பார்த்த குரு தொடர்ந்தார். ...
"உனது கேள்வியால் மகிழ்தேன். எனது சிஷ்யா , அப்பெண்ணை நான் சில நிமிடம் தான் தோளில் சுமந்தேன் ஆனால் நீயோ அவளை நெடுந்தொலைவு மனதில் சுமந்து கொண்டு வருகிறாயே இது மட்டும் முறையா? சன்யாசம் என்பது பற்றற்று மனதில் தூய்மையை சிறிதும் இழக்காமல் இருப்பதே ஆகும்.."

மனதில் இருந்த மங்கையை இறக்கி வைத்து பூரணத்துவம் அடைந்தான் சிஷ்யன்.

----------------------ஓம்------------------

இந்த கதையை படித்ததும் இது எல்லாம் நடைமுறையில் நடக்குமா? அல்லது சுவாரசியத்துக்காக புனயப்பட்டதா என சந்தேகம் உதிக்கலாம்.

பழங்கலம் முதல் இந்த கதை வழக்கத்தில் இருந்தாலும், இது குரு-சிஷ்யனுக்கு இடையே நடந்த உண்மை சம்பவமாகும்.

உண்மை சம்பவத்தை விவரிக்கிறேன் .....

ரிஷிகேஷ் எனும் ஆன்மீக பூமி.
மாலை நேரத்தில் கங்கை நதி ஓரமாக தெய்வீகமாக கட்சி அளித்தது ஆனந்த குடீரம்...

சத்சங்கம் முடிந்ததும் சன்யாசிகள் சூழ நடை பயிற்சியில் ஈடுபட்டார் குருநாதர்.
அந்த குழுவில் ஒரு தாயும் மகளும் தவிர அனைவரும் ஆண் சன்யாசிகள்.

அனைவரும் ஆசிரமத்தை விட்டு சிறிது வனப்பகுதில் நடந்து கொண்டிருக்கும் பொழுது அந்த விபரீதம் நடந்தது. தாயுடன் வந்த அந்த இளவயது மகள் திடீரென "ஐயோ" என கதறி கீழே விழுந்தாள். அவளை தேள் ஒன்று தீண்டிருந்தது..

தனது மகளுக்கு நேர்ந்த துன்பத்தை கண்ட தாயும் கதறி அழ துவங்கினார். சன்யசிகளோ என செய்வது என திகைத்து நின்றனர்.

குருநாதர் அங்கு நடப்பதையும் தனது சிஷ்யர்களின் செயல்பாட்டையும் கவனித்து கொண்டிருந்தார்.

சில சன்யாசிகள் ஆசிரமம் சென்று கட்டை மற்றும் கயிறுகளை கொண்டுவந்து அதில் அப்பெண்ணை கொண்டு செல்லலாம் என திட்டமிட்டனர். மேலும் சிலர் வேறு வழிமுறைகளை ஆலோசித்தனர்.

இதனிடையே ஒரு சன்யாசி விரைந்து வந்து அந்த கன்னி பெண்ணை தூக்கி தோளில் போட்டுகொண்டு காட்டுப்பாதையில் விரைவாக பயணித்து ஆசிரம மருத்துவமனையில் சேர்த்தார்.

சில காலத்துக்கு ஆசிரமம் முழுவதும் இதே பேச்சாக இருந்தது. கன்னி பெண்ணை எப்படி சன்யாசி தொட்டு தூக்கலாம் என பேசினார்கள். ஆனால் இதை குருவும், அப் பெண்ணை தூக்கிய சிஷ்யரும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.

சில மாதங்கள் சென்றன. ..

ஆசிரமத்தில் வளர்ந்து வந்த ஒரு நாய் நோய்வாய்ப்பட்டது. உடல் முழுவதும் சொறியும், சீளுமாக காட்சியளித்தது. நோய்வாய்ப்பட்ட நாயை கால் நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல யாரும் முன்வரவில்லை. உடனே அந்த சன்யாசி ஒரு துணியால் அந்த நாயை எடுத்து வாகனத்தில் வைத்து மருத்துவ மனைக்கு செல்ல உதவினார்.

சத்சங்கத்தில் குரு கூறினார். .."எனது சிஷ்யனுக்கு கன்னி பெண்ணும் , நோயுற்ற நாயும் ஒன்றுதான். சன்யாசம் ஆன்மாவில் இருக்கவேண்டும், மனதில் அல்ல."

இந்த உண்மை சம்பவத்தில் வரும் குரு : சுவாமி சிவானந்தர் - www.dlshq.org
சிஷ்யன் : சுவாமி சச்சிதானந்தா - www.swamisatchidananda.org

ஆதாரம் : வாழ்வும் வாக்கும் -சுவாமி சச்சிதானந்தா