Monday, February 9, 2009

ஆன்மீக சாதனை


குரு மரண படுக்கையில் இருந்தார்..

அருகில் அவரின் சீடன் கவலை தோய்ந்த முகத்துடன் காணப்பட்டான்.

குரு மெல்ல அவனை அழைத்து, “ சிஷ்யா.. ஏன் கவலைப்படுகிறாய்? உனக்காக நான் எப்பொழும் இருப்பேன். கலக்கம் அடையாதே...”

கலங்கிய கண்களுடன் சிஷ்யன் கூறினான்.. “குருதேவா... நீங்கள் கூறியபடி ஜாபம் தியானம் எல்லாம் செய்து வருகிறேன். ஆனால் ஆன்மீக உயர்நிலை அடையும் காலம் எப்பொழுது என தெரியவில்லை. எதுவரை எனது ஆன்மீக பயிற்சியை தொடர்வது. உங்கள் காலத்திற்கு பிறகு யாரிடம் நான் கேட்பது?”


அணையும் ஜோதி பிரகாசகமாக சுடர்விடும் என்பதை போல ஜோதிர்மயமான முகத்துடன் சிஷ்யனை பார்த்தார் குரு.. “கவலை கொள்ளாதே. இந்த கட்டிலுக்கு அடியில் ஓர் பெட்டி இருக்கிறது. அதன் உள்ளே உனக்கு பிற்காலத்தில் உபதேசிக்க வேண்டியதை வைத்திருக்கிறேன்...அது அனைத்து விஷயங்களையும் போதிக்கும். எனது உபதேசம் தேவைப்படும் பொழுது மட்டும் பெட்டியை திறந்து பார். எனது ஆசிகள்”...என கூறியபடி அவரின் ப்ராணன் உள்ளே அடங்கியது.


நாட்கள் சென்றன...

தனது ஆன்மீக சாதனையில் தனக்கு பலன் கிடைப்பதாக சிஷ்யனுக்கு தெரியவில்லை.. தியானம் , ஜபம் ஆகியவற்றை விட்டுவிடலாமா என எண்ணினான்..

குருவின் உபதேசத்தை கேட்க பெட்டியை திறந்தான்.


சிஷயன் ஞானம் அடைந்தான்..






நாட்கள் சென்றன...

சிஷ்யன் கூறிய கருத்துகளை மக்கள் ஏற்காமல் கலகம் செய்தனர்.

மீண்டும் குருவின் உபதேசத்தை கேட்க பெட்டியை திறந்தான்..

அதற்கு பின் வரும் காலத்தில் மக்கள் கருத்துக்களை ஏற்றுக்கொண்டனர்...





நாட்கள் சென்றன...

தனது இறுதி காலத்தை அடைந்தான்.. தனது சிஷ்யனை கூப்பிட்டு கூறினான்..

“எனது பிரிய சிஷ்யா.. எனது குரு எனக்கு அளித்த உபதேசத்தை உனக்கு அளிக்கிறேன். எனது உபதேசம் தேவையான பொழுது மட்டும் இந்த பெட்டியை திற. எனது உபதேசம் கிட்டும்.”

சிஷ்யனுக்கு சிஷ்யனான பரம சிஷ்யன்.. தனது ஆன்மீக சாதனையில் தோய்வு ஏற்பட்டது. குருவின் உபதேசம் அறிய பெட்டியை திறந்தான்..

அதில் எழுதி இருந்த வாசகம்...

“இன்னொரு முறை முயற்சி செய்”


-----------------------------------------------------------
சிஷ்யனுக்கு மட்டுமல்ல நமக்கும் ஆன்மீக சாதனையில் தோய்வு ஏற்படும் பொழுதும் இந்த உபதேசம் உதவும்..

குரு என்பவர் உபதேசிக்க மட்டுமே முடியும். ஆன்மீக சாதனையை தனி ஒரு மனிதன் செய்து உயர்வடைய வேண்டும்.

எளிமையாக சொல்ல வேண்டுமானால் குரு சமைத்து கொடுக்கலாம், ஏன் ஊட்டிகூட விடலாம். ஆனால் நாம் தான் ஜீரணிக்க வேண்டும்.