Thursday, July 26, 2012

புனித நூல்


சீனர்களின் கைவேலைப்பாடு மிக்க அந்த பேழையில் பட்டு துணி சுற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்தது அந்த புத்தகம். இன்று வரை யாரும் அதை திறந்து பார்த்ததில்லை.

குரு மட்டுமே அதை கையில் சில நேரம் வைத்திருந்து நான் பார்த்திருக்கிறேன். நான் அவரின் பிரதான சிஷ்யன் என்பதால் எனக்கு இவ்வாய்ப்பு கிடைத்தது.  இங்கே இருக்கும் பலருக்கு இதுவும் கிடைத்ததில்லை.

குரு பிறருக்கு காட்டாமல் பொத்தி வைத்திருக்கும் அந்த புனித நூலில் இருக்கும் தேவ ரகசியம் என்ன என தெரிந்துகொள்ள ஆவல் பிறந்தது.

எத்தனை நாள் தான் அதற்கு பூஜைகள் மட்டும் செய்து கொண்டிருப்பது? நானும் அதை படித்து ஆன்மீகத்தில் உயர வேண்டாமா? இந்த வேட்கை என்னை பல்வேறு வகையில்` தூண்டியது.

அன்று இரவு அப்புத்தகத்தை திறந்துபார்க்கும் திட்டம் உருவாகியது. குருவை அவரின் அறையில் சந்தித்து பூஜை அறையை தூய்மையாக்க போகிறேன் என சொல்லிவிட்டு தனியாக வந்துவிட்டேன்.

இதோ அறைக்கதவை சாத்தி தாழ்போட்டாகிவிட்டது.யாரும் உள்ளே வரவோ நடப்பதை பார்க்கவோ முடியாது.

நறுமணம் கமழும் அந்த பெட்டியை மெல்ல திறந்து பட்டுத்துணியை விலக்கி அந்த புனித நூலை எடுத்தேன்.

அப்புத்தகத்தின் அட்டைப்படம் தாண்டி உள்ளே இருக்கும் தேவரகசியத்தை ஒரே மூச்சில் பருகும் ஆவலில் திறந்தால்....அனைத்தும் வெற்றுக்காகிதமாக இருந்தது...!

புனித நூல் ஏன் வெற்று தாளாக இருக்கிறது? இதை ஏன் வைத்து வழிபட வேண்டும் என பல குழப்பம் தோன்றியது...

மெல்ல திரும்பினால்...

பூட்டிய அறைக்குள் குரு நின்று என்னை தீர்க்கமாக பார்த்துக்கொண்டிருந்தார்.

அதிர்ச்சியில் உச்சத்துக்கே சென்று அவர் காலில் விழுந்தேன். தேம்பி அழுதுக்கொண்டு என் கண்ணீரால் அவரின் கால்களை கழுவும் என்னை தோள்களை பிடித்து தூக்கினார்.

“புனித நூல் என்றவுடன் அதில் பல தெய்வீக கருத்துக்கள் இருக்கும் என நினைத்தாயா? இறை கருத்துக்கள் என்பது ஒரு மொழியில் அடங்கக் கூடியது அல்ல. இறைகருத்துக்கள் வார்த்தையால் உணரக்கூடியது அல்ல.. இறைவன் என்ற பிரம்மாண்டம் சில வார்த்தையால் விளக்கிவிட முடியுமா என்ன? இறைக்கருத்துகள் மெளனத்தால் பகிர வேண்டியவை... மெளனம் எப்படி அனைத்தையும் கொண்டிருக்கிறதோ...அதுபோல இந்த வெற்றுத்தாள்களும் எல்லையற்ற இறைவனின் வார்த்தைகளை நிரப்பிக்கொண்டு தேடுதல் உள்ளவர்களுக்காக காத்திருக்கிறது... இதோ நீ இன்று வந்துவிட்டாய்”

எனக்கூறி என்னை அவரின் கூர்மையான கண்களால் மெளனமாக பார்த்தார்.

------------ஓம்-------------------
இறைவனை மதத்தாலும்..மொழியாலும் சிறுமைபடுத்துவதைவிட இறை அனுபூதியை மெளனத்தால் உணர முற்படுவதே நாம் செய்ய வேண்டிய ஆன்மீக பயிற்சியாகும்..

Tuesday, July 17, 2012

தாகத்திற்கு தண்ணீர் கேட்ட மீன்


“ஏண்ட சங்கரு அவரு கூடயாடா சுத்திக்கிட்டு இருக்க? 
அவனே ஒரு பைத்தியக்கார பய..” இப்படி சண்முகம் சொல்லி முடிப்பதற்குள் 
அவனின் மேல் பாய்ந்து கட்டிப்புரண்டான் சங்கர்.

இப்படி பார்ப்பவர்கள் எல்லாம் தன் குருவை பைத்தியம் என சொன்னாலும் சங்கருக்கு குருவின் மேல் ஏதோ ஒரு இனம் புரியாத நேசம் இருந்தது. தனக்கு மிக நெருக்கிய தன்மையை அவரிடம் உணர்ந்தான்.

அதனால் யாரேனும் அவரை பைத்தியம் என சொன்னால் அவனால் கோபத்தை கட்டுப்படுத்த முடியாது. இத்தனை நாள் அவருடன் இருக்கும் சங்கருக்கு தன் குருவின் நடவடிக்கையில் எப்பொழுதும் சந்தேகம் வந்ததில்லை. அவர் மிகவும் அமைதியானவர் யாரிடமும் பேச மாட்டார். 

யோக பயிற்சியை பலருக்கு கற்றுக்கொடுப்பது ஆன்மீக இடங்களுக்கு செல்லுவது என அவரின் செயல்பாடுகள் விரல் விட்டு எண்ணிவிடலாம்.இப்படி இருக்க அவரை ஏன் பைத்தியம் என கூறுகிறார்கள் என சங்கருக்கு பிடிபடவில்லை.

இன்று குருவுடன் ஒரு ஆன்மீக பயணத்திற்கு தயாராகும் பொழுது நண்பன் 
சண்முகத்துடன் இந்த தகறாரு ஏற்பட்டது. தன் உடமைகளை தயார் செய்துகொண்டு ஆசிரமம் வந்தடைந்தான் சங்கர். குருவுடன் மிகவும் கடினமான மலைக்கு பயணப்படப்போகிறான். அங்கே உச்சியில் இருக்கும் மலைக்குகையில் தரிசனம் செய்யலாம் என குரு சொன்னவுடன் கிளம்பிவிட்டான்.

செங்குத்தான மலையில் ஏழு மணிநேர பயணத்திற்கு பிறகு வெண்மேகம் சூழ்ந்த அந்த மலை உச்சியை அடைந்தார்கள். மேகக்கூட்டங்களுடன் குளிர்காற்று வீசும் சூழலில் குகை அமைந்திருந்தது. அந்த குளிர் உடலில் புகுந்து எலும்புகளை அசைத்துப்பார்த்தது. அங்கே இருக்கும் அருவியில் நீராடிவிட்டு, குகைக்குள் சென்று அமர்ந்தார்கள். 

குரு ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். 

திடீரென ஒரு சப்தம் ...”ஹம்சோ ஹம்சோ ஹம்சோ”

அங்கே சங்கர் தன் குருசொல்லிக்கொடுத்த யோக பயிற்சியை குகையில் அமர்ந்து செய்து கொண்டிருந்தான். 

யோக பயிற்சி முடித்தபின் கண் திறந்த பார்த்த சங்கர் அங்கே குரு இல்லாததை கண்டு குகைக்கு வெளியே வந்தான். 

அங்கே குளிர்காற்று வீசும் குகையின் முகப்பில் உள்ள ஒரு பாறையில் அமர்ந்திருந்தார் குரு.

அவரின் கையில் ஒரு விசிறி இருந்தது. அதிக கோடைகால மதிய நேரத்தில் காற்று வீசிக்கொள்வதை போல விசிறியால் வீசிக்கொண்டிருந்தார்.

கம்பளி ஆடையுடன் கடும் குளிரில் நான் வெட வெடக்க இவரோ கையில் விசிறியுடன் இருப்பது சங்கருக்கு விசித்திரமாகப்பட்டது.

ஊர்காரர்கள் சொல்லுவது போல இவர் ஒரு மாதிரியோ என எண்ணம் ஏற்பட்டது. இவ்வாறு சங்கர் நினைத்து முடிக்கவும் குரு அவன் பக்கம் திரும்பி பார்க்கவும் சரியாக இருந்தது.

“என்ன...என்னை பார்த்தால் பைத்தியமா தெரியுதா?” என கேட்டு குரு பெரும் சப்தமாக சிரித்தார்.

இவரிடம் மலை உச்சியில் தனியாக வந்து மாட்டிக்கொண்டோமோ என்ற பயன் வந்தது சங்கருக்கு...

ஆழ்ந்த பார்த்த குரு பேசத்துவங்கினார்...

“சங்கர்..... உனக்கு யோக பயிற்சி கற்றுக்கொடுத்தது ஆன்மீக ஆற்றல் குறைவாக இருக்கும் இடத்தில் செய்து ஆன்மிக்க ஆற்றலை பெருக்கிக்கொள்ளத்தான். இங்கே வந்து யோக பயிற்சி செய்வது... நான் இங்கே இருந்து விசிறியால் வீசிக்கொள்வதை போலத்தான்.. மீனுக்கு தாகம் எடுக்கலாமா?” என சொல்லி மீண்டும் சிரித்தவாறே மலை இறங்கத்துவங்கினார்.

இவரையா பைத்தியம் என்கிறார்கள் என நினைத்தவாரே சங்கர் பின் தொடர்ந்தான்.

-------------------ஓம்--------------------------

குருவின் செய்கைகள் ஒருவருக்கோ அல்லது பலருக்கோ மிக சரியான பாடத்தை கற்றுக்கொடுக்கிறது. 

இதில் சம்பந்தப்படாதவர்களுக்கு குருவின் செய்கைகள் பைத்தியத்தை போல தெரியலாம்.

கண் திறந்து கொண்டு இருட்டில் இருப்பவனுக்கே ஒளியை கையில் வைத்திருப்பவரின் செயல் அர்த்தமுள்ளதாக இருக்கும். இருட்டில் கண்மூடி தூங்குபவனுக்கு ஒளியை ஏந்தி இருப்பவர் பைத்தியம் தானே?

நாம் குருவின் அருகில் இருந்தால் சடங்குகளோ,ஆன்மீக பயிற்சிகளோ தேவையில்லை. குருவின் இருப்பே அனைத்தையும் செய்யும்.