Tuesday, November 17, 2009

ஸ்டார்டிங் ட்ரபிள்

“டிங்...டிங்...டிங்” காலை ஆசிரம மணியின் ஓசை கேட்டது.

நான்கு மணி ஆகிவிட்டது என்ற எண்ணத்துடன் எழுந்தான் விஷ்ணு. விஷ்ணு ஆசிரமத்தின் அனைத்து வேலைகளையும் பார்ப்பவர்களில் ஒருவன்.

காலை ஐந்து மணிக்கு யோக பயிற்சி முடித்ததும், ப்ரார்த்தனை மற்றும் காலை உணவுடன் துவங்கும் அவனது பணி இரவு ஒன்பது வரை நீடிக்கும்.

புத்தகங்கள் பார்சல் அனுப்புவது, தோட்டத்தை சுத்தம் செய்வது மற்றும் குரு வெளியே செல்லுவதற்கு வாகன ஓட்டியாக மாறுவது என ஒரு நாளில் பல அவதாரம் எடுப்பவன் விஷ்ணு.

அன்று காலை வழக்கம் போல யோக பயிற்சிக்காக ஆசிரம யோக சாலைக்கு சென்று பயிற்சி செய்ய துவங்கினான்.

இன்று என்னமோ அவனுக்கு யோக பயிற்சியை சரிவர செய்ய முடியவில்லை.முன்னால் அமர்ந்திருந்த குருவின் மேல் அவனுக்கு கவனம் முழுவதும் சென்றது. விஷ்ணு ஆசிரமத்திற்கு வந்த நாள் முதல் பார்த்திருக்கிறான் குரு யோக பயிற்சியை கற்றுக்கொடுக்கிறாரே தவிர அவர் செய்வதில்லை.

இவனும் சக ஆசிரம வாசிகளும் ப்ராணயாமமும், ஆசனமும் செய்யும் பொழுது அவர் கண்களை மூடி அமர்ந்திருப்பார். அல்லது ஜன்னலுக்கு வெளியே எங்கோ பார்த்துக்கொண்டிருப்பார்.

பிறருக்கு பயிற்சி அளிக்கும் நேரத்தில் குரு செய்து இருப்பதை பார்த்திருக்கிறேன். எங்களை தினமும் செய்ய கூறும் குரு தான் செய்வதில்லையே என்ற எண்ணம் அதிகமாக வந்தது. தவறு என்றாலும் எண்ணத்தை தவிர்க்க முடியவில்லை. அவனது யோக பயிற்சியில் கூட அந்த தடுமாற்றம் தெரிந்தது.

ஆனாலும் யாருக்கும் தெரியாத வண்ணம் சரிசெய்து யோக பயிற்சி முடித்துவிட்டு அறையைவிட்டு வெளியேறினேன்.

“விஷ்ணு...”.. குருவின் குரல் கேட்டது.

அவரை நோக்கி புன்னகையுடன் கைக்கூப்பி நின்றேன்.

“ கொஞ்சம் வெளியே போகனும், ஜீப் ரெடி பண்ணுப்பா” என்றார் குரு.

என்றும் இல்லாத அதிசயமாக இன்று காலையிலேயே வெளியே செல்ல அழைக்கிறாரே என்ற தயக்கத்துடன் ஜீப்பை தயார் செய்தேன். குருஜி ஏறியதும் ஜீப்பை ஸ்டார்ட் செய்து ஆசிரமத்திலிருந்து வெளியே கொண்டு வந்தேன். ஆசிரமம் இருப்பது மலைபகுதி என்பதால் ஜீப் பயணிக்கும் பொழுது குளிர்ந்த காற்று ரம்மியமாக இருந்தது.

சில தூரம் பயணித்ததும் குருஜி என்னை பார்த்து திரும்பினார்..

பிறகு கேட்டார்.. “ சாவி போட்டுட்டியா விஷ்ணு?” என்றார்.

வண்டி ஓடிக்கொண்டிருக்கும் பொழுது இது என்ன இப்படி கேட்கிறார் என்ற குழப்பம் வந்தாலும் வேறு வழியில்லாமல் “போட்டாச்சு குருஜீ” என்றேன்.

ஜீப்பினுள் மெளனம் நிலவியது.

வண்டி சில கிலோ மீட்டர் சென்றது
மீண்டும் குருஜீ என்னை பார்த்து திரும்பினார்.

பின்பு கேட்டார்.. “ஜீப்புக்கு சாவி போட்டுட்டியா விஷ்ணு?”

இது என்ன முட்டாள் தனமான கேள்வி என தோன்றினாலும் வேறுவழியில்லாமல்.. “போட்டாச்சு குருஜீ” என்றேன்.

மேலும் சில கிலோமீட்டர் சென்றது. மீண்டும் குருஜீ என்னை பார்த்து...

“விஷ்ணு சாவி... ” என துவங்கும் முன் இடைமறித்தேன். “குருஜீ சாவி போடாமல் எப்படி வண்டி ஸ்டார்ட் ஆகும்? நாம் இவ்வளவு கிலோமீட்டர் வர முடியுமா? ” என்றேன்.

வேறு எங்கோ பார்வையை நிலைபடுத்திய படியே குருஜீ கூறினார்.

“ உள் இருக்கும் தெய்வீகத்தை தூண்டுவதற்காகத்தான் எல்லோரும் யோகப்பயிற்சி செய்கிறார்கள். இது வண்டிக்கு சாவி போடுவது போல. தூண்டிவிடப்பட்டதும் தெய்வீகம் ஆற்றலுடன் செயல் படத்துவங்கும். அப்பொழுது மீண்டும் மீண்டும் தூண்டிவிட தேவையில்லை. வண்டி ஓடும் பொழுது நீ மீண்டும் மீண்டும் சாவி போட்டு துவக்கவில்லை இல்லையா?”

“. க்ரிர்....ச்...” ஜீப்பை பிரேக் போட்டு நிறுத்தினேன்.

---------------------ஓம்-----------------------

நம்மை குருவின் நிலையுடன் எப்பொழுதும் ஒப்பிட்டுக்கொள்ளக்கூடாது.

நாம் குருவை மிஞ்சிய சிஷ்யர்களாக இருந்தாலும் குருவின் செயலை நாம் செய்ய வேண்டும் என்பதில்லை.

குரு நமக்கு எதை செய்ய சொல்கிறாரோ அதை செய்வதே பெரும் ஆன்மீக செயலாக கருதவேண்டும்.

குருவுக்கு தெரியும் நாம் என்ன செய்ய வேண்டும் என்ற அர்ப்பணிப்பு உணர்வு இருந்தால் அவருடன் நம்மை ஒப்பு நோக்க தோன்றாது.

கூட்டுப்புழு தன்னை பட்டாம்பூச்சி ஆக்க முயல வேண்டும். பட்டாம்பூச்சி எதுவும் ஆக முயல வேண்டாம். கூட்டுப்புழு எதுவும் செய்ய வில்லை என்றால் என்றும் பட்டாம்பூச்சி ஆக முடியாது.

நீங்கள் நீங்களாக இருக்க முயன்றால் நீங்களும் குருவாக மாற முடியும்.
மாறாக நீங்கள் குருவாக முயன்றால் நீங்கள் நீங்களாக கூட மாற முடியாது.

15 comments:

Jawahar said...

சுவாமி, சுவாரஸ்யமாகக் கதை எழுதும் திறமை உங்களுக்கிருக்கிறது.

ஒரு சந்தேகம்.

கடுமையான யோகப் பயிற்சி செய்து ஒருவர் அஷ்ட சித்திகளையோ அல்லது அதனிலும் மேம்பட்ட சமாதியையோ அடைந்து விட்ட பிறகு, பயிற்சியை அவர் நிறுத்தினால் அவர் பெற்ற ஞானமோ, சித்திகளோ நிலைத்திருக்குமா? பெரிய ஞானிகள் என்று நாம் போற்றுகின்ற மாமனிதர்கள் இவ்வாறு ஒரு நிலையில் நிறுத்தியவர்கள்தானா?

http://kgjawarlal.wordpress.com

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஜவஹர்,

//சுவாமி, சுவாரஸ்யமாகக் கதை எழுதும் திறமை உங்களுக்கிருக்கிறது. //

உங்களை போன்றோரின் வலைதளம் படித்து கற்றுக்கொண்டது. :))

ஞானம் அடையும் வரைதான் ஓட்டம்.. பிறகு தேவை இல்லை என்பதே ஞானிகள் கூறும் கருத்து.

எல்லை கோட்டை தொட்டபிறகும் ஒருவன் ஓடிக்கொண்டே இருந்தால் என்ன ஆகும்?

சமாதி நிலை என்ற நிலை அடைந்ததும் அவர்களாக நினைத்தாலும் கீழே விழ முடியாது..

உங்கள் தோழி கிருத்திகா said...

நல்ல கருத்து குருஜி...
நன்றீ...மேலும் தொடருங்கள்

அது ஒரு கனாக் காலம் said...

as always... you are too good and conviencing as well.

sowri said...

பயிற்சி தொடருந்து செய்ய முடியாமல் போனால் இது வரை செய்த பயிற்சின் பலன் கிடைக்காதா? குருவை தொடர்வது எப்படி ? Sometimes we found some contradiction to our belief system with Guru and we could not simply follow. When our search for guru ends?

Mahesh said...

நீங்க பாட்டுக்கு ஸ்டார்டிங் ட்ரபில்னு சொல்லிட்டிங்க... படிச்ச பிறகு இப்ப திங்கிங் ட்ரபில் !!!

நல்ல உவமை... யோசிக்க வைக்கிறது.

ஸ்வாமி ஓம்கார் said...

சகோதரி கிருத்திகா,

திரு சுந்திரராமன்,

திரு மகேஷ்,

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு செளரி,

பயிற்சி தொடர்ந்து செய்ய வேண்டும்.

எலிகாப்டரில் பயணிக்க துவங்கி இடம் அடையும் வரை மேலே இருக்கும் விசிறியை சுழலவிட வேண்டும்.

மேலே வரும் பொழுது சுழல விட்டோமே என நிறுத்திக்கொண்டால் பாதிப்பு கண்டிப்பாக உண்டு.

நான் கூறிய கதை குரு கிடைத்தவர்களுக்கானது. குரு தேடுபவர்களுக்கன கதையும் இத்தளத்தில் உண்டு.

உங்கள் வருகைக்கு நன்றி

நிகழ்காலத்தில்... said...

\\“. க்ரிர்....ச்...” ஜீப்பை பிரேக் போட்டு நிறுத்தினேன்.\\

கத நல்லா வந்திருக்கு விஷ்ணு..

ஆ.ஞானசேகரன் said...

//நீங்கள் நீங்களாக இருக்க முயன்றால் நீங்களும் குருவாக மாற முடியும்.
மாறாக நீங்கள் குருவாக முயன்றால் நீங்கள் நீங்களாக கூட மாற முடியாது.//

ஏற்றுக்கொள்ள வேண்டிய நீதி

ஸ்வாமி ஓம்கார் said...

நிகழ்காலத்தில்... said...

\\“. க்ரிர்....ச்...” ஜீப்பை பிரேக் போட்டு நிறுத்தினேன்.\\

கத நல்லா வந்திருக்கு விஷ்ணு..


-----------------------
சரிங்க குருஜீ :)

Siva Sottallu said...

// வண்டி ஓடும் பொழுது நீ மீண்டும் மீண்டும் சாவி போட்டு துவக்கவில்லை இல்லையா?” //

என் கேள்விக்கு பதில் கிடைத்தது போல் உள்ளது ஸ்வாமி. மீண்டும் நன்றி.

Guru said...

நீங்கள் நீங்களாக இருக்க முயன்றால் நீங்களும் குருவாக மாற முடியும்.
மாறாக நீங்கள் குருவாக முயன்றால் நீங்கள் நீங்களாக கூட மாற முடியாது.
நல்ல கருத்து குருஜி..

அகோரி said...

நல்ல கருத்து குருஜி..

Naveen said...

//நீங்கள் நீங்களாக இருக்க முயன்றால் நீங்களும் குருவாக மாற முடியும்.
மாறாக நீங்கள் குருவாக முயன்றால் நீங்கள் நீங்களாக கூட மாற முடியாது.//

சுவாமி, அருமையான வரிகள் அற்புதமான கருத்துக்கள். உண்மையில் நான் பெருமைபடுகிறான்...