Monday, June 21, 2010

ஆன்மீக குருவுடன் முதல் சந்திப்பு

ரிஷிகளின் கருப்பை என அழைக்கப்படும் ரிஷிகேசத்தின் கிழக்கு பகுதி. சூரியன் தன் கதிர்களை தளர்த்தி செம்பாகும் மாலை நேரம். அந்த மலைபகுதியை ஒட்டி இருக்கும் ஆசிரம குடில்கள் நிறைந்த ஏகாந்தமான சூழலுக்குள் நுழைந்தான் விஷ்வ தாஸ்.

நீண்ட காலமாக குருவை தேடி பல இடங்களுக்கு பயணப்பட்டவனுக்கு அந்த இடம் ஒரு ரம்மியமான அமைதியை கொடுத்தது. ஆசிரம குடில்களுக்கு மத்தியில் இருந்த ஆலமரத்தின் அடியில் சிறிது கூட்டம் தென்பட அதை நோக்கி சென்றான் விஷ்வதாஸ்.

கண்கள் மூடி அன்பர்கள் சுற்றி அமர்ந்திருக்க ஒரு தெய்வீகமான உருவத்தில் நடு நாயகமாக அமர்ந்திருந்தார் யோகி யஸ்வந். வெண் பஞ்சு போன்ற நீண்ட தலை முடியும் தாடியும் ஆழ்ந்த அமைதியை பறைசாற்றியது. அவரின் முன் சென்று அமைதியாக அமர்ந்தான் விஷ்வ தாஸ். எங்கும் பேரமைதி நிலவியது.

சில நிமிடங்கள் கரைந்தது. மெல்ல கண்களை திறந்தான் விஷ்வ தாஸ், யோகி அவனை உற்று நோக்கிய வண்ணம் இருந்தார். சைகையால் அவனை அருகில் அழைத்தார்.

முக மலர்ச்சியுடன் அவரின் அருகில் சென்று பணிந்து வணங்கினான் விஷ்வ தாஸ். மீண்டும் சைகையால் கண்களை மூடச்சொன்னார். கண்கள் மூடி ஆழ்ந்த ஆன்மீக எதிர்பார்ப்புடன் இருந்தான் விஷ்வ தாஸ்.

“பளார்...”

அசுரத்தனமான அடி ஒன்று கண்ணத்தில் இறங்கியது. எதிர்பாராத அடியால் நிலை குலைந்து போனான் விஷ்வ தாஸ்.

சுற்றி இருந்தவர்கள் அனைவரும் இவனை பார்த்து பலமாக சிரிக்க, அவமானமும் ஏமாற்றமும் இணைந்து கண்களில் நீர்துளியாக எட்டிபார்த்தது.

வேறு யோசனைகள் இல்லாமல் அந்த இடத்தைவிட்டு வெளியேரினான் விஷ்வதாஸ். ஆசிரமத்தை விட்டு வெளியேறி வெளியே இருக்கும் பாதையில் நடக்கலானான். அவமானம் ஆத்திரமாக மாறியது. பல பேர் முன்னிலையில் தன்னை அவமானப்படுத்திய யோகியை பழிதீர்க்க எண்ணினான். வேறு ஆசிரமம் சென்று அங்கே இணைந்து இவருக்கு முன் ஆன்மீகத்தில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது.

கங்கை கரையை பாலத்தின் மூலம் கடந்து மறுகரையில் இருக்கும் மற்றொரு ஆசிரமத்திற்குள் நுழைந்தான்.

சிஷ்யர்கள் ஒருவர் முன் அமர்ந்து கொண்டு பஜனை பாடிகொண்டிருந்தார்கள்.


அங்கே மழிக்கப்பட்ட தலையுடன் கருப்பு கம்பளியை மட்டும் உடலில் போர்த்திய கம்பளி யோகி அமர்ந்திருந்தார். யோகி யஸ்வந் உடன் கம்பளி யோகியை ஒப்பிட்டு பார்த்தான். உடை, தலை முடியின் அமைப்பு என பல்வேறு ஒப்பீடுகள் நடத்தினான். யோகி யஸ்வந்க்கு முற்றிலும் எதிரான நிலையை கப்பளி யோகியிடம் கண்டான். தான் சரியான இடம் வந்திருப்பதாக உணர்ந்து கொண்டான்.

விஸ்வ தாஸ் சிஷயர்களுடன் அமர்ந்து கண்களை மூடி தானும் பஜனை பாடியவாறே மெல்ல தலையை அசைத்துக் கொண்டிருந்தான்.

யாரோ அவனை உற்று நோக்குவது போல இருந்தது கண்களை திறந்து பார்த்தான். கம்பளி யோகி இவனை உற்று நோக்கிக் கொண்டிருந்தார். கம்பளி யோகி தன்னை ஏற்றுக் கொண்டதாக உணர்ந்தான். இவனுக்கு ஆனந்த அனுபவமாக இருந்தது.

சில வினாடிகளில் சைகையால் தன்னை நோக்கி அழைத்தார் கம்பளி யோகி. மெல்ல அவரிடம் சென்றான். சைகையால் கண்களை மூடு என்றார்.

கண்களை மூடியவனுக்கு மனதுக்குள் மின்னலாய் முன்பு நடந்த அனுபவம் நிழலாடியது. யோகி யஸ்வந் விட்ட அறை ஞாபகம் வர....சற்று பின்னோக்கி நகர்ந்து கண்களை திறந்தான்.

அங்கே நீண்ட திரிசூலத்தை தூக்கி இவனை நோக்கி பாய்ச்சும் தருவாயில் இருந்தார் கம்பளி யோகி. அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றான். சடாரென சுதாரித்துக் கொண்டு திரும்பி ஓட துவங்கினான்.

கம்பளி யோகி அவனை விடாமல் துரத்த துவங்கினார்..

குருவை தேடிவந்தது குற்றமா? ஆன்மீக எண்ணத்தை தவிர தவறான எண்ணம் எதுவும் தனக்கு இல்லையே. அடிப்பதற்கும் கொல்லுவதற்கும் இவர்கள் துணியும் அளவுக்கு நாம் என்ன பாவம் செய்தும் என நினைத்து தன்னை நொந்து கொண்டான். விஸ்வ தாஸ் ஓடுவதை நிறுத்தவும் இல்லை. கம்பளி யோகியும் விடுவதாக இல்லை.

கங்கை கரையில் நீண்ட தூரம் ஓடியவனுக்கு கம்பளி யோகியின் மேல் எரிச்சல் உண்டானது. கம்பளி யோகி தன்னை கொலை செய்ய துரத்துவதை பார்க்கும் பொழுது யஸ்வந் யோகி தன்னை அடிக்க மட்டுமே செய்தார். அவர் எவ்வளவோ நல்லவர் என தோன்றியது.

பல எண்ணங்களுடன் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்தவன் எதிலோ மோதி கீழே விழுந்தான். மெல்ல எழுந்து பார்த்தான்.

அங்கே யஸ்வந் யோகி நின்று இருந்தார். அவனை ஆதரவாக தூக்கி கையில் இருந்த இனிப்பை அவனுக்கு புகட்டினார். வாயில் இனிப்புடன் கலவரத்துடன் திரும்பி பார்த்தான் விஸ்வ தாஸ்.

அங்கே கம்பளி யோகி தென்படவில்லை.

-------------------ஓம்-----------------------

குருவை நீங்கள் தேடத்துவங்கினால் உங்கள் அறியாமையை தூண்டுபவரை சென்று அடைவீர்கள். உங்களுக்கு சுகமான உணவையும், சூழலையும் சுகானுபவத்தையும் கொடுப்பவர் குரு என நீங்கள் நினைப்பீர்கள். அப்படிபட்டவர்கள் உங்களை அறியாமை என்ற தூக்கத்தில் ஆழ்த்தி விடுவார்கள்.

ஆன்மாவை நேரடியாக தொடர்பு கொள்ள உங்கள் ஆணவத்துடன் போர் புரிபவரே உங்கள் குருவாக இருக்க முடியும். அவரை நீங்கள் சந்தித்ததும் உங்களிடம் இருந்து எதையோ முக்கியமானதை இழக்கப் போகிறேன் என்ற ஆழ்ந்த துக்கம் ஏற்படும். உங்கள் ஆணவம் தன்னை இழக்க தயாராகாமல் அவருடன் போராடி தோற்கும்.

எளிமையாக சொல்லுவதென்றால், உங்கள் உள் கட்டமைப்புகளை தகர்த்து யார் அதில் புதிய ஒளியை ஏற்றுகிறாரோ அவரே குருவாக இருக்க முடியும்.

உங்களை தூங்க செய்பவர் குரு அல்ல.. விழிக்கச் செய்பவரே குரு...!