Wednesday, December 2, 2009

மந்திர ஜபம்

காசி மாநகரம் தனது இயக்கத்தை நிறுத்த துவங்கிய அந்தி சாயும் நேரம்...

கங்கை நதியின் ஓட்டத்தை பார்த்தவாறு தனது ஆசனத்தை விரித்து அமர்ந்தான் அச்சுதன்.


கேதார் காட் என்று அழைக்கப்படும் கேதாரிநாத் சிவனின் கோவில் இருக்கும் படித்துறை அது. காவியும் வெள்ளை நிறமும் மாறி மாறி வண்ணம் பூசபட்ட படிகள் ஒரு வயதானவரின் வெற்றிலை வாயை ஞாபகப்படுத்தியது.

தனது மேலாடையை ஒழுங்கு படுத்தியவாறே சுற்றிலும் நோட்டம் விட்டான். கண்களுக்கு தெரிந்தவரை யாரும் இல்லை. ஒரு ஏகாந்தமான மாலை நேரத்தை எதிர்பாராமல் கிடைத்த மகிழ்ச்சியுடன் ஜபம் செய்ய ஆயுத்தமானான் அச்சுதன்.

தனது மேல் அங்கியின் உள்புறம் ஜப மாலையை வைத்து கண்களை மூடி ஜபம் செய்யத் துவங்கினான். கங்கையின் ஓட்டத்தால் ஏற்பட்ட சலசலப்பை தவிர வேறு எதுவும் அவனுக்கு கேட்கவில்லை.

சில மணித்துளிகள் கடந்தது....

“யே...மேரா மாலிக்........தூ.யீ மேரா சேவக்கு...” என கர்ண கொடூரமான குரல்வளத்தில்

ஒருவர் கத்துவதை கண்டு கண்விழித்தான் அச்சுதன்.

தன்னைவிட முற்றிலும் எதிர்தன்மையில் ஒருவர் அங்கே படியில் அமர்ந்து பெருங்குரலில் கத்திக்கொண்டிருந்தார்.

குளித்த தேகம், உடலில் ஆங்காங்கே வீபூதி பட்டை, தூய வெண்மையான ஆடை, உட்கார ஆசனம், ஜபமாலை என்ற நிலையில் அச்சுதன்.

தண்ணீரே பார்க்காத தேகம், உடல் முழுவதும் அழுக்கு, சில மணி மாலைகள் கழுத்தில், தலை முழுவதும் சடையுடன் எங்கோ பார்த்து பெருங்குரலில் கத்தும் அந்த நபர். அச்சுதனுக்கு ஆத்திரத்தை அடக்க முடியவில்லை. அவரை கோபமாக முறைத்தான்.

அவரோ இவனை மதிப்பதாக தெரியவில்லை. எதேதோ உளரிக்கொண்டே கைகளை மேலும் கீழும் அசைத்து காற்றில் ஏதோ வரைத்து கொண்டிருந்தார்.

இத்தனை வருடங்களாக தினமும் இங்கே மந்திரம் ஜபம் செய்கிறோம் ஒருவரும் இப்படி இம்சை செய்தது இல்லை. அவரை தவிர்த்துவிட்டு கண்களை மூடினால் அவரின் குரல் அதிக சப்தத்துடன் ஏற்றம் அடைவதை உணர்ந்தான்.

பைத்தியக்காரன் என்று பேசாமல் ஜபம் செய்யலாம் என்றால்,
வேண்டும் என்றே அவன்
குரல் எழுப்புவதை போல அச்சுதனன் உணர்ந்தான்.

தனது ஜபமாலைகளை கீழே வைத்துவிட்டு அவரின் அருகே சென்றான்.

“ஐயா... தயவு செய்து அமைதியாக இருக்கிறீர்களா... என்னால் ஜபம் செய்ய முடியவில்லை.”

அதுவரை எங்கோ பார்த்து உளரிக் கொண்டிருந்தவர் அச்சுதனை நோக்கி தலையை சாய்வாக திருப்பி “ ஜபமா.....அப்படினா?”

“மந்திரத்தை தொடர்ந்து கூறுவது”

“மந்திரமா? அப்படினா?”

அச்சுதனுக்கு அவர் விளையாடுவதாகவே பட்டது இருந்தாலும் ஆத்திரத்தை அடக்கியவாறு பதில் கூறினான்.

“இறைவனின் சக்தி கொண்ட வார்த்தை மந்திரம்”

“ஓஹோ...” என்றவாறே எழுந்து திரும்பி படித்துறையின் படிக்கட்டுகளில் ஏறத்துவங்கினார் அவர்...

அவர் நடந்து செல்லுவதை நிம்மதிப்பெருமூச்சுடன் பார்த்தவாறு நின்றேன் அச்சுதன்.

இரண்டு படிகள் ஏறியவுடன் திரும்பி....

“மந்திரத்தில் மட்டும்தான் இறைவனின் சக்தி உண்டா? நீ பேசும் ஒவ்வொரு வார்த்தையும் இறைவனின் சக்தியால்தானே? உன் சக்தி இதில் எதுவும் இல்லையே?” என்றார் அவர்.

கங்கை ஒரு ஷணம் நின்று பின் சலசலப்புடன் ஓடுவதாக பட்டது அச்சுதனுக்கு.

-------------------------------ஓம்--------------------------------------------

மந்திர ஜபம் என்பது இறைவனுக்கு அருகில் நம்மை அழைத்துச் செல்லும் ஒரு வாகனம். ஆனால் நான் மந்திர ஜபம் செய்கிறேன் பிறர் செய்வதில்லை என்ற எண்ணமும், மந்திரம் மட்டுமே சக்தி வாய்ந்தது என்ற எண்ணமும் ஆணவத்தை தூண்டிவிடும். அப்புறம் எங்கே இறைவனை தரிசிப்பது?

முதலில் நாம் உச்சரிக்கும் அனைத்து வார்த்தையிலும் சக்தியை உணர்ந்தால்தான் மந்திரத்தை உணர முடியும். நம் ஒவ்வொரு வார்த்தையில் சக்தியை உணர நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

விழிப்புணர்வற்ற நிலையில் மந்திரமும் வெறும் வார்த்தைதான். விழிப்புற்றவனுக்கு ஒவ்வொரு வார்த்தையும் மந்திரம் தான்.

Sunday, November 22, 2009

எலுமிச்சை புல்

திருவண்ணாமலை மலைப்பாதையின் மேல் குருவும் சிஷ்யனும் நடந்து கொண்டிருந்தார்கள். அங்கே இருக்கும் விருப்பாச்சி குகையில் தியானம் செய்ய இருவரும் நடக்க துவங்கி அரை மணி நேரம் கடந்துவிட்டது.

குரு மெளனமாக பின்னால் வர சிஷ்யன் வேகமாக நடந்து கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் குருவின் காட்சியில் மறைந்து வெகு தொலைவுக்கு சென்றுவிட்டான்.

குரு மெல்ல நடந்து கொண்டிருந்தார்.

சில நிமிடங்கள் கரைந்தன... தூரத்தில் சோர்வுடன் சிஷ்யன் அமர்ந்திருந்தான்.குரு கையில் ஒர் பச்சிலையுடன் நடந்து வந்தார். சிஷ்யனிடம் கொடுத்து முகர்ந்து பார்க்க சொன்னார்.

அவர் அந்த பச்சிலையை முகர்ந்ததும் அதில் எலுமிச்சை மணம் அடித்தது. சிஷ்யனின் மனதுக்கும் உடலுக்கும் ஒரு உற்சாகம் கிடைத்தது.

“குருவே இது என்ன இலை?”

“இதன் பெயர் எலும்மிச்சை புல். சாதாரண புல் போல தெரிந்தாலும் எலுமிச்சை மணம் கொண்டது.”

“குருவே உங்களிடம் ஒரு கேள்வி. தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது.”

புன்னகைத்தவாறே...“ம்..” என்றார் குரு.

”ஒருவனுக்கு ஆன்மீக உயர்வு அடைய குரு அவசியம் தானா?”

”விழிப்புணர்வு ஒருவனுக்கு கிடைக்கும் வரை அவனுக்கு குரு அவசியம்”

“விழிப்புணர்வு என்றால்...?”

“நான் கொடுத்த எலுமிச்சை புல் முகர்ந்தாய் அல்லவா? அதற்கு முன் இங்கே இருக்கும் எலுமிச்சை புல் பற்றி உனக்கு தெரியுமா?”

“தெரியாது”

“நான் வரும் வரை இங்கே அமர்ந்திருதாயே.. பார் உன் கால்களுக்கு அருகிலேயெ அந்த புல் புதர் போல வளர்ந்திருக்கிறது. உன் கால்களுக்கு கீழே அந்த பொருள் இருப்பது தெரியாமல், இன்னொருவர் உனக்கு தரும் வரை நீ அமர்ந்திருக்கிறாய். விழிப்புணர்வு கொண்டவனாக இருந்தால் உனக்கே தெரிந்திருக்கும்.”

“அப்படியானால் விழிப்புணர்வு வரும் வரை குரு தேவை அல்லவா?”

“விழிப்புணர்வு வரும் வரை குரு தேவை. விழிப்புணர்வு வந்த பின் குரு எல்லா இடத்திலும் இருப்பதை நீ உணர்வாய்”

”அப்படியானால் அனைவருக்கும் குரு தேவையா?”

“ஆம். அதனால் தான் ஆண்டாண்டு காலமாக இம்மலையில் எலும்மிச்சை புல் வளருகிறது. உன்னையும் என்னையும் போல பலர் இங்கே வந்து இதே கேள்வியையும் பதிலையும் விவரிக்கிறார்கள்.”

---------------------------ஓம்-------------------------------
குரு சிஷ்ய உறவு என்பது மனித வாழ்க்கைக்கு அப்பாற்பட்டது. எத்தனையோ குரு சிஷ்யர்கள் தங்களின் இறப்புக்கு பிறகும் அடுத்த பிறவியிலும் உறவை தொடர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

அதனால் தான் குரு சிஷ்யனுக்கு உபதேசம் செய்வதை அனேகமாக ஆலமரத்தின் அடியில் அமர்ந்து விவரிப்பதாக விளக்குகிறார்கள். ஆலமரம் போல விழுதுகளுடன் கிளைப்பது குரு சிஷ்ய பாரம்பரியம்.

இக்கதையில் எலுமிச்சை புல் என்பது ஞானத்தின் வடிவமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. எலுமிச்சை புல் என்பதற்கு பதில் பிரம்ம ஞானம் என மாற்றி படித்துப்பார்த்தால் கதையின் முழுமை புரியும்.

சீனத்தில் அதிகமாக விளையும் பொருளான இது ஜென் முறையின் வடிவமாக கருதப்படுகிறது. ஓஷோ தனது தாவோ பற்றிய உரையில் கூறும் பிரசித்திபெற்ற வரிகள் “புல் தானே வளர்கிறது”.

Tuesday, November 17, 2009

ஸ்டார்டிங் ட்ரபிள்

“டிங்...டிங்...டிங்” காலை ஆசிரம மணியின் ஓசை கேட்டது.

நான்கு மணி ஆகிவிட்டது என்ற எண்ணத்துடன் எழுந்தான் விஷ்ணு. விஷ்ணு ஆசிரமத்தின் அனைத்து வேலைகளையும் பார்ப்பவர்களில் ஒருவன்.

காலை ஐந்து மணிக்கு யோக பயிற்சி முடித்ததும், ப்ரார்த்தனை மற்றும் காலை உணவுடன் துவங்கும் அவனது பணி இரவு ஒன்பது வரை நீடிக்கும்.

புத்தகங்கள் பார்சல் அனுப்புவது, தோட்டத்தை சுத்தம் செய்வது மற்றும் குரு வெளியே செல்லுவதற்கு வாகன ஓட்டியாக மாறுவது என ஒரு நாளில் பல அவதாரம் எடுப்பவன் விஷ்ணு.

அன்று காலை வழக்கம் போல யோக பயிற்சிக்காக ஆசிரம யோக சாலைக்கு சென்று பயிற்சி செய்ய துவங்கினான்.

இன்று என்னமோ அவனுக்கு யோக பயிற்சியை சரிவர செய்ய முடியவில்லை.முன்னால் அமர்ந்திருந்த குருவின் மேல் அவனுக்கு கவனம் முழுவதும் சென்றது. விஷ்ணு ஆசிரமத்திற்கு வந்த நாள் முதல் பார்த்திருக்கிறான் குரு யோக பயிற்சியை கற்றுக்கொடுக்கிறாரே தவிர அவர் செய்வதில்லை.

இவனும் சக ஆசிரம வாசிகளும் ப்ராணயாமமும், ஆசனமும் செய்யும் பொழுது அவர் கண்களை மூடி அமர்ந்திருப்பார். அல்லது ஜன்னலுக்கு வெளியே எங்கோ பார்த்துக்கொண்டிருப்பார்.

பிறருக்கு பயிற்சி அளிக்கும் நேரத்தில் குரு செய்து இருப்பதை பார்த்திருக்கிறேன். எங்களை தினமும் செய்ய கூறும் குரு தான் செய்வதில்லையே என்ற எண்ணம் அதிகமாக வந்தது. தவறு என்றாலும் எண்ணத்தை தவிர்க்க முடியவில்லை. அவனது யோக பயிற்சியில் கூட அந்த தடுமாற்றம் தெரிந்தது.

ஆனாலும் யாருக்கும் தெரியாத வண்ணம் சரிசெய்து யோக பயிற்சி முடித்துவிட்டு அறையைவிட்டு வெளியேறினேன்.

“விஷ்ணு...”.. குருவின் குரல் கேட்டது.

அவரை நோக்கி புன்னகையுடன் கைக்கூப்பி நின்றேன்.

“ கொஞ்சம் வெளியே போகனும், ஜீப் ரெடி பண்ணுப்பா” என்றார் குரு.

என்றும் இல்லாத அதிசயமாக இன்று காலையிலேயே வெளியே செல்ல அழைக்கிறாரே என்ற தயக்கத்துடன் ஜீப்பை தயார் செய்தேன். குருஜி ஏறியதும் ஜீப்பை ஸ்டார்ட் செய்து ஆசிரமத்திலிருந்து வெளியே கொண்டு வந்தேன். ஆசிரமம் இருப்பது மலைபகுதி என்பதால் ஜீப் பயணிக்கும் பொழுது குளிர்ந்த காற்று ரம்மியமாக இருந்தது.

சில தூரம் பயணித்ததும் குருஜி என்னை பார்த்து திரும்பினார்..

பிறகு கேட்டார்.. “ சாவி போட்டுட்டியா விஷ்ணு?” என்றார்.

வண்டி ஓடிக்கொண்டிருக்கும் பொழுது இது என்ன இப்படி கேட்கிறார் என்ற குழப்பம் வந்தாலும் வேறு வழியில்லாமல் “போட்டாச்சு குருஜீ” என்றேன்.

ஜீப்பினுள் மெளனம் நிலவியது.

வண்டி சில கிலோ மீட்டர் சென்றது
மீண்டும் குருஜீ என்னை பார்த்து திரும்பினார்.

பின்பு கேட்டார்.. “ஜீப்புக்கு சாவி போட்டுட்டியா விஷ்ணு?”

இது என்ன முட்டாள் தனமான கேள்வி என தோன்றினாலும் வேறுவழியில்லாமல்.. “போட்டாச்சு குருஜீ” என்றேன்.

மேலும் சில கிலோமீட்டர் சென்றது. மீண்டும் குருஜீ என்னை பார்த்து...

“விஷ்ணு சாவி... ” என துவங்கும் முன் இடைமறித்தேன். “குருஜீ சாவி போடாமல் எப்படி வண்டி ஸ்டார்ட் ஆகும்? நாம் இவ்வளவு கிலோமீட்டர் வர முடியுமா? ” என்றேன்.

வேறு எங்கோ பார்வையை நிலைபடுத்திய படியே குருஜீ கூறினார்.

“ உள் இருக்கும் தெய்வீகத்தை தூண்டுவதற்காகத்தான் எல்லோரும் யோகப்பயிற்சி செய்கிறார்கள். இது வண்டிக்கு சாவி போடுவது போல. தூண்டிவிடப்பட்டதும் தெய்வீகம் ஆற்றலுடன் செயல் படத்துவங்கும். அப்பொழுது மீண்டும் மீண்டும் தூண்டிவிட தேவையில்லை. வண்டி ஓடும் பொழுது நீ மீண்டும் மீண்டும் சாவி போட்டு துவக்கவில்லை இல்லையா?”

“. க்ரிர்....ச்...” ஜீப்பை பிரேக் போட்டு நிறுத்தினேன்.

---------------------ஓம்-----------------------

நம்மை குருவின் நிலையுடன் எப்பொழுதும் ஒப்பிட்டுக்கொள்ளக்கூடாது.

நாம் குருவை மிஞ்சிய சிஷ்யர்களாக இருந்தாலும் குருவின் செயலை நாம் செய்ய வேண்டும் என்பதில்லை.

குரு நமக்கு எதை செய்ய சொல்கிறாரோ அதை செய்வதே பெரும் ஆன்மீக செயலாக கருதவேண்டும்.

குருவுக்கு தெரியும் நாம் என்ன செய்ய வேண்டும் என்ற அர்ப்பணிப்பு உணர்வு இருந்தால் அவருடன் நம்மை ஒப்பு நோக்க தோன்றாது.

கூட்டுப்புழு தன்னை பட்டாம்பூச்சி ஆக்க முயல வேண்டும். பட்டாம்பூச்சி எதுவும் ஆக முயல வேண்டாம். கூட்டுப்புழு எதுவும் செய்ய வில்லை என்றால் என்றும் பட்டாம்பூச்சி ஆக முடியாது.

நீங்கள் நீங்களாக இருக்க முயன்றால் நீங்களும் குருவாக மாற முடியும்.
மாறாக நீங்கள் குருவாக முயன்றால் நீங்கள் நீங்களாக கூட மாற முடியாது.

Monday, July 27, 2009

மீண்டும் ஒரு ரசவாதம்

ராஜன் நீங்கள் நினைப்பதை போல பணம் ...பணம் ...என அலைபவன் கிடையாது. ஏதோ சின்னவயதில் அவன் பணம் இல்லாமல் கஷ்டப்பட்டான் என்பதை தவிர அவனுக்கும் பண கஷ்டத்திற்கும் சம்பந்தம் இல்லை. போதை பழக்கம் மற்று சில கெட்ட விஷயங்களுக்கு அவனுக்கு அதிகமாகவே பணம் தேவைப்பட்டது. அவன் நண்பர்களுடன் உரையாடும் பொழுது ரசவாதம் செய்வதை பற்றி பேச்சுவந்தது. அனைத்து உலோகத்தையும் தங்கமாக மாற்றம் செய்யும் ரசவாதம் என்ற விஷயம் அவனுக்குள் புதிய ரத்தத்தை பாய்ச்சியது.

ரசவாதம் பற்றிய செய்திகளை சேகரிக்க துங்கினான். உணவு உறக்கம் அவனுக்கு இரண்டாம்பட்சம் ஆகியது. ரசவாதம் செய்வது அவனின் நோக்கம் அல்ல. ரசவாதம் செய்தால் கிடைக்கும் தங்கத்தை கொண்டு ஏழை எளியவர்களை காப்பாற்றலாம் அல்லவா?

நம்புங்கள் அது ஒன்று தான் அவன் நோக்கம். வேறு ஒன்றும் இல்லை.

இவ்வாறு ராஜன் ரசவாதத்திற்கு அலையும்பொழுது தான் ஸ்வாமி திரிலோகானந்தரை பற்றி கேள்விப்பட்டான். ஸ்வாமியின் ஆசிரமத்தில் ரசவாதம் நடப்பதாகவும், ஸ்வாமி ரசவாதம் தெரிந்தவர் என்றும் செய்தியை உறுதி செய்து கொண்டு அவரை சந்திக்க சென்றான்.

திரிலோகானந்தரின் ஆசரமம் முக்கிலி மலை உச்சியில் இருந்தது. முக்கிலி மலை சாதாரண மலை அல்ல. அதன் உச்சிக்கு செல்லுவதற்கு அதிக உடல் பலம் வேண்டும்.

வருடத்திற்கு ஒருமுறைமட்டுமே மலையிலிருந்து கீழே வந்து மக்களுக்கு தரிசனம் தருவார் ஸ்வாமி. அவரை அந்த நாளில் சந்தித்தால் நன்றாக இருக்கும் என நினைத்து சென்றான் ராஜன்.



அங்கே அவன் கண்ட காட்சி ஆச்சரியத்தை உண்டு செய்தது. பல்லாயிர கணக்கான மக்கள் அங்கு தரிசனத்திற்காக காத்திருந்தார்கள்.

இந்த ஜன கூட்டத்தில் ரசவாதம் பற்றி பேசமுடியுமா என ராஜனுக்கு சந்தேகம் வந்தது. ஸ்வாமி திரிலோகானந்தாவின் ஆசிரமத்தில் ஊடுருவி ரசவாதத்தை தெரிந்து கொள்ளலாம் என முடிவு செய்தான் ராஜன்.

ஸ்வாமி திரிலோகானந்தாவின் பாதங்களில் விழுந்து வணங்கினான்.

“ஐயா என்னை உங்கள் சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளுங்கள்”.

புன்னகைத்த திரிலோகானந்தர் அவனை மெல்ல எழுப்பி கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளுகிறேன். உனக்காகத்தான் காத்திருந்தேன்” என கூறி அவனை தன்னுடன் இருக்க அனுமதித்தார்.

தனது திட்டம் இவ்வளவு சுலபமாக செயல்படும் என ராஜன் நினைக்கவில்லை. தனது பழக்கங்களை விட்டுவிட்டு சிஷ்யனாக நடிக்கதுவங்கினான்.

முக்கிலி மலையில் ராஜனின் ஆசிரம வாசம் துவங்கியது. தினமும் நீர் மற்றும் உணவுகளை அடிவாரம் சென்று கொண்டுவருவது, ஆசிரம் தகவல்களை வெளியிடுவது என பரபரப்பான செயல்பட்டான் ராஜன். அவன் தனது வாழ்க்கையில் இப்படிபட்ட உடல் உழைப்பு கொண்ட வேலைகளை செய்ததில்லை.

சில மாதங்களிலேயே திரிலோகானந்தாவின் நெருக்கத்தொண்டன் ஆனான் ராஜன். அவனுக்கு ஆன்மீக தீட்சை வழங்கி தன்னருகில் இருக்குமாறு பணிந்தார் குரு.

ராஜன் ஸ்வாமி விஸ்வானந்தரானார்.

காலங்கள் கடந்தது ஸ்வாமி விஸ்வானந்தரின் ரசவாத ஆர்வம் மட்டும் குறையவில்லை. நொடிப்பொழுதும் குருவை விட்டு விலகாமல் இருந்தாலும் அவரின் செய்கையில் இருந்து ரசவாத குறிப்புகளை கண்டறியமுடியவில்லை.

காலங்கள் கடந்தது....

ஸ்வாமி திரிலோகானந்தர் தனது இறுதி காலத்தை எட்டினார்..

அவரின் படுக்கைக்கு அருகில் அமர்ந்திருந்தார் ஸ்வாமி விஸ்வானந்தர்.

தான் இங்கே வந்து பலவருடம் போராடி ரசவாதத்தை அறியமுடியவில்லை என்ற ஏக்கம் ஒருபுறம், இப்பொழுது கேட்டுவிட வேண்டும் இதைவிட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது என்ற எண்ணமும் ஸ்வாமி விஸ்வானந்தரிடம் குடி கொண்டிருந்தது.

யாரும் அருகில் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு மெல்ல குருவின் பாதங்களை பற்றி நமஸ்கரித்தவாரே கேட்டான்...

“குருவே உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும்”

“கேள் விஸ்வா ”

“உங்களிடம் நான் வந்த நோக்கம் தெரியுமா உங்களுக்கு”

“தெரியும். ரசவாதம் தானே”

ஸ்வாமி விஸ்வானந்தருக்கு அதிர்ச்சியாக இருந்தது. தெரிந்தா இவ்வளவு நாள் நம்மை அருகில் வைத்திருந்தார். தன்னை சுதரித்துக் கொண்டு..

“ஆம் குருவே. நீங்கள் எனக்கு அதை கற்றுக்கொடுப்பீர்களா”

“எனது அருமை விஸ்வா, ரசவாதம் செய்வது எளிது... பார் ராஜனாக இருந்த இரும்பு துண்டை விஸ்வானந்தா எனும் தங்கமாக மாற்றி இருக்கிறேனே? இது தானப்பா ரசவாதம்...!”

அவனை தீர்க்கமாக பார்த்து புன்னகைத்தவாறே அவரின் ப்ராணன் அவருள் அடங்கியது.
.
அவர் உடலிலிருந்து ஒளி வெளிப்பட்டு விஸ்வானந்தரின் உள்ளே சென்றது.

ஸ்வாமி விஸ்வானந்தாவுக்கு புரியதுவங்கியது.. இரும்பு துண்டுகளை எதிர்நோக்கி காத்திருந்தார்...

---------------------------ஓம்--------------------------------

குருவிடம் எதிர்பார்ப்புடன் செய்பவர்களின் சுயநலத்தை குரு பார்ப்பதில்லை. அந்த சுயநலத்தை எப்படி ஆன்மீக ஆற்றலாக மாற்றலாம் என்றே பார்க்கிறார்.

பொருள் தேடி இருளில் இருக்கும் உலகிற்கு எத்தனையோ குருமார்கள் ஒளி கொடுத்து இறை பெருவெளியில் நினைத்திருக்க செய்திருக்கிறார்கள்.

நீங்கள் நீங்களாக இருங்கள் குரு உங்களில் ரசவாதத்தை உண்டாக்குவார்..
முதல் ரசவாதத்தை படிக்க இங்கே சுட்டவும்.

Sunday, June 28, 2009

நீயா நானா?

“குருவே அத்வைத கருத்துக்களை எனக்கு புகட்டினீர்கள். அதைவிட மேலனாது எது இருக்க முடியும்?.உங்களை விட்டு தொலைவில் இருக்கும் இடத்தில் என்ன கற்றுக்கொள்ள முடியும்?”

தம்பூராவை நித்தமும் மீட்டுவது போன்ற ஓங்கார இசையால் அந்த சூழல் நிரம்பி இருந்தது. முனிவர்களுக்கு எல்லாம் முனிவர் என போற்றப்பட்ட ரிபு கண்கலங்கி நிற்கும் தனது மாணவன் நிதாங்கனை தீர்க்கமாக பார்த்தார்...

“நிதாங்கா நான் கூறுவதை கேள், நானும் நீயும் வேறல்ல. நான் எப்பொழுதும் இருக்கிறேன்.
நீ வாழ்வியல் அனுபவம் பெறவே உன்னை உனது ஊருக்கு திரும்ப சொல்லுகிறேன்.
கலக்கமடையாதே உன்னை வெகுவிரைவில் வந்தடைவேன்.”.

குருவின் சொல்லுக்கு கட்டுப்பட்ட நிதாங்கன் ஊருக்கு திரும்பி தனது இயல்பு வாழ்க்கையில் ஈடுபட்டான்.

காலங்கள் சென்றது....


ஒரு நாள் சாலையில் நடந்துவந்து கொண்டிருந்தான் நிதாங்கன். மக்கள் கூட்டமாக கொண்டாட்டதுடன் வருவதை கண்டான். பெரிய மேள தாளத்துடன் மக்கள் நடனமாடி ஊர்வலமாக வந்து கொண்டிருந்தார்கள். ஊர்வலத்தின் கடைசியில் பட்டத்து யானையின் மேல் அரசன் அமர்ந்து ஒய்யாரமாக வந்துகொண்டிருந்தார்...

அரசனின் அழகையும் மக்களின் ஆர்ப்பரிப்பையும் ரசித்துக்கொண்டிருந்தான் நிதாங்கன்.

பின்னாலிருந்து ஒரு கை அவனை தோளை தொட்டது....

தனது ரசிக்கும் மனோபாவத்திலிருந்து கலைந்து திரும்பிப்பார்த்தான்.

அங்கே முகத்தில் சுருக்கத்துடன், அழுக்கடைந்த உடையும், கலைந்த கேசமுமாக ஒருவர் நின்றிருந்தார். ஏதோ கிராமத்திலிருந்து வரும் நபராக இருக்க வேண்டும்.

தனது உள்ளங்கையை புருவத்தின் மேலே வைத்து அரசனின் ஊர்வலத்தை பார்த்தவாரே கேட்டார்...
“தம்பீ.. அங்கே என்ன ஒரே கூட்டமா இருக்கு?”

அவரை பார்த்தவுடன் நிதாங்கனுக்கு ஏனோ ஒருவித ஈர்ப்பு ஏற்படவில்லை. கல்விஅறிவில்லாத நாட்டுபுரத்தானிடம் என்ன பேச என என்னினான்.

கேட்ட கேள்விக்கு பதில் சொல்லி, பேச்சை வெட்டிவிட எண்ணினான்.

“அதுவா.. ராஜா யானையில் ஊர்வலமா போராரு...” என்றான் நிதாங்கன்.

“ஓஹோ..” என இழுத்தார் அந்த கிராமத்துக்காரர்.

“என்ன ஓஹோ? நான் சொன்னது உங்களுக்கு புரிஞ்சுதா?”.. என கேட்டான் நிதாங்கன்.

” ராஜா ...யானை.... புரியுது தம்பி ஆனா அதில எது ராஜா எது யானை?”

“என்னய்யா அதுகூடவா தெரியல?.. மேல இருக்கிறது ராஜா, கீழ இருக்கிறது யானை”

குதுகூலத்துடன் படபடவென கைகளை தட்டிய கிராமத்தான்...

“எனக்கு இப்பதான் தம்பி புரிஞ்சுது...எது ராஜா எது யானைனு புரிஞ்சுது:”..

இப்படியும் ஒரு மனிதனா என நினைத்தவாறே வேறுபக்கம் திரும்பினான் நிதாங்கன்..

”தம்பி ஒரு சந்தேகம்..”

மீண்டும் அவர் அழைக்கவே பொறுமை இழந்து திரும்பி என்ன என்பதை போல பார்த்தான்..

“யானை, ராஜா எல்லாம் புரியுது தம்பி. மேல கீழனு சொன்னீங்களே அது என்ன?”

தன்னிடம் வம்பு செய்ய வந்திருக்கிறார் என நினைத்து தானும் அவரை கலாட்டா செய்ய நினைத்தான் நிதாங்கன்..

எதிர்பாராத தருணத்தில் திடீரென அவரின் முதுகில் ஏறி காலை தோள்பட்டையில் போட்டு குதிரை சவாரி செய்வதை போல அமர்ந்தான்.

“நீ என் கீழ இருக்க. உனக்கு மேல நான் இருக்கேன். இத்தான் மேல் கீழ். புரியுதா?”

“மேல் கீழ் புரிஞ்சுது தம்பி.... ஆனா..”

“என்னையா ஆனா?”.. அவரின் தோள்பட்டையிலிருந்து இறங்காமலேயே கேட்டான் நிதாங்கன்..

“நீ - நான் அப்படினு சொன்னீங்களே அப்படின்னா என்ன?”

“அ...ஹா... என்னது என்ன கேட்ட?”

“நீ நான் அப்படீனு பேசும்போது சொன்னீங்களே அப்படீனா என்ன? முதல்ல 'நான்' அப்படினா என்னனு சொல்லுங்க.. அப்பறம் நீ பத்தி சொல்லுங்க”

கேள்வியின் ஆழம் புரியாமல் சிந்திக்க துவங்கினான் நிதாங்கன்...

“நான் என்பது என்ன? நிதாங்கன் என்பதா.... இல்லை அது எனது பெயர்..
இந்த உடலா? இல்லையே.. தூக்கத்தில் நான் அதை உணருவதில்லையே.
அப்பொழுது நான் என்பது ........?

ஒரு ஒளிக்கீற்று அவனுக்குள் ஒளிர்ந்தது...

உணர்விற்கு வந்தவனாக முன்புறம் இருந்த கிராமத்தானை பார்த்தான். அவர் இவனை ஒருவித குழப்பத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான்..

அவர் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து...கண்ணீர்வடித்தான்...

“ஐயா என்னக்கு எண்ணிலா தெளிவை கொடுத்துவிடீர்கள். நீங்கள் எனது குரு ரிபுவை தவிர வேறு யாராகவும் இருக்க வாய்ப்பில்லை. உங்களிடம் இருக்கும் பொழுது தான் இத்தகைய சத்தியத்தை உணர்ந்திருக்கிறேன்...”

அவனை தூக்கி தன்னுடன் அனைத்துக்கொண்டார் மகரிஷி ரிபு.

அன்று முதல் நிதாங்கனுக்கு அனுபவ பூர்வமான அத்வைத்த பாடம் துவங்கியது...

-----------------------------ஓம்---------------------------------------

குரு எப்பொழுதும் கற்றுக்கொடுப்பதில்லை.
தனது வாழ்வை அனைவருக்கும் போதிக்கிறார்.
அங்கே ஞானம் பிறக்கிறது.

Thursday, May 28, 2009

தியானம் செய்வது எப்படி?

பசுமையான மரங்கள் நிறைந்த மலைப்பகுதி....

விலங்குகள் அற்ற வனப்பிரதேசமான அங்கே அடிவாரத்தில் ஒரு குகை..

தியானத்திற்காக அங்கே மூன்று ஞானிகள் உட்கார்ந்திருந்தனர்.
மூவரும் குகையின் வாயிலை நோக்கி அமர்ந்திருந்தார்கள்.



குகையின் வெளிப்பகுதியில் குதிரையின் குழம்படி ஓசை கெட்டது...

சராலென... ஒரு குதிரையில் பயணித்த மனிதன் குகையைக் கடந்தான்...

மூன்று ஞானிகளும் எந்த சலனமும் இல்லாமல் அமர்ந்திருந்தனர்..

பன்னிரெண்டு வருடங்கள் கழித்து...

மூன்று ஞானியரில் ஒருவர் கூறினார்...”அந்த குதிரை வெள்ளை என நினைக்கிறேன்...”

அங்கே பூரண அமைதி...

பன்னிரெண்டு வருடங்கள் கழித்து...

இரண்டாவதாக இருந்த ஞானி கூறினார் .. “இல்லை இல்லை.. அந்த குதிரை கருப்பு நிறம் தான்.. ”

அங்கே பூரண அமைதி...

பன்னிரெண்டு வருடங்கள் கழித்து...

மூன்றாம் ஞானி கூறினார்... “ இப்படி இடைவிடாமல் பேசினீர்கள் என்றால் எப்படி தியானம் செய்வது ? நான் இருக்க வா போகவா?” என்றார்..

---------------------------ஓம்-----------------------------------------------

தியானம் என்பது கண்கள் மூடி அமர்ந்திருப்பதில்லை; மனம் மூடி அமர்ந்திருப்பது என பலருக்கு தெரிவதில்லை.

மெளனம் எனும் பெருவெளியில் உன்னதமான சக்தியின் மேல் பயணிப்பது தியானம் என கூறி ஒரு மொழியின் சிதறுண்ட எழுத்துக்களால் தியானத்தின் தன்மையை சிதைக்க முயல விரும்பவில்லை.

தினமும் பல மணி நேரம் தியானம் செய்கிறேன்.... தியானத்தில் இருக்கும் பொழுது எனக்கு ஒரு காட்சி புலப்பட்டது என பலர் சொல்ல கேள்விபட்டிருக்கிறேன். நீங்களும் கேள்விப்படலாம்.

தியானம் செய்யும் ஒருவன் நேரத்தை நோக்கியும், ஒரு காட்சியாலும் கவனிக்கப்பட்டால் அங்கே அவனுக்கு விழிப்பு நிலை உண்டு என அர்த்தம். அது தியானம் ஆகுமா?

தியானத்தில் மன எண்ணங்களே இல்லை என கூறுபவர்கள் உண்டு. மன எண்ணமே இல்லை என்பதை பார்த்தவர் யார்? மன எண்ணம் இல்லை என்பதே ஒரு எண்ணம் தானே?

தியானம் என்றால் தியானம் + தியானிக்கபடுவது+தியானி இவர்கள் அனைவரும் ஒன்றாக இருப்பது என்றார்கள் ஞானிகள்.

தியானம் எப்பொழுது செய்யவேண்டும்? அந்த வார்த்தையிலேயே இருக்கிறது விடை. “யா” எனும் எழுத்தை எடுத்து விடுங்கள்.

Friday, May 1, 2009

சிவ பூஜையை விட சிறந்தது எது?

எழில் மிகு இயற்கை வளம் கொஞ்சும் அந்த ஊரில் ஒரு ஆசிரமம் இருந்தது.

ஸ்வாமி விஸ்வானந்தரை அனைவருக்கும் தெரியும். மக்களுக்கு உபதேசிப்பதும் , பக்தி ரசம் பொங்க பாடல்கள் பாடுவதும் அவரின் முக்கிய பணி. தனது சிஷ்யர்களுடன் ஆன்மீக பணி ஆற்றும் விஸ்வானந்தருக்கு சிவ பூஜை, சம்பிரதாயம் என தனது நித்திய கடமைகளில் மிகவும் கண்டிப்புடன் இருப்பார்.

காலை பிரம்ம முஹூர்த்ததில் எழுந்ததும் தனது பூஜையை ஆரம்பித்தார் என்றால் பகல் பத்து மணிவரை தொடரும். மேலும் மாலை சந்தியாகாலத்தில் மறுபடியும் பூஜை. அவரது சிஷ்யர்கள் அவருக்கு உதவியாக பூஜையில் ஈடுபடுவார்கள்.
பூஜைக்கு தேவையான மலர்கள் மற்றும் அபிஷேக பொருட்களை தயாரிப்பது, பூஜை செய்யும் இடத்தை சுத்தம் செய்வது என அனைவருக்கும் வேலை சரியாக இருக்கும்.


பூஜை துவங்கியதும் சிவலிங்கத்தை பார்த்து அவர் அமர்ந்து கொள்வார்.
கைகள் அவர் நீட்ட அந்த தருணத்திற்கு தேவையான பொருட்களை சிஷ்யர்கள் அவருக்கு தருவார்கள். தவறான பொருட்களை தந்தாலோ அல்லது காலதாமதம் செய்தாலோ அவ்வளவுதான். ருத்திர பூஜை செய்பவர், ருத்திரனாகவே மாறிவிடுவார். அந்த சிஷ்யனின் கதி அதோகதிதான்.



இன்னிலையில் தான் சில மாதங்களுக்கு முன் நாதன் அவரிடம் சிஷ்யனாக சேர்ந்திருந்தான். கடைநிலையில் தொண்டாற்றி வந்த நாதன் படிப்படியாக முன்னேறி அவரின் பூஜைகளுக்கு உதவி செய்ய துவங்கினான்.

நாதனின் எளிமை, பணிவு விஸ்வானந்தருக்கு பிடித்திருந்தது. தனது பூஜைக்கான பணியை பிறரைவிட நேர்த்தியான முறையில் நாதன் செய்ததும் இதற்கு ஒரு காரணம்.

ஒரு நாள் பூஜையை ஈடுபட்டிருந்தார் விஸ்வானந்தர். என்றும் இல்லாதது போல அன்று சில தடங்கலை உணர்ந்தார் விஸ்வானந்தர். பூஜையில் மனது ஈடுபடவில்லை. ஏதோ யோசனையில் இருந்தார். தன்னை பார்க்க வந்த ஒருவர் தரக்குறைவாக திட்டியது தான் முக்கிய காரணமாக இருந்தது. நேற்று முதல் அவருக்கு மனதில் இது ஓடிக்கொண்டே இருந்தது. பலர் முன்னில் தன்னை அவமானம் கொள்ள செய்ததாக நினைத்தார்.

திடிரென தனது உடலை யாரோ தொடுவதை உணர்ந்த விஸ்வானந்தர் சுயநினைவுக்கு வந்தார். எதிரே நாதன் நின்று கொண்டு, “குருவே பூஜையை தொடராமல் என்ன யோசனை? தயவு செய்து தொடருங்கள்” என்றான்.


என்றும் இல்லாத கோபம் விஸ்வானந்தரை சூழ்ந்தது. நித்திய பூஜைக்காக ஆச்சாரமாக இருக்கும் என்னை ஏன் தொட்டாய்? உனக்கு என்னை தொடும் அருகதையை யார் தந்தது? சிவ பூஜையை பற்றி உனக்கு தெரியுமா? இதை தான் சிவ பூஜையில் கரடி என்பார்கள். சரியான கரடி நீ. என் முன்னே நிற்காதே என கோபம் கொப்பளிக்க தத்தினார்.

அமைதியாக பார்த்த நாதன் கூறினான்.. “ குருவே ஆச்சாரம் என்பது ஏது?. நேற்று ஒருவன் சொன்ன கடும் சொல்லை மனதில் வைத்திருக்கிறீர்கள். உங்கள் உடல் ஆச்சாரம் பற்றி சொல்லிகிறீர்களா அல்லது மன ஆச்சாரம் பற்றி சொல்லுகிறீர்களா? உங்களுக்குள் இருக்கும் சிவனை பூஜித்திருந்தீர்கள் என்றால் அவனின் அவமான சொற்காள் உங்களுக்கனதல்ல சிவனுக்கானது என இருந்திருப்பீர்கள். யாராவது புகழ்ச்சியான சொல்லை கூறியிருந்தாலும் உங்கள் நிலை சமநிலை தவறி இருக்காது. சிவ சொல் இருக்க வேண்டிய மனதில் அவச்சொல் இருக்கலாமா?” என்றான்.


ஏற்கனவே கோபத்தில் இருந்த விஸ்வானந்தர் கோபத்தின் உச்சத்திற்கு சென்று, “தினமும் இரு வேளையும் சிவனை பூஜிக்கும் என்னை பார்த்து விமர்சிக்கும் தன்மை உனக்கு யார் அளித்தார்கள்? எனக்கு பக்தி போதவில்லை என கூறுகிறாயா? எனது மனதில் இருப்பதை நீ சொல்லுகிறாய் ஆச்சரியம் தான். பூஜை செய்யாத உனக்கு எப்படி இந்த ஆற்றல் வந்தது? நீ மாயக்காரனா?” என்றார்.

“நான் மாயன் அல்ல குருவே. பல மணி நேரம் பூஜை செய்ய வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. ஒவ்வொரு ஷணமும் குருவாகிய உங்களை எனது மனதில் பூஜிக்கிறேன் இதை விட வேறு பக்தி என்ன வேண்டும்? என்னை பொருத்தவரை இறைவனை காட்டிலும் குருவான நீங்களே எனக்கு முக்கியம். நீங்கள் சிவனை பூஜிக்க நான் உங்களை பூஜித்ததன் விளைவே இந்த விமர்சனம் தவறிருந்தால் மன்னிக்கவும்”
என்றான் நாதன்.

நாதனின் குருபக்தியை உணர்ந்த விஸ்வானந்தர் அவனை ஆரத்தழுவினார்.

-------------------ஓம்--------------------------


தினமும் நான்கு வேளை குளிப்பதாக சொல்லும் பக்திமான்களே தவளை நித்தமும் நீரில் இருக்கிறது அது உங்களை விட ஆச்சரமானதல்லவா? எனும் சிவவாக்கியரின் பாடல் நினைவுக்கு வருகிறது.

உள் பூஜை செய்யாமல் பிறர் பார்வைக்காக வெளிப்பூஜை செய்து என்ன பயன்?


மானச பூஜை செய்ததால் பூசலார் மனதில் குடிகொண்டான் ஈசன்.
அரசனுக்கு கிட்டாதது ஆண்டிக்கு கிட்டியது.


குரு பக்தி இருக்கும் பட்சத்தில் பிற பக்திகள் சூரிய வெளிச்சத்தில் இருக்கும் நட்சத்திரங்களே.

Monday, March 16, 2009

குரு தாசி


நகுலனுக்கு எந்த கவலையும் இல்லை. காலையில் எழுந்ததும் சுவையான உணவுகளை உண்டு, நறுமண பொருட்களால் தன்னை மிகவும் வாசனையானவன் ஆக்கி கொண்டு ஊர்சுற்ற கிளம்பி விடுவான்.

தனது தந்தை பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்து வைத்திருப்பதால் அவன் தொழில் மேல் நாட்டம் இல்லாமல் இருந்தான். தினமும் குடி மற்றும் பெண்கள் மேல் இச்சை என அவனின் கும்மாளம் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போனது.

நகுலனின் தந்தையும் இதை கண்டிக்கவில்லை. தனது ஒரே மகன் செய்யும் காரியம் அனைத்தும் அவருக்கு சரியாகவே பட்டது.

இவ்வாறு நகுலனின் வாழ்க்கை சென்றுகொண்டிருக்கும் பொழுது தான் அந்த ஊருக்கு வந்தாள் வேதயாணி.

வேதயாணி நல்ல அழகும் துடுக்குத்தனமும் கொண்ட பெண். அவள் ஒரு தாசியாக வாழ்ந்து வந்தாள்.

பல ஊருகளுக்கு நாடோடி போல பயணம் செய்து அத்தொழிலை செய்துவந்தாள். வேதயாணியை கண்டவுடன் நகுலனுக்கு தனது மனதை கட்டுபடுத்த முடியவில்லை. தினமும் பல பெண்களை காணும் அவனுக்கு வேதயாணி மேல் அளவுகடந்த ஈர்ப்பு ஏற்பட்டது.

வாரத்தில் சில நாட்கள் சென்று வேதயாணியை சந்தித்து வந்த நகுலன் பின்பு தினமும் சந்திக்க நினைக்கும் அளவுக்கு அவளிடம் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது.

ஒரு முறைக்கு மேல் பழகிய பெண்களை மீண்டும் சந்திக்க விரும்பாத நகுலனுக்கு தன்னிடம் ஏற்பட்ட மாற்றம் வியப்பாக இருந்தது.

ஊருக்கு எல்லையில் ஓடும் ஆற்றங்கறையின் மறுபுறம் இருக்கும் நந்தவனத்தில் தான் வேதயாணியின் வீடு இருந்தது.



தினமும் பரிசல்காரனின் உதவியுடன் ஆற்றைகடந்து சென்று நந்தவனத்தில் வேதயாணியுடன் செலவிடுவது நகுலனுக்கு வழக்கம்.வேதயாணியின் வீட்டின் முன் இருக்கும் செண்பகப்பூ மரத்தின் நிழலில் இருவரும் சந்தித்து உரையாடுவார்கள். இதற்கு முன் எந்த பெண்ணையும் அவன் இவ்வாறு

சென்று சந்தித்ததில்லை. தனது பண செருக்கால் அவர்களை தான் இருக்கும் இடத்திற்கு வர சொல்லி அதிகாரம் செய்வான். தானே சென்று வேதயாணியை சந்திக்கும் செயலை தனது நண்பர்கள் கிண்டல் செய்தாலும் கவலைபடவில்லை நகுலன்.


இவ்வாறு நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது...


ஒரு நாள் கனமழையின் காரணமாக ஊர் முழுவதும் வெள்ளப்பெருக்கு இருந்தது. மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழலில் இருந்தார்கள்.

காமமும்,மோகமும் ஊர்மக்கள் போல் அல்லவே, நகுலனை விட்டு வெளியே வர துடித்தது.

பெரும் மழையை பொருட்படுத்தாது வேதயாணியை காண புறப்பட்டான்.
கனமழையால் அற்றில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடியது.

பரிசல்காரர்கள் யாரும் இல்லாதது நகுலனுக்கு ஏமாற்றம் அளித்தது. ஆற்றை நீந்தி கடக்கலாம் என்றால் வேகம் அதிகம். நகுலனுக்கு சாதகமாக ஒரு சிறிய மரம் ஆற்றில் அடித்துக்கொண்டு வந்தது..


அதை பாய்ந்து பிடித்து கொண்டே, மறு கையால் நீந்தி ஆற்றைகடந்தான்.மறு கரையை அடைந்ததும் சிறிய மரத்தை கரைக்கு அருகில் போட்டுவிட்டு வேதயாணியின் வீட்டை பார்த்தான். வீட்டை சுற்றி நீர் தேங்கி இருந்தது.

வீட்டின் மேல் மாடத்தில் இருந்து நகுலனின் வருகையை பார்த்தவண்ணம் இருந்தாள் வேதயாணி.

மிகவும் வேகமாக வந்த நகுலனுக்கு வீட்டின் முன் தேங்கி இருந்த நீர் ஒரு தடையாக இருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தவன், செண்பக மரத்தில் இருந்த கயிற்றை பிடித்து நீரை தாண்டி அவளின் வீட்டு முற்றத்தை அடைந்தான்.

வேதயாணியை பார்க்கும் ஆவலுடன் அவளை நெருங்கினான்.

என்றும் புன்னகையுடன் வரவேற்கும் அவள் இன்று அவனிடத்தில் கேட்டாள்.

"காம சுகத்தில் என்ன இருக்கிறது?”

இது வரை எவரும் தன்னிடம் கேள்வி கேட்டதில்லை. தன்னிடம் ஒரு பெண் கேள்வி கேட்கிறாளே என கோபம் கொண்ட நகுலன்.

அதைவிட இந்த உலகின் என்ன சுகம் இருக்க முடியும்? என்றான்.

உன் கண்கள் காமத்தால் கட்டப்படிருக்கிறது, உனது மனம் அறியாமையால் சூழப்பட்டு இருக்கிறது என்றாள் வேதயாணி.

தாசியாக இருந்தவள் திடிரென வேதாந்தம் பேசுகிறாளே என அவளை ஏறிட்டான்.

பிறகு , “என்னை விட உலகில் இன்பம் துய்ப்பவன் யாரும் இல்லை. தெரியுமா உனக்கு” என்றான் நகுலன்.

அவனை தீர்க்கமாக பார்த்த வேதயாணி ”இருக்கவே முடியாது” என தீர்மானமாக சொன்னாள்.

அவனை திருப்பி ஆற்றின் கரையோரம் காண்பித்தாள்.

அதோ பார் நீ நீந்தி வந்தது மரம் அல்ல, ஒரு பிணம்.
அதை மரம் என நினைத்து ஆற்றை கடந்தாய்.

மரத்தில் இருந்த பாம்பை கயிறு என நினைத்து நீரை கடந்து இந்த வீட்டை அடைந்தாய்..

அப்பொழுது தான் கவனித்தான் நகுலன். அது ஒரு பிணம் இது ஒரு பாம்பு.

வேதயாணி தொடர்ந்தாள் .. “பிணத்திற்கும் மரத்திற்கும், பாம்புக்கும் கயிறுக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கும் நீ எப்படி உலகின் உயர் இன்பத்தை உணர்ந்தவனாவாய் ?”

தனது வாழ்க்கையில் இப்படிப்பட்ட
சூழலை சந்திக்காத நகுலன் தன்னில் நிலைகுழைந்து நின்றான்.

சில நிமிட மெளனத்திற்கு பிறகு வேதயாணியை பார்த்து கேட்டான்.

“உலகின் உயர் இன்பம் பெற என்ன செய்ய வேண்டும்?”

அவனது நிலை உணர்ந்த வேதயாணி “இரண்டு எழுத்து மந்திரத்தை மீண்டும் மீண்டும் உச்சரி. அது போதும்” என்றாள்.


சொன்ன
து மட்டுமல்லாமல் அவனது காதில் அதை உபதேசித்தாள்.

வேட்டைக்காரனை வால்மீகியாகிய மந்திரம்
நகுலனை ராமதாஸனாக்கியது.

தன்னை உணர்ந்து ...
உயர் இன்பன் அடைந்தான் ராமதாஸன்.



-------------------------------------------------------------------------

நமது உணர்வுகள் விழிப்புணர்வின் விரோதிகள். காமம் குரோதம் மற்றும் மாயை நம்மை முழுமயான செயல் நிலைக்கு இட்டுச் செல்லுவதில்லை.

மேற்கண்ட கதையை படிக்கும் பொழுது கூட “வேதயாணி” எனும் பெயரை ஒரு முறையேனும் “தேவயாணி” என உச்சரித்திருப்பீர்கள்.

உணர்வுகளின் தலையீட்டால் இந்த பிழை நேரக்கூடும்.

உங்கள் கண்கள், உணர்வு இவை ஓருங்கிணைந்து வேலை செய்தால் மட்டுமே விழிப்புணர்வில் இயங்க முடியும்.

குரு நிலை என்பது உருவாக்கபடுவதில்லை. இறைநிலை ஒருவருக்குள் புகுமபொழுது அவர் குருவாகிறார். அதனால் தாசி உபதேசிக்க முடியுமா என

மேற்கண்ட கதையில் உங்களுக்கு தோன்றினால் அது உங்களின் முழுமை நிலை இல்லை என்பதை காட்டும்.

தாசி குருவாகவில்லை. நகுலனை ராமதாசனாக்க குரு தாசியானாள் என்பதே உண்மை.

அதனால் தான் நான் அடிக்கடி சொல்லுவேன்...

குரு உன்னை எப்பொழுதும் பார்த்து கொண்டே இருக்கிறார்.
நீதான் அகமும்-புறமும் கண்கள் இல்லாமலேயே வாழ்கிறாய்.


Monday, February 9, 2009

ஆன்மீக சாதனை


குரு மரண படுக்கையில் இருந்தார்..

அருகில் அவரின் சீடன் கவலை தோய்ந்த முகத்துடன் காணப்பட்டான்.

குரு மெல்ல அவனை அழைத்து, “ சிஷ்யா.. ஏன் கவலைப்படுகிறாய்? உனக்காக நான் எப்பொழும் இருப்பேன். கலக்கம் அடையாதே...”

கலங்கிய கண்களுடன் சிஷ்யன் கூறினான்.. “குருதேவா... நீங்கள் கூறியபடி ஜாபம் தியானம் எல்லாம் செய்து வருகிறேன். ஆனால் ஆன்மீக உயர்நிலை அடையும் காலம் எப்பொழுது என தெரியவில்லை. எதுவரை எனது ஆன்மீக பயிற்சியை தொடர்வது. உங்கள் காலத்திற்கு பிறகு யாரிடம் நான் கேட்பது?”


அணையும் ஜோதி பிரகாசகமாக சுடர்விடும் என்பதை போல ஜோதிர்மயமான முகத்துடன் சிஷ்யனை பார்த்தார் குரு.. “கவலை கொள்ளாதே. இந்த கட்டிலுக்கு அடியில் ஓர் பெட்டி இருக்கிறது. அதன் உள்ளே உனக்கு பிற்காலத்தில் உபதேசிக்க வேண்டியதை வைத்திருக்கிறேன்...அது அனைத்து விஷயங்களையும் போதிக்கும். எனது உபதேசம் தேவைப்படும் பொழுது மட்டும் பெட்டியை திறந்து பார். எனது ஆசிகள்”...என கூறியபடி அவரின் ப்ராணன் உள்ளே அடங்கியது.


நாட்கள் சென்றன...

தனது ஆன்மீக சாதனையில் தனக்கு பலன் கிடைப்பதாக சிஷ்யனுக்கு தெரியவில்லை.. தியானம் , ஜபம் ஆகியவற்றை விட்டுவிடலாமா என எண்ணினான்..

குருவின் உபதேசத்தை கேட்க பெட்டியை திறந்தான்.


சிஷயன் ஞானம் அடைந்தான்..






நாட்கள் சென்றன...

சிஷ்யன் கூறிய கருத்துகளை மக்கள் ஏற்காமல் கலகம் செய்தனர்.

மீண்டும் குருவின் உபதேசத்தை கேட்க பெட்டியை திறந்தான்..

அதற்கு பின் வரும் காலத்தில் மக்கள் கருத்துக்களை ஏற்றுக்கொண்டனர்...





நாட்கள் சென்றன...

தனது இறுதி காலத்தை அடைந்தான்.. தனது சிஷ்யனை கூப்பிட்டு கூறினான்..

“எனது பிரிய சிஷ்யா.. எனது குரு எனக்கு அளித்த உபதேசத்தை உனக்கு அளிக்கிறேன். எனது உபதேசம் தேவையான பொழுது மட்டும் இந்த பெட்டியை திற. எனது உபதேசம் கிட்டும்.”

சிஷ்யனுக்கு சிஷ்யனான பரம சிஷ்யன்.. தனது ஆன்மீக சாதனையில் தோய்வு ஏற்பட்டது. குருவின் உபதேசம் அறிய பெட்டியை திறந்தான்..

அதில் எழுதி இருந்த வாசகம்...

“இன்னொரு முறை முயற்சி செய்”


-----------------------------------------------------------
சிஷ்யனுக்கு மட்டுமல்ல நமக்கும் ஆன்மீக சாதனையில் தோய்வு ஏற்படும் பொழுதும் இந்த உபதேசம் உதவும்..

குரு என்பவர் உபதேசிக்க மட்டுமே முடியும். ஆன்மீக சாதனையை தனி ஒரு மனிதன் செய்து உயர்வடைய வேண்டும்.

எளிமையாக சொல்ல வேண்டுமானால் குரு சமைத்து கொடுக்கலாம், ஏன் ஊட்டிகூட விடலாம். ஆனால் நாம் தான் ஜீரணிக்க வேண்டும்.